Tuesday, October 4, 2022

வாழ்த்துரை

 S.Anantha Kumar முடிவிலியின் நினைவுச் சங்கிலி தொகுப்பிற்கான என் வாழ்த்துரை....


பட்டாம்பூச்சி கூட்டுப்புழுவான கதை 

*


ஐநூறு, ஆயிரம் என எதேனும் முக்கிய நாளை சாக்கிட்டு மரங்களை நடுவார்கள். அதில் எத்தனை பிழைத்து வந்தது என்பது குறித்த அக்கறையோ, கணக்கீடோ ஏதும் இருக்காது. அன்றைய கொண்டாட்டத்திற்கான மையம் என்றளவிலே நின்றுபோய் விடுகிறது. மரங்களை வளர்த்தெடுக்க பற்றும், பரிவும், காத்திருப்பும் தேவை. இங்கு எதுவும் எளிதல்ல. கவிதைச் செயல்பாடும் அப்படியான ஒன்றே.


கவிதைகளில் வகைமைகள் பல உண்டு. நம் தேர்வுகொள்ளும் தன்மையும், வாசிப்பின் தீவிரமுமே நம்மிலிருந்து வெளிப்படும் படைப்புகளில் காணக்கூடும். இதைத்தான் எழுதவேண்டும், இப்படித்தான் எழுத வேண்டும் என்கிற கட்டளைகள் கிடையாது. நாம் எதையும் எழுதலாம். நாம் எங்கு நிற்கிறோம் என்பதை வாசிப்பில்தான் கண்டடைந்து, நம்மின் நகர்வை திட்டமிடலாம்.


ஆனந்தகுமார் ' முடிவிலியின் நினைவு சங்கிலி' தொகுப்பில் வீட்டிற்குள்ளும், வெளியிலும் தன்னை பாதித்த விசயங்களை கவிதையாக்கியுள்ளார். அம்மா, அப்பா, அக்கா, அண்ணி என உறவுகள் குறித்த கவிதைகள் அவருக்கான அனுபவம் என சுருங்கிப்போய்விடாது, வாசிப்பவர்களும் தங்களின் உறவோடு பொருத்திப் பார்த்துக்கொள்ள ஏதுவாக கவிதைகள் இருப்பது சிறப்பு. பெரும்பாலானவர்களின் கவிதைகளில் அப்பாவைவிட அம்மாக்களுக்கான இடம் நிறைய்யவே இருப்பது இயல்பு. ஆனந்தகுமாரும் அம்மாவின் இருப்பை கவிதைகளில் பத்திரப்படுத்தியுள்ளார். 


கூட்டுப்புழு எப்படி பட்டாம்பூச்சியாகிறதென்று தங்கைக்கு அம்மா பாடம் எடுக்கையில், பட்டாம்பூச்சி கூட்டுப்புழுவான கதை எனக்குத் தெரியுமெனக் கூறும் " கூட்டுப் புழுக்கள்," கவிதை அம்மாவின் மீது மட்டுமல்ல, பெண்களின் மீதான நேசிப்பையும், அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளார்.


கொரானா காலத் துயர், சாலை விரிவாக்கத்தில் கிராமங்கள் அடையாளங்களை இழத்தல், தொலைத்த கொலுசில் காதலை இசைத்தல், கையில் பம்பரத்தோடு  விடுப்பை எதிர்நோக்கும் மதுக்கூடத்தில் வேலை பார்க்கும் சிறுவனின் எதிர்பார்ப்பு என  துயர்களை காட்சிபடுத்துகின்றன கவிதைகள்.


' குறிஞ்சி' கவிதையில் நம்மால் அழிவுக்குட்பட்ட இயற்கையை காட்சிபடுத்தல், செயலிகளின் வலையுள் சிக்குண்ட வாழ்வு, நிலம் நம் வாழ்வில் உருவாக்கும் பாதிப்பு, "எப்போ  எடுப்பார்கள்" எனும் வார்த்தைகளுக்குள் வாழ்ந்து மடியும் மனித இருப்பு, கோயில் யானையை, யானை என ஒப்புக்கொள்ள மறுக்கும் சிறுமி, தாத்தா இழந்த மாம்பழக் கதை என கவிதைகள் லகுவான பயணிப்பை தருகின்றன.


'குழந்தைகள்' தலைப்பிட்ட கவிதைகளில் வெளிப்பட்டிருக்கும் சித்திரம் ஆனந்தகுமாரின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள். 


Saturday, August 27, 2022

நன்றி: தமிழ்வெளி

 

வலியின் நரம்புகளால் பின்னப்பட்ட இலைக்கூடு
- ந.பெரியசாமி


திருஷ்டி பொம்மையுள் உருவமாக காட்சி தரும் வைக்கோல், நெல்மணிகளை தலையில் அடுக்கி நின்றபோது, நிலம் காயாது நீர் பாய்ச்சி களித்திருக்கச் செய்த காலத்தின் நினைவையும் தாங்கி நிற்கும். காலம் எதிர்வுகளை உடனுக்குடன் காட்சிபடுத்தி விடுகிறது. பிறப்பு×இறப்பு, வாழ்வு× அ வாழ்வு அனைத்துமே எதிர் எதிர் நிலையில் இல்லாமல் ஒன்றின் உள்ளீடாக மற்றொன்று என அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வடுக்குகளின் தன்மையை வசீகரத்தோடு பிரதிபலிப்பது கவிதைகளாக உள்ளன. கவிதைகள் என்றென்றும் புதிர்வும் புதிர்வின்மையுமான சுழல். இச்சுழலுள் லாவகமாக கடந்து வருதல் நம் வாசிப்பின் விநோதம். நிலாகண்ணனின் " பியானோவின் நறும்புகை" தொகுப்பிலும் சில விநோதங்களை கண்டடையலாம்.

