Monday, April 25, 2022

கவிதைகள்

 1.

நடைபயிற்சி உரையாடல்.
*
தங்கரளிச் செடிக்கு மட்டும் ஏன்
இப்படி வேர்த்திருக்கெனக் கேட்டாள்.
வியர்வையல்ல பனித்துளி
சற்று நேரத்தில்
சூரியனில் கரைந்திடுமென்றேன்
உரையாடலைக் கேட்டவாறு
வந்துசேர்ந்த மற்றொரு சிறுமி,
வானம் 
இந்த செடிக்கு மட்டும்
இத்தனை முத்தங்கள்
இட்டுள்ளதென்றாள்.

வியந்து வியர்த்துச் சிவந்தது இளவானம்.
*

2.

மழை இப்போதைக்கு
வராதென்றாள்
வானத்திடம் பேசி
வந்த சிறுமி. 

எட்டிப் பார்த்த வானத்தின்
வெய்யில் வர
நிழல் மழை 
பெய்யத்துவங்குகிறது
பூமியெங்கும்.
*
3.
வந்தமரும் கிளியிடம்
கேட்டபடியே இருந்தது
தன் பின்பக்கம் அறிய ஆவல் கொண்ட இலை. 

பின்பக்க உருவே
முன்பக்க நிழலென
சன்னமான காற்றிற்கு
வீழ்ந்தது இலை.

அறிந்து கொண்டது
வேறு இலை.
அது கனியோடு பறந்தது.

Friday, April 22, 2022

நன்றி: வாசகசாலை

 

1.அமைதி
மண்டையுள்
தாள்கள் 
படபடத்துக் கொண்டிருந்தன.

கழிந்த காலம் மட்டுமல்லாது
நிகழ் எதிர் கால
எழுத்துக்களும் இசைத்துக்கொண்டிருந்தன
ஒன்று மற்றொன்றோடு
உராய்வு கொள்ள
பற்றி எரிந்திடுமோ
பயம் 
உடலைக் கவ்வியது.

நீடிக்க விடாதிருக்க
காக்கை இட்ட எச்சம்
எடை கல்லானது.

அங்கொரு
அழகிய நித்திரை 
நிகழக் கண்டீர்கள்.
*
2. பிராயம்

மழை வாங்கியக் குளங்களில்
முட்டைகளாக வந்த
ஆலங் கட்டிகள்
ஓயாத தவளைகளின்
செம்மையாக  ஒலிப்பதை
வியக்கும் சிறுவனொருவன்
காலத்தின் கரையில்
வேடிக்கைப் பார்க்கும் 
மிதவையாக கலங்குகிறான்
வானத்தில்.
3.அழைப்பு

என்றாவது 
ததும்பும் மனதோடு
பேச அழைத்தால்
காலத்தை கச்சிதமாக்கும்
அழைப்பின் ஓசை
நிமிடங்கள் கடந்து
பதற்றம் கவ்விக் கொள்ள
இதைத்தான் என்றில்லாது
நினைவின் உரையாடல்கள் 
தட்டான்களாக வெப்பத்தில்
மிதக்கும் ஸ்மைலிகளாகின்றன.
4. தரிசிப்பு
*
வெட்கம்
கால்களைப் பின்ன
தயக்கத்தோடு சொற்கள்
பெயரைக் கேட்டது
சிரித்தவள் சிரித்தபடியே.

கடிகாரம்
இரண்டு இரவு
மூன்று பகல் கடக்க
மீண்டும் கண்டபோது
சிரிப்பி என்றழைத்தேன்.

அன்றைய நாளில்
கண்டோரெல்லாம் களிப்புடனிருந்தனர்.

5. விநோதங்கள்
*

காலனியுள் காலத்தை சொருகி
கச்சிதமான தோற்றத்தோடு
ஐந்து
ஏழு
ஒன்பது சுற்றுகள்
இன்னும் இன்னுமென
அடிகளின் கணக்கீட்டை
அறிவியல் காட்டிட
நம்பிக்கை பெருக்கெடுத்த ஆற்றில்
மிதந்து கொண்டிருந்தனர்.

