Sunday, July 10, 2022

ராமநாயக்கன் ஏரி உயிர்ப்பிக்கும் கருவறை

 ராமநாயக்கன் ஏரி உயிர்ப்பிக்கும் கருவறை


இந்த உலகத்தில் முதன்முதலில் பேசத் தொடங்கியது ஓடையில் ஓடும் நீர்தான். அப்பொழுது தாவரங்கள் கிடையாது. பறவைகள் கிடையாது, விலங்குகள் கிடையாது, மனிதர்களும் கிடையாது. மனிதர்களே இல்லை என்கின்றபோது அவனது மொழிகள் மட்டும் எங்கிருந்திருக்கப்போகின்றன? பேசுவதற்கு ஆள் இல்லாமல் இருந்த நீர்தான் பேச்சுத்துணைக்கு முதலில் தாவரங்களை முளைக்க வைத்ததாம். அத்தாவரங்கள்  தாம் பேசுவதற்காக பூக்களை படைத்ததாம். பூக்கள் தாம் பேச கனிகளைச் சமைத்தது. கனிகள் தாம் பேச பறவைகளை அழைத்தது.  இப்படி வரிசையாக வந்து மனிதர்களில் முடிந்தது. இந்த மனிதர்களுக்கு அப்பொழுதெல்லாம் மற்ற மனிதர்களின் முகம் தான் தெரியும். தன் முகம் எப்படி இருக்குமெனத் தெரியாது. அம்மனிதர்கள்மீது ஓடைநீர் இரக்கப்பட்டு  இந்தா உன் முகத்தைப் பார்த்துக்கொள் என்று தன்னையே கண்ணாடியாக மாற்றி மனிதர்களுக்கு அவர்களை அடையாளம் காட்டியது. அது ஒரு ஓடும் கண்ணாடி. பேசும் கண்ணாடி. அக்கண்ணாடியோடு எல்லா உயிர்களும் இன்னமும் உரையாடிக்கொண்டுதான் இருக்கின்றன. உரையாடலை நிறுத்திய முதல் உயிரி மனிதர்கள்தான். மனிதர்கள் எப்போது தனக்கென்று ஒரு கண்ணாடியைத் தயாரித்துக்கொண்டு இனி எல்லோரும் இதில் முகம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சக மனிதர்களுக்குச் சொன்னார்களோ அப்போதே இந்தக் கண்ணாடியின் மீது கல்லைப்போட்டு உடைக்கவும் செய்துவிட்டார்கள். சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் எழுதிய காடோடி நாவலில் தொல்குடியின் கூற்றில் வரும் நீரே நம் ஆதாரம். இந்நீரை சேமிக்கத்தான்  குளங்கள் வெட்டப்பட்டன. குளங்கள் காலப்போக்கில் ஏரிகள் என்றும் அழைக்கப்பட்டன. நம்  முன்னோர்கள் நீரை சேமிக்க காட்டிய அக்கறையும் ஆர்வமும்தான் நம்மை இவ்வளவு காலம் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. அப்போது வாழ்ந்த மனிதர்கள் தனக்கு மட்டும் என்றில்லாமல் தன் சந்ததியரின் மீதுள்ள காதலால் அவர்களின் நலன்பொருட்டும் வாழ்ந்ததன் விளைவுதான் நாம் இவ்வளவு காலம் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

1991 ல் நான் பிழைப்பிற்காக ஒசூர் வந்தபோது  எப்பொழுதும் மழை, பனி பொழிவு இருந்துகொண்டே இருக்கும். வெய்யில் சுள்ளென அடிப்பதெல்லாம் அரிதாக நிகழும். இச்சூழல் எனக்கு அந்நியமானதாக இருக்க எப்படா இந்த ஊரை விட்டு போவோம் என்ற மனநிலையே இருந்தது. ஆனால் இம்மனநிலை மாற்றம்கொள்ள துவங்கியது. எவரையும் வசீகரிக்கும் தன்மையோடிருந்த ராமநாயக்கன் ஏரியை பார்த்த நாளில். அது கர்ப்பப்பையாக மாறி என்னை தன்னுள் வைத்துக்கொண்டது. கடல்மாதிரி இருக்குடாவென நண்பர்களோடு வியந்த நாட்கள் இன்னமும் மனதுள். அதிகாலை, மதியம், மாலை, நள்ளிரவென எல்லா நேரங்களிலும் ஏரியில் அமர்ந்து ரசித்திருந்த நாட்கள் ஓவியங்களாக   நினைவிலிருக்கிறது. அதுவும் மழையின்போது ஏரியை பார்த்திருத்தல் பேரழகாக இருக்கும். விழும் மழைத்துளி  ஏரியில் நட்சத்திரங்களாக மிதப்பதை போன்றிருக்கும் காட்சி அலாதியானது. ஏரிக்கும் வானுக்குமான விளையாட்டாக இருந்துகொண்டிருக்கும். மனம் ஊர், உறவுகளின் நினைவில் துயர்கொள்ளும்போது துயர் துடைக்கும் தேவதையாக ஏரி உருமாறிக்கொண்டிருக்கும் அற்புதத்தை அனுபவித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