மூப்பின் காரணமாக இயங்க முடியாவிட்டாலும், நகர்ந்து நகர்ந்து தன்னைச் சுற்றி பெருக்கி சுத்தம் செய்து நான் ஓய்ந்துவிடவில்லை எனக் கூறிக்கொண்டே இருக்கும் திண்ணை பாட்டிகள்  நினைவில் இருப்பதைப் போன்று " வாழ்வென்பது கண்ணீரில் துளிர்க்கும் தாவரம்" , "பாகற்கொடியில் துளிர்த்திருக்கும் இளங்கசப்பு" என நாணயங்களாக்கி உண்டியலில் சேர்த்து வைக்கும் சொற்களை நிலாகண்ணன் தொகுப்பில் நிறைய்ய கொடுத்துள்ளார். 

பருந்தாகிப் பார்க்க ஆஸ்பெஸ்ட்டால் கூரை "தத்தளித்து மூழ்குபவைகளால் எழுப்பப்படும் தவிப்பின் அலை" என்பதை வாசிக்கையில் பிரமிளின் ' வண்ணத்துப் பூச்சியும் கடலும்' கவிதையில் வரும் 
"நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ " நினைவிற்கு வருவது மகத்தானது நிலாகண்ணன்.

தேவ மலர்சூடிய புல்லாங்குழல் பித்தன் காற்றை கட்டி இசையை பிறப்பிக்கும் வித்தை கற்றவன். அதை புனிதம் என போற்றிக்கொண்டிருக்காமல் முதுகு சொறிய, நாய் விரட்ட என பயன்பாடுகளை கற்றவன். மாயப்பறவைகளை ஒத்த கண்களோடு இருப்பவனை உறங்க வைப்பவனுக்கு இருக்கவேண்டிய யோக்கிதையை கூறும் நிலாகண்ணனின் " பியானோவின் நறும்புகை" தொகுப்பு வலியின் நரம்புகளால் பின்னப்பட்ட இலைக்கூடு.

வழியப்போய் வலி கொள்ளல் ஆகாது. அது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டது. எக்கணத்திலும் துளிர்த்து வதைக்கக் கூடியது. புல்லாங்குழல், கிட்டார், பியானோ, ட்ரம்ஸ், வயலின் இசையை தொகுப்பில் மொழியோடு தந்து வலியையும், ஆற்றுப்படுத்தலையும் செய்ய முயற்சி செய்துள்ளார். இசை காற்றில் உருவம் கொண்டு நம்மை தழுவி துயர் நீக்கும் தேவதை. அதை நன்கு கண்டுணர்ந்ததால் நிலாகண்ணன் மொழியை குழைத்து அதன் தீவிரத்தை காட்டியுள்ளார்.

போர்க் காட்சிகளை திரையில் கண்டால்கூட சட்டென பதற்றம் கொள்வோம்.. அழிவை எதிர்கொள்ள நடுங்கும் தகவமைப்பு கொண்ட உடலைக் கொண்டவர்களே நாம். விபரம் தெரிந்த நாள் தொடங்கி தனி நிலத்திற்கான உரிமைப்போர் நம் வயதோடு வளர்ந்தபடியே இருந்தது. முள்ளிவாய்க்கால் அழிவின் சித்திரம் என்றும் மனம் விட்டு அகலாது. நிலத்தைத் தோண்ட நீர் வரும்முன் இரத்தத்தின் வீச்சம் வரும் சகோதர பூமியை  நிலாகண்ணன் இப்படியாக காட்சிபடுத்துகிறார்.

கண்ணைக் கட்டினாலும் ஈழம் தெரிகிறது
உம்மிடம் வேறு துணியோ
துப்பாக்கியோ இல்லையா?
*
சமரில் பிள்ளையிழந்த
அண்ணைக்கெல்லாம் முகத்தோடு சேர்த்து
மூன்று முலைகள்
ஆயுத எழுத்தைப் போல...

" எல்லா நகரங்களிலும் பொம்மைகள் உடைக்கப்படும் சப்தங்கள் கேட்டது. நகரங்களின் மீது பறந்து சென்ற பொம்மைகள் வெடித்துச் சிதறியது" கோணங்கியின் 'பொம்மைகள் உடைபடும் நகரம்' கதையில் வரும் வரிகள் நினைவில் தங்கிவிட்டதைப் போன்று, குழந்தைகள் வெடித்துச் சிதறிய தேசத்தின் துயர் நம்மைவிட்டு என்றைக்கும் விலகாது.
'குருதியில் நனைந்த நிலம்' கவிதை மீண்டும் சித்ரவதையுள்  உழன்றிருக்கச் செய்தது.

விழும் விதைகளை விளைவித்து, தன் ஆளுமையின் வரப்புக்குள் வளர்த்தெடுக்கும் நிலத்தை ஒத்தவர்கள் அம்மாக்கள். நிலாகண்ணன் தன் கவிதைகளில் அம்மாவிற்கான இடத்தை எளிதில் கடந்துபோய் விடாதிருக்க கினறுகளாக வெட்டிவைத்துள்ளார். அவரின் சொற்கள் வற்றிவிடாது ஊற்றுகளை சுரந்தபடியே இருக்கிறது. தூர்ந்துபோகாத ஊற்றாக இருப்பதால் உழைப்பின் கோடுகளை உடலில் ரேகைகளாக சுமந்தபடி இருக்கும் அம்மாக்களின் நினைவில் வாழ்ந்துபோக முடிகிறது.