இன்னும் எதை எதையெல்லாம்
பார்க்கவேண்டி இருக்குமோ
நடந்து செல்வதை
வாழ்வாக கொண்டவன்.

6. கதையல்ல...
குட் மார்னிங் தொடங்கி
குட் நைட் முடிய
உறவாடி மகிழ்திருப்பாயே
நீர் ஊற்றா தொட்டிச் செடியானதேன்
பொம்மைகள் பழசானதோ
புதியது வாங்கிடலாமா?

தலையாட்டி மறுத்தவள்
என் கைபட தளிர்களாக துளிர்த்திடும்
இருப்பதே போதும்
விளையாட விருப்பம் இல்லை
பொம்மைகள் மீது
வெடிமருந்து நாற்றமப்பா.

தொலைக்காட்சியில்
உக்ரைன் நிலத்தின்
அழிவுக் காட்சிகள்.





Wednesday, April 20, 2022

நன்றி: அம்ருதா

 

1. மன அவசம்.

*

திடும்மென

நடந்துகொண்டிருந்தவனின் முன்

பொற்குவியல்

திசை எட்டும் கண்கள் சுழற்றி

தனதாக்கிக் கொண்டான்

திருடன் திருடன் என்றவாறு

கிளியொன்று பறந்த 

குழப்பத்தில்

மகிழ்வு கணம் புதைந்து

முகிழ்ந்தது

ஒரு வீச்சம்.


2.காத்திருப்பு

*

நழுவிய

கனியின் சுவையை

சொல்வதெப்படி

நடுக்கத்தில் மொழி. 


காத்திருப்பேன்

பயிற்சியோடு

மற்றுமொன்று

நழுவிடும் கணத்திற்கு.


3. இறைஞ்சுதல்


தொங்கியபடி

வீட்டின் மீது

கனிந்திருந்தது மதியம்.


இன்னும் கொஞ்சமென

மின்விசிறியிடம்

இறைஞ்சியபடி சிறுமி. 


எஞ்சிய

கதைகளை கேட்டேன்

தூங்கும்போது என்றபடி

ஓடிப்போனாள்.

Sunday, April 17, 2022

 நன்றி: நுட்பம் இணைய இதழ்



ந. பெரியசாமி கவிதைகள்

1. காட்சி
அந்தரத்தில்
நீண்டிருந்தது கோடு
மேலிருந்து கீழும்
கீழிருந்து மேலுமாக
அலகுகள் பிணைந்திருந்த
பறவைகளைக் கண்ட கணத்தில்
என் அருகாமையிலிருந்த காலி இருக்கையில்
நீ அமர்ந்து சென்ற கண நேரம்
அத்தனை மகத்தானது.

2. மலர்ந்த தேநீர்

இன்னும் கொஞ்ச நேரம்
அமர்ந்திருந்திருக்கலாம்
உரையாடல்
சற்றே நீடித்திருக்கலாம்
நமை ஈர்த்த சிறுமி
விளையாட்டை முடிக்காது இருந்திருக்கலாம்
எல்லாமும்
காரண காரியமற்றே
சடுதியில் முடிந்திடுகிறது
இருப்பினும்
நினைவில் தங்கி வாழ்ந்திருக்க
ஏதாவது நிகழத்தான் செய்கிறது
அன்று மலர்ந்த தேநீருக்கு
ஏன்தான் அத்தனை சுவையோ...



3. சவாரி

உருவாக்கப்பட்டிருந்த
வடிவமைப்பு வனத்துள் அமர்ந்திருந்தனர்
ஊஞ்சலாடிய சிறுமி
சலிப்படைந்து இறங்கி
அவனை அழைத்து
யானை சவாரி வேண்டுமென்றாள்.

தோற்றம் கொண்டான்
முதுகில் அமர்ந்து
சற்று பயணித்தவள் குதித்து
அடங்கொண்டாள்
யானை லத்தியை பார்க்கவேண்டுமென.

கணநேரம் நின்று இயங்கியது வனம்
அவன் காதலியின் வெடித்த
சிரிப்போசைக்கு.