பாகலூர் பாளையக்காரரான ராமநாயக்கன் என்பவரே ஏரியை உருவாக்கினார். இதன் அருகில் அகழியுடன் கூடிய கோட்டை ஒன்றும் இருந்தது. அகழிக்கு ஏரியில் இருந்துதான் தண்ணீர் போகும். 1980கள் வரை ஏரியிலிருந்து பாசன வசதிக்கும் நீர் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஏரிக்கு பூனப்பள்ளி, கர்னூர், அந்திவாடி என பல ஏரிகளிலிருந்து வரும் உபரி நீரே இந்த ஏரியின் ஆதாரமாக இருந்தது. ராமநாயக்கன் ஏரியிலிருந்து வெளியேறும் நீர் இராஜ கால்வாய் வழியாக செல்லும். பாகலூர் சாலை பகுதியில் இருக்கும் விளைநிலங்களுக்கு நீர் பாய்ந்து விளைச்சலை தந்தது. வருடத்திற்கு ஒன்பது மாதங்கள் இக்கால்வாயில் நீரோட்டம் இருந்திருக்கிறது என்ற செய்திகள் ஆச்சரியப்படுத்துகிறது.  படித்தவன் சூதும் வாதும் செய்ய ஐய்யோவென போவான் என்ற பாரதியின் கூற்று வெறும் ஆதங்கமாக மட்டுமே நிற்கிறது.  இன்று இராஜ கால்வாய் என்ற பெயர் மட்டுமே உள்ளது. கால்வாய் வரைபடத்தில் மட்டும் கோடுகளாக உள்ளது. ஏரி நிறைந்து வெளியேறுவதை பார்த்து பார்த்து பழகிய கண்கள் சூன்யத்தை காண்பதும், என்றுமே வற்றாதெனும் நம்பிக்கை உதிர்ந்த மலரானதும் கொடுமை. அதுவும் வாழும் காலத்திலே பார்த்தது பெரும் கொடுமை. வாழ்ந்து கெட்ட குடும்பம் எனும் அங்காலயப்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல. ஏரிகளுக்கும் பொருந்தும் போலும். ஏரியை கடந்து செல்லும்போதெல்லாம் அதன் மொத்த நீரையும் சில துளிகளாக்கி கண்கள் கசியச் செய்திடுகிறது.

''இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்'' எனும் இளங்கோவடிகளின் பாடல் முறையாக பெய்யும் மழைநீரை தக்க முறையில் சேமித்து நாட்டை வளம் பெறச் செய்யும் மன்னன் என்றும்...

''நிலம் நெளிமருங்கின் நீர் நிலை பெருகத்
தட்டோரம்ம இவன் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே'' எனும் புலவர் புலவியனாரின் புறநானூற்றுப் பாடலில் நிலம் எங்கெல்லாம் பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும் படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் அழியாப் புகழ் பெற்று விளங்குவர் என்றும் நம் சங்க இலக்கியங்களில் நீர் மேலாண்மைக்காக இது போன்ற நிறைய்ய பாடல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியானதொரு வளம் மிக்க சிந்தனையாலும், செயல்பாட்டாலும் மேலோங்கிய வழித்தோன்றல்கள்தாம் நாம் என்பதை மறந்து அல்லது மறந்ததுபோல் நடித்து நம் அரசுகள் செய்துகொண்டிருக்கும் செயல்கள் நம்பிக்கையின்மையை அளித்துக்கொண்டிருப்பது நம் காலத்தின் பெரும் துயர். சாலை போடுதலும், மேம்பாலம் கட்டுவது மட்டுமே நம் நோக்கமாக சுருங்கிப்போனது. மாற்றங்கள் நிகழ்வது யாராலும் தவிர்க்க இயலாது. ஆனால் எதை அழித்து எதை உருவாக்குகிறோம் என்பதும் கவனிக்கத்தக்கது. நாம் செய்துகொண்டிருப்பதெல்லாம் அம்மாக்களை அழித்து பிள்ளைகளை மட்டும் செல்வாக்கோடு வளர்க்கும் செயலே. விளை நிலங்களையும் நீர் நிலைகளையும் அழிக்கும்போது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இப்போ சுங்கவரி உயர்வுக்காக போராடிக்கொண்டிருக்கிறோம். எதையும் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்பதை செய்யத்தவறியதால் அதன் விளைச்சலை மட்டுமே அறுவடை