தன் விரல்களால் தாய்
பைத்தியத்தின் அகரமெழுதிப் பழகுகிறாள்.
*
கன்னி மரியாவைப் போல அவளுடைய
கண்களின் ஆழத்தில் எப்போதும்
இரக்கத்தின் சொல் இருக்கும்
அவள் ஒரு வயலினிஸ்ட்...
*
எல்லோரும் உறங்கிய பிறகு
அம்மையின் கண்ணீர்
மாணிக்கத்தைப் போல ஒளிரும்
அந்த ஒளியின் துணை கொண்டே
அப்பா தள்ளாடி வந்து
அம்மாவின் அருகில் உறங்குவார்.
*
பொன்வண்டு 
தீப்பெட்டிக்குள் இருப்பதைப் போலத்தான்
அம்மா வீட்டிற்குள்ளிருக்கிறாள்.
*
விறகு வெட்டச் சென்ற அம்மா
நீலம் பாய்ய்த உடலாகி வந்த பாதையில் 
இறைந்து கிடக்கும் நமக்கான நாவல் பழங்கள்
*
புரண்டு படுத்தால் பூக்கள் சரியுமென்று
அம்மா அசைவின்றி கிடக்கிறாள் கல்லறைக்குள்.
*
ஈ மொய்க்க முடியாத உயரத்தில்
' வெள்ளி' யாக அம்மா முளைத்திருந்தது.

என்றைக்குமாக நம்முள் சுடராக இருந்து கொண்டே இருக்கும் அம்மாவைப் போன்று நிலாகண்ணனின் சில சொற்களும் உடன் இருந்துகொள்ளும்.

பச்சை நுங்குகளென
பருவம் துருத்த ஒட்ட மடை வயலுக்கு
எருக்கொட்டப் போகிறாய்...
மாடுகளை ஓட்டிக்கொண்டு
நானும் பின் தொடர்கிறேன்...
ஊரறியாமல் நம் காதல் வளர்க்கவே
நம் கால்நடைகள் சாணமிடுகின்றன.
*
காதலுக்காக ஏராளமான சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதில் அழகுணர்ச்சி, மேட்டிமைத்தனம், உயரிய ஒப்பீடு, சாகசம் என வாசனை திரவியங்கள் பூசப்பட்டு மயங்கிக் கிடக்கச் செய்யும் சொல்லாடல்கள் நிறைந்த மாயக் கோளத்தின் உச்சியில் சாணி உருண்டையை வைத்து இதுவும் காதல்தான் என்கிறார்.

இரவின் நதியிலே
மஞ்சள் நிறக் கோழிக் குஞ்சைப் போல
வெளிச்சம் ஓடுகிறது அதன் மூலத்திற்கு.
*
வெளிச்சம் முலைகளுக்குள் நுழைந்து நுழைந்து வந்தது
இந்த வெளிச்சம் தாய்ப்பாலின் வெளிச்சம்
ஒளியின் நீட்சி நாம்.
*
மேகங்களுக்குள் மறைகிறது புகை வண்டி
நிலா அதன் கடைசி பெட்டி
*
பூனையின் சிறுநீர்தான் இரவினில் ஒளிர்கிறது.
*
அம்மாவின் வயிற்றைப் போல
வெளிச்சமாக இருக்கும் வெய்யிலை
கன்னம் குளிரக் குளிர தழுவிக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றின் மீதும் எல்லையற்ற மயக்கமுண்டு. மகரந்தங்கள் நிறைந்த காமத்தின் தேன் சொட்டும் இரவின் மயக்கத்தை கொண்டாடும் நம் மனம், மலர்ச்சியை தந்தபடி இருக்கும் வெளிச்சத்தையும் தழுவத் துடிக்கும். தொகுப்பில் நிலாகண்ணன் இருளில் அலைவுறும் வெளிச்சத்தை  மொழியின் பூனையாக்கி தந்து மடியில் கிடத்தி தடவச் செய்திடுகிறார்.

உனக்கென்னப்பா ராஜாபோல் வாழ்க்கை என ஒருவரின் தொழில் அல்லது வாழ்வு சார்ந்து கற்பிதங்களின் அடிப்படையில் மதிப்பீடுகளை கக்குவது எத்தகைய அற்பமானது என்பதை உணர்த்துவதாக உள்ளன. ட்ரம்ஸ் ஒலி, TN68M6561, பட்டினிச் சித்திரம், ஜீரோ பாத்துக்க சார் கவிதைகள்.

பழுது நிலையத்தில் 
நிறுத்திவிட்டு திரும்புகிறேன்
உனக்கென்ன ஒரு 
புத்த சிலை போல் நிற்கிறாய்.
*
வாங்கியவனின் இழுப்புக்கு
வளர்த்தவனைப் பார்த்துக் கொண்டே செல்லும்
வளர்ப்பு மிருகத்தின் துயருருவம்.
*
டீசல் விலையறியாத ஒரு சாவு கிராக்கி
கிலோ மீட்டர் ஆறு ருபாய்க்கு வருகிறாயா
என்றழைக்கிறான்
*
இந்த நள்ளிரவு முதல்
டீசலுக்காக நீங்கள் குறைத்த
ஆறு காசுகளில் அரை டஜன் ஆப்பிளும்
நான்கு ரொட்டியும்
வாங்க முடியுமெனில்
பதிமூன்று வேகத்தடைகளுக்கப்பால்
பட்டினிச் சித்திரங்களாய் படுத்துறங்கும்
என் குழந்தைகளின்
காத்திருந்த வயிற்றில்
முத்தமிட்டு எழுப்புவேன் நான்.
*
புல்லட் வண்டியின் மீதான காதல், எதிர்பாராது பழுதடையும் வாகனம், நேசித்து உறவாடிக் கிடந்த வண்டியை விற்பதன் துயரம், அற்பர்களுடம் சிக்கிக்கொள்ள நேரிடும் பாடு, சொந்த வீட்டு கனவு, துரோகங்களை மட்டுமே பரிசாக தந்தபடி இருக்கும் அரசின் கீழ்மை, அதனால் எருக்கொள்ளும் வலி என நாம் நமக்கான வாழ்விலிருக்கும் சிக்கலையும் பொருத்திப் பார்த்து ஆறுதல் கொள்ளச் செய்திடுகிறார். நிலாகண்ணன் ஓட்டுனர் என்பதால் அத்தொழில் சார்ந்த துயர்களை மட்டுமே கவிதையாக்கியுள்ளார். அத் தொழிலில் இருக்கும் லயிப்புகளையும், வசீகரத்தையும் கவிதையாக்கி இருக்கலாம்.

இரவு ஷிப்ட்டில் வேலை பார்க்கும்போது தூக்கம் இழக்கும் துயரத்தை மீறி வானம் காட்டும் பேரெழில் சித்திரங்கள் தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு கிடைக்காதுதானே. அந்த மகிழ்ச்சியே அயற்ச்சியைப் போக்கும். நிலாகண்ணனுக்கும் அவர் தொழிலில் இருக்கும் நாம் கண்டுணரா சித்திரங்களை மொழிப்படுத்துவார் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன கவிதைகள்.

நிறைவு கொள்ளாத வீட்டின்முன் அமர்ந்திருந்தவரின் முகம் கேட்கும் காதுகள் கிடைக்காதாவென எதிர்பார்ப்பில் தவிப்போடு இருப்பதாகப் பட, என்னாச்சு வேலை அப்படியே நிற்கிறதெனக் கேட்க, இல்லீங்க சார் சின்ன சின்ன வேலைகள் உள்ளே நடந்துகிட்டுத்தான் இருக்கு. ஓனருக்கு பணத் தட்டுப்பாடு போல, சீக்கிரம் முடிச்சிட்டு ஊர்பக்கம் போகனும் சார், ரொம்ப நாளாகிடுச்சி, வயல்மீது பாதம் பட்டு எனக் கூறியவரின் கண்களில் துளிர்ப்புகள் ஒளிவீசின. விவசாயிகளின் அகம் நிலம்தான். புறம் நிகழ்த்தும் கார்ப்ரேட் போக்குகளை எதிர்கொள்ள இயலாது இப்படி ஏதேனும் வேலைக்கு வந்து தங்கள் நிலத்தை கருவாக்கி வயிற்றில் சுமந்தே திரிகிறார்கள்.  யாரேனும் அவர்களோடு உரையாட கருவை கண்ணில் பார்த்த திருப்தி அடையக்கூடும் என்பதை சுட்டுவதாக உள்ளது இக்கவிதை.

மொட்டப்பனையில் 
பிடித்த கிளியோடு
கொஞ்சம் விதை நெல்லோடும்
ஊரைவிட்டு ஓடி வந்த விவசாயி
மெரினா கடற்கரையில்தான்
ஜோசியம் பார்க்கிறார்
அவரை நீங்கள்
சந்திக்க நேர்ந்தால்
பரிவோடு நலம் விசாரியுங்கள்
ஏனெனில் அவரின்
நெல்மணிகளைத் தின்ற
கிளிகள் நாம்.

அரசியலற்ற வாழ்வென்பது சாத்தியமற்ற ஒன்றானது. திட்டமிடுதல் ஏதும் தேவையில்லை. இயல்பாகவே நம்மிலிருந்து வெளிப்படும் கோபமோ, துயரோ அரசியலால்தான் நிகழ்த்தப்பட்டிருக்கும். அப்போதைக்கு நம் மறுப்பை சொல்லமுடியாவிட்டாலும், திடமாய் மொழியில் வெளிப்பட்டுவிடும். அற்புதம்மாவிற்காகவும், சிறுமி ஆஸிஃபாவிற்காகவும் நம்முள் இருந்த துயரத்தை கவிதையில் காட்சிபடுத்தப்பட்டிருப்பதை காணலாம்.
நீதிமன்ற புங்கைநிழல் உன் நரையில் கவிழ்ந்து
மடியில் நிறைகின்றது
இம்முறையும் கண்ணாடி உயர்த்தி
அழுது தீர்த்தவளாய்
கண்களைத் துடைத்த வண்ணம் வெளியேறுகிறாய்
உனது சேலையில் இருக்கின்ற
கண்ணீரின் ஈரமோ
புங்கை நிழல் கொஞ்சம் மரம் விட்டு இறங்கி
உன் மடியை பற்றிக்கொண்டு அற்புதம்மா
உன்னோடு போவதாய் தெரிகிறது
நிழலைப்போல இல்லைதானே ஏழைகளுக்கான நீதி.
*
எனது ஆஸிஃபாவிற்கு எப்படியுரைப்பன்
எட்டாம்நாள் கடவுளும் கற்பழித்தானென.
இன்று உனது தந்தையின் கண்ணீராய் இருப்பது
நாளை மற்றொரு தந்தையின் கண்ணீராகிறது. 

மீன், மண்புழு, புல்லாங்குழல்,சுடர்,பறவையென உருமாற்றம் கொள்வேன். எனக்குத் தேவை எல்லாம் அன்பின் பொருட்டாக இருக்கவேண்டும் எனக்கூறும் நிலாகண்ணன் தொகுப்பிலும் அன்பின் மிகுதியால் கவிதைகளுக்கு கூடுதல் பாரத்தை சுமக்கச் செய்திடுகிறார். எடிட் செய்திருந்தால் தொகுப்பு கச்சிதத்தன்மையோடு இருந்திருக்கும். ' பியானோவின் நறும்புகை' அகத்தில் வலியை உருவாக்கினாலும் புறத்தில்  மயிலிறகாகி நம்மை தேற்றவும் செய்கின்றன.
*

பியானோவின் நறும்புகை
படைப்பு பதிப்பகம்

Wednesday, July 20, 2022

வாதி எனும் வாழ்வியல் வாதை

 

என்றேனும்  ஒருநாள் சமதர்மம் பூக்கும் எனும் நம்பிக்கையோடு ஒரு பிரதேச மக்களின் வாழ்வியல் வாதையை, அந்நிலத்தின் பூர்வ கதையை நமக்கு சொல்லிச் செல்கிறது நாராயணி கண்ணகியின் 'வாதி' நாவல்.


தன்னைவிட புத்திசாலியாக இருப்பவனைக் கண்டால் அதிகாரத்திற்கு பிடிக்காது. மந்தைத் தன்மையோடு என்றும் கேள்வி கேட்காது, தங்களை மட்டுமே நம்பி வாழும் தலைமுறைகளை உருவாக்கியபடியே இருக்கும். உயிர் மற்றும் வாழ்வியல் பயத்தால் நமக்கேன் வம்பு என வாழப் பழகிக் கொள்ளும் மக்களில் இருந்து ரோசத்தோடு அதிகாரத்திற்கு எதிராக ரோசப்பட வைப்பவர்கள் நக்சலைட், கம்யூனிஸ்ட், தீவிரவாதி என முத்திரையிட்டு அவர்களின் வாழ்வை அழிப்பதில் அதிகாரம் எப்பொழுதும் தீவிரத்தன்மையோடு இயங்கும். வாழ்வெனும் நீரோடையில் சருகு வீழ்ந்த அலைவுகளைக்கூட பொருத்துக்கொள்ளாத ஆண்டைகள், ஜமீன்கள், பண்ணையார்கள் எதையும் செய்பவர்கள் என்பதற்கு சாட்சியாக வாதி நிற்கும்.


'ஊறுகாய்க்காக மாங்காயை பத்து போடுவது போல் உதடுகளை பனி கீத்துபோடும். ஜனங்கள் ஆண்டைகளுக்கு நடுங்குவதைப்போல் பனிக்கு நடுங்கியாக வேண்டும்' என்பதிலிருந்து ஏலகிரி, ஜோலார்பேட்டை பகுதியின் சூழலையும், வாழ்ந்த மக்களின் நிலையையும் அறிந்து கொள்ள முடிகிறது.


உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தாளத்துக்கோ இருபக்கமும் இடி எனும் சொல்லாடல் உண்டு. இங்கு காலமற்று திசையற்று பேதமற்று எங்கும் எப்பொழுதும் வாதைக்குட்படுபவர்கள் பெண்களே. நாம் சொல்லிக்கொள்ளும் வளர்ந்த சமூகத்தின் நிலையே தொடர் துயரமாக இருக்கையில், ஜமீன்தாரர் காலத்தில் சொல்லவா வேண்டும். அவரின் கண் பட்டோர் கலங்கப்பட்டே தீர்வர். ஊரில் யார் வீட்டிலாவது பெரிய மனுஷியான தகவல் வந்தால் ஜமீன் வீட்டிலிருந்து சீர் தட்டு வந்திடும். அப்பெண் பங்களாவிற்குள் சென்ற ஆகவேண்டிய கட்டாயம்  குறித்து நாவலில் வாசிக்கும்போது நம்மையும் மீறி கண்களில் நீர் துளிர்க்கும். 


ஊருக்குள் பாடம் நடத்த வரும் டீச்சரின் நிலையோ பெரும் துயர். பால் மறக்கடிக்க வேப்பிலை பூசிய மார்புக்கண்ணைக் கூட விட்டுவிட மனம் இல்லாது கழுவி வரச்செய்து  கட்டாயக் கலவிகொள்ளுதல் தொடர்கதை. ஒருநாளும் மனம் விரும்பி போகாதிருப்பதே எதிர்ப்பு உணர்வாக பார்க்க வேண்டியிருக்கிறது.


ஊராரின் கண்களில் தேவதையாக மிதக்கும் தனத்தை ஜமீன்தார் விட்டுவிடுவாரா என்ன? இயலாமையும், எதிர்கொள்ள இயலாத சூழலுமே தனத்தை அவரோடு இணங்கி இருக்கச் செய்திடுகிறது. ஐந்துமாத கர்ப்பிணியாக இருந்தபோதும் பிறந்தால் என் ஜாடையோடு குழந்தை இருக்குமென கலைத்திட கட்டாயப்படுத்த, தனத்தின் இழப்பு நம்மையும் கலங்கச் செய்திடுகிறது. 


"நாக்கு வறண்டு போயி தாகம் எடுத்தாலும், யார்கிட்டயும் தண்ணி கேக்கறதில்ல. புழக்கட தண்ணிய கொண்டாந்து கொட்டாங்கச்சில ஊத்தி தர்றாங்க" ஆதி தொட்டு வளர்ந்தபடியே இருந்துகொண்டுதான் இருக்கிறது சாதி வேர். அது எங்கும் இற்றுப்போய்விடவில்லை. காலமாற்றத்திற்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டு நீண்டபடியேதான் இருக்கிறது. சாதி எனும் கீழ்மையோடு இருப்பவர்களுக்காகவும் சேர்த்தேதான் இயக்கம் கட்ட வேண்டியிருக்கிறது. அடிக்கடி கட்சி வகுப்புக்காக கூடுதல், பெண் தோழர்களின் பங்கெடுப்பில் உருக்கொள்ளும் சிக்கல்களை பேசுதல், பங்கெடுக்கும் தோழர்களிடையே இருக்கும் கருத்து முரண்பாடுகளை விவாதத்திற்கு உட்படுத்துதல், ஜமீனை அழித்தொழிக்க பயிற்சி எடுத்தல், அவ்வப்போது நிகழும் போலிஸ், மக்களுக்கான பிரச்சினைகளை முன்னின்று தீர்த்துவைத்தல் என கதை நிகழ்ந்த காலத்தின் கம்யூனிஸ்டுகளின் நிலையை நாவலில் விரிவாகவே பதிவு செய்து உள்ளார். வகுப்பெடுக்கும் தோழரின் ஆளுமைக்கேற்ப அப்பகுதியின் செயல்பாடு இருக்கும் என்பதை உணர முடிகிறது.


"பயத்திலேயே ஒங்கள வெச்சினு இருக்கறான். பயம் போவணும், உங்க எல்லோருக்கும் என்னிக்கு பயம் போவுதோ, அன்னிக்கு ஜமீன் போயிரும்" என்று நாவலில் வரும் வக்கில் கிருஷ்ணனின் குரல் அன்றைக்கானது மட்டுமல்ல, இன்றைக்கானதாகவும் இருக்கத்தானே செய்கிறது. பயம் வெவ்வேறு வகைமையாக நம்மை வந்தடைகிறது. நம் பயமே பிறரின் மூலதனமாக மாறுகிறது. மருத்துவத்துறை, கல்வி, அரசு என எல்லா துறைகளும் மக்களின் பயத்தால்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஜமீன்கள் போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு மக்களை பயத்தில் வைத்திருந்தனர். அதற்காக ஜமீன்களால் போடப்பட்ட எலும்புத்துண்டு உயர்ரக மதுவும், நடிகைகளின் நிர்வாண நடனமும். இதற்காகத்தான் தவறெனத் தெரிந்தும் இயக்கத்தில் இருந்தவர்களை அழித்தொழப்பு செய்துள்ளதை வலியோடு வாதியில் பதிவு செய்துள்ளார்.


ஒருவன் ஒன்பது பேரை அடிப்பதையே நாயகன் என சித்தரித்த சினிமாவை நம்பியவர்கள் நம் தலைமுறையினர். ஆனால் தாங்கள் வாழும் ஊரின் மக்களின் நலம் பொருட்டு வாழ்ந்த, வாழும் நாயகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், வாதி நாவலில் வரும் நடராஜண் அசாத்தியங்கள் நிறைந்த நாயகன்.  கரணம் தப்பினால் மரணம் என்பதையும் பொருட்படுத்தாமல் ஓடும் கூட்ஸ் ரயிலில் ஏறி உள்ளிருக்கும் மூட்டைகளை தள்ளிவிட்டு அதிலிருக்கும் தானியங்களை மக்களுக்கு பகிர்ந்தளித்து பசியடங்குய  முகம் கண்டு மகிழக் கூடியவன். போலிஸ்காரர்கள் சிறைபிடித்து செல்லும்போது கூட இனி இந்த மக்கள் பசிக்கு என்ன செய்வார்கள் எனும் யோசனையில் சென்ற நடராஜண்ணனை மரணிக்கச் செய்தாலும் ஆவ்வூராரின் மனதில் பிறந்து மனதில் இறந்தவனை நம்முள் பிறக்கச் செய்திடுகிறது நாவல். 


"ஜமீன்தார் எங்கள சாட்டையில அடிச்சான். கன்னத்துல அடிச்சான்... வெறகுல குத்துனான், தாங்கிட்டோம். மதக தொறந்து ஒரே ராவுல ஏரித் தண்ணிய வடிச்சான்.  பொழுது வெடிஞ்சி ஏரிக்குப் போனா மீனுங்க மொத்தமும் செத்து கெடக்குது. மீனுங்கள தூண்டி முள்ளுல புடிச்சா தொண்ட வலிக்குமென வல போட்டுத்தான் புடிப்போம். வலிக்கு துடிக்கக் கூடாது. மீனுங்க எப்புடி துடிச்சியிருக்கும், அவனும் ஒரு நாளைக்குத் துடிதுடிக்கணும்" என அவ்வூர் மக்களுக்கு கோபம் இருந்துகொண்டுதான் இருந்தது.


இயக்கத்தில் இருந்தவர்களுக்கு வேறு வழியற்று ஜமீனை அழிக்க டீச்சர்வீட்டையே தேர்வு கொள்ள வேண்டியதாகிவிட்டது. ஜமீன்தார் அழிந்தாலும், அவர்களுக்குள் காலரணமாக தங்கிப்போனது டீச்சரும் குழந்தையும் அழிந்தது. கதை உண்மையாக இருந்தபோதும் நாவலில் நாராயணி கண்ணகி டீச்சரையும், குழந்தையையும் காப்பாத்தி இருக்கலாமெவென மனம் ஆசைகொண்டது. நடந்து முடிந்தவைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கு.


நாம் பிறந்த அல்லது வாழும் ஊருக்கென்று எதாகினும் வாய்வழி வரலாறுஇருந்தால் நாம் அதை ஏதாகினும் கலை வடிவத்திற்கு கொண்டு வருவதே அறச் செயலாகும். திருப்பத்தூர் மாவட்டத்திலிருக்கும் ஜோலார்பேட்டை நிகழ்ந்த சம்பவங்களை நாரயணி கண்ணகி வாதி நாவலில் வரலாறாக்கியுள்ளார்.

Wednesday, July 13, 2022

நன்றி: கனலி

 

அன்பின் ஒளிர்தல்கள்...

ந.பெரியசாமி

கவிதைகள் தேங்கிக் கிடக்கும் நீர் அல்ல. வழிந்து ஓடிக்கொண்டிருக்கும் நதி. தன்னை புதுப்பித்துக் கொண்டே ஓடும் நிலத்தையும், அதன் விளைவிப்பையும் செழிப்போடு வைத்திருக்கும் தன்மை கொண்டது. நிகழ்ந்து கொண்டிருக்கும் புதுப்புது முயற்சிகள் மொழியை மங்கவிடாது புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன.  அதற்கான சாட்சியங்களாக தொகுப்புகள் வந்தபடியே. அப்படியானதொரு தொகுப்பாக வந்துள்ளது  சால்ட் பதிப்பகத்தில் கண்டராதித்தனின் ' பாடி கூடாரம்'.

 சுய கர்வத்தை இழந்து பெறப்படும் சௌகர்யங்கள் அற்பத்தனமானதென வாழும் மனிதர்கள் 'மனம்' கவிதையில். 

........

அற்பனாக

இருந்தாலும்

அருவருப்பு

இல்லாமலா போகும். 

இப்படியாக முடிவுறும் 'சகிப்பு' கவிதை  உணர்வுமிக்க மனங்களின் வெளிப்பாடு.

 

மனித மனம் விசித்திரமானது. எதையும் ஆசைகொள்ளும். எப்படிப்பட்டதையும் தூக்கி எறியும். நம்மை நாமே நொந்துகொள்ளும் அளவிற்கு கிழானவர்கள் நம்மோடு இருக்கக் கூடும். மதுக்கூட சம்பாஷணையை காட்சிபடுத்தும் ' டோலாக்' கவிதை மாந்தர்கள் நம்முடனும் இருந்துகொண்டிருப்பதை காட்டிக் கொடுத்திடுகிறது.

 

" ஒரு சம்சாரி

அடுத்தவன் மனைவி மீது

ஆசைப்படலாமா

படக்கூடாதுதான்

பட்டால்

படாத இடத்தில் பட்டாலும்

பட்டும் படாமல்

போக வேண்டியதுதான்".

தனித்து உருவாவதில்லை, எல்லாவற்றிலும் இருந்தே உருவாகுகின்றன அழுக்குகள். கழுவியோ, துடைத்தோ புற அழுக்கைப் போக்கிடலாம், தூர் எடுக்க முடியாது மண்டிக் கிடக்கும் மன அழுக்கை மொழி காட்சிபடுத்திவிடுகிறது.

 

 

கூட்டமாகப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளை அரிதாகத்தான் பார்க்கமுடியும். திட்டமிடுவதாலேயே எல்லாமும் கைகூடிவிடுவதில்லை. கவிதைகள் எழுதப்படுவதற்கு முன்னதான மனச் சித்தரிப்புகள் ரசிக்கத்தக்கவை.

 

பொருத்தமற்ற வாழ்வுக்குப் பதிலாக பாடையில் படுத்துக் கொள்ள சொல்லும் அறிவுரை பரஞ்சோதிக்கு மட்டுமல்ல.

 

உடன் வாழும் மனிதர்களின் நாய் பிழைப்பைக் காணச் சகிக்காத வாழ்வின் காட்சி இப்படியாக...

 

“பிறப்பு நாய்பிறப்பு

நாலுபேரைப் பார்த்தால் 

வாலைக் குழைக்காத

கௌரவமென்றால்

நெடு வாழ்க்கையும்

நக்கு தண்ணீர்தான்.”

 

தாய்மைப் பண்பை முழுமையாக உணர்ந்துகொள்ளும் இடம் காடு என்பது மிகையில்லாதது.

“.............

யாருமே இல்லை என்ற நம்பிக்கையில்

மனம்விட்டு அழுதீர்கள்

உங்களைச் சுற்றிலும் இருந்த

மரம் செடி கொடிகள்

வாஞ்சையான தனது கரங்களால்

உங்கள் தலையை கோதிவிடுகிறது

அந்த அன்பினால் ஒளிரும்

காட்டுத்தொகுப்பைப் பார்த்து

பலகாலம் அதிசயத்துக்

கிடந்தன காட்டுவிலங்குகள்.”

 

புறக்கணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறோம் எனத் தவிப்பவர்களின் சரணாலயமாக இருக்கும் 'காப்புக்காடு' கவிதை.

 

எல்லோருக்கும் வாழ்வதற்கான நியதி இருக்கத்தான் செய்கிறது.

 

கண்டதை காட்சிபடுத்தலும், காட்சிபடுத்தப்பட்டதை கண்டதுக்குமான அனுபவச் சித்திரம் வேறானதாக இருக்கும். ' பேக்கரியில் அமர்ந்திருக்கும் பெண்' நம்முள் வேறான காட்சிப்படுத்தலை செய்திடுகிறது.

"...............

சுற்றிலும் கண்ணாடியிலான ஸ்டால்களுக்குள் அவள் அவ்வளவு

அழகோடு அமர்ந்திருக்கிறாள்.

நான் எழுதும்போதும் அப்படித்தானிருந்தாள்

நீங்கள் வாசிக்கும்போது காட்டில்

தவத்தில் இருக்கும் முனிவரின் பத்தினி கச்சையோடு

குடிசையை பராமரிப்பதாகவும்

வாசலைக் கோலமிட்டு அழகாக்குவது போலவும் வாசிக்கிறீர்கள்

மான்கள் பறவைகள்

புல்லினங்களென இக்கவிதையைவிட மேம்பட்டதாயிருக்கிறது

உங்கள் வாசிப்பு.

 

' எளிமையின் காலம்' என்பதற்கான சான்றுகளின் அடுக்குகளில் நாமும் ஒளிந்து கிடக்கின்றோம்.

 

வேதாந்தங்களை பேசிக் கொண்டிராமல் வேலையைப் பார் எனக் கூறிடும் ' பருவதவர்த்தனம்' நாம் யார் என்பதை காட்டிடுகிறது.

 

வள்ளலார் வீதிக்கு வந்தால் நிகழும் மாற்றங்கள் குறித்த சம்பவங்கள் கற்பனையானபோதும் அதிலிருக்கும் உண்மை உரு கொண்டு நிற்கிறது மீண்டும் வள்ளலாராகவே.

 

அரைகுறைகளின் நிறைகுடம் மீதான அபிப்ராயம் அரைகுறையாகவே இருப்பது காலத்தின் நியதி.

 

புறத்திலிருக்கும் வீதியின் காட்சிகள் அகம் நிறைந்த மனையாளின் தலையை வருடச் செய்திடுகிறது.

 

எழுத்தை மையமிட்டு சுழன்றாடிக் கொண்டிருக்கும் வாழ்வின் காட்சியிலிருந்து நாம் தப்பிவிட வேண்டும் என்பதை கற்றறியலாம்.

 

பிராது அறியாது வாழ்பவர்களைக் கண்டு பிராது ஏதுமற்ற அற்புத வாழ்வோடு இருப்பதாக கணிப்பதில் இருக்கும் சூது அற்பர்களுக்கானதை உணர்த்தல்.

 

பவிசு மதிக்கத்தக்கதல்ல. மண்ணுள் புதைக்கப்பட வேண்டியதுதானே.

 

மனித மனம் ஆசைகளை தொடர்ந்து துளிர்க்க வைத்துக்கொண்டிருக்கும் நிலம். குளமாக, குடமாக, நீர் குமிழியாக ஆசைகொண்டு, பின் மீன் கொத்தியாக மாறிவிடத் துடிப்பதில் இருக்கும் ரகசியத்தை காட்சிபடுத்துகிறது 'உடைந்த வாழ்வு' கவிதை.

 

மத்தியானத்தில்

நீர்த் தளும்புகிற

குளத்தின் எதிரில்

நின்று கொண்டிருப்பவனுக்கு

குடத்தில் குளத்தை சேகரிக்கும்

பெண்ணின் மீது ஆவல்

பைய உருண்டு திரண்ட

அந்த ஆவல்

வண்ணத்திரட்சியான

நீர்க்குமிழியின் மீது அமர்கிறது.

ஒரு மீன் கொத்தி அந்த

மத்தியானத்தின் குளத்தில்

தளும்பாத தண்ணீரை

தளும்பும் ஆவலை

ஒரே கொத்தில்

கொத்திச் சென்றது.

 

பெரியதுகள் ஏதும் தேவையில்லை. சின்னஞ்சிறியது போதும். காலம்காலமாக அப்பிக்கிடக்கும் இருளை அகற்ற கிழிசல் வெளிச்சம் போதும். வீதியை பிரகாசிக்கச் செய்து தினந்தோறும் திருவிழாவுக்கான மனதைத் தரும் ஆதிராவின் அம்மாவை நம் தெருவில் குடியமர்த்துதல்.

 

".....

அடி.... ஆதிரா....

 

அம்மாவை வீதிக்கு வரச்சொல்

இவ்வழகை அமுதை

பெருஞ்செல்வத்தை

எங்களுக்கு அளித்தவளை

சீராட்ட வேண்டும்

கொஞ்சம் பூக்களை

தன் பொற்கரங்களால்

எங்கள் மீது தூவட்டும்

நாங்கள் ஆதிராவின் அம்மாவை

காதலிக்கிறோமென்று

உற்சாகமாக ஒருமுறை கூவிக்கொள்கிறோம்."

 

'பாடி கூடாரம்' கவிதையிலோடும் இரத்தினக் கற்கள் பொதிந்த ஆடையணிந்த பெண்ணோடு  நாமும் ஓடிக்கொண்டிருப்பதை காணலாம்.

 

கொஞ்சம் கொஞ்சமாக சேகரமாகும் அவமானத் துளிகளே அனுபவ நதியாவதை வேடிக்கை பார்த்தல்.

 

மூன்று தலைமுறைகளுக்கிடையே இருந்த தனிமையின் தன்மை என்னவாக இருந்திருக்கும் என்பதை அறியத் தருதல்.

 

நோய்த்தொற்றால் உலகம் மயானமாகிக் கொண்டிருந்த காலத்தில், அரசின் கோமாளித் தனங்களையும்,  மக்களின் மீது அழுத்தம்தந்தபடி இருக்கும் துயரையும்  காலாகாலத்திற்குமான பாசுரமாக்கி உலகளந்தபெருமாளை  உள்ளேயே இருக்க வேண்டுவதின் துயரம் இதுகாறும் மக்கள் மட்டுமல்ல தெய்வமும் காணாததற்கு உதுமான் நான் உலகளந்தப்பெருமாள் பேசுகிறேன்'  போன்ற கவிதைகளே வேர்களாக இருக்கும்.

 

பசி

*

அப்பா இல்லாத

வீட்டில் அம்மாவுடன்

வேறொருவர் இருந்ததைக்

கண்ட அக்காளும், தங்கையும்

அதோ அந்த வேம்படியில்

பசியோடு காத்திருக்கிறார்கள்.

அம்மாவும் அவரும்

எப்போது வெளியே வருவார்களென.

 

அவரவர்கள் பசி அவரவர்களுக்கானதுதானே.

 

பகலே எட்டிப் பார்க்காத

பலி கொடுத்தாள் கிணற்றிலிருந்து

நீர் சேந்திக் கழுவுகிறேன்...

எனத் தொடங்கும் கவிதையுள் நல்லதங்காளை மீண்டும் உயிர்ப்பித்து கதை கூறச் செய்தல்.

 

நம்மின் ஆதி வாழ்வு ஆங்காங்கே தங்கி நகர்ந்துகொண்டே இருந்தது. காலப்போக்கில் ஓரிடத்தில் நிலையாக கூடாரமிட்டு சுயநலத்தோடு வாழத் தொடங்கி பெருக்கமடைந்த கூட்டத்தின் கீழ்மைகள், அது உருவாக்கிய சிதைவுகள், அதிலிருந்து மீண்டு வெளியேற ஒளிர்வுகளை கண்டடைதல்கள் என மனக்கூடாரங்களின் சேகரிப்புகளாக இருக்கிறது கண்டராதித்தனின் 'பாடி கூடாரம்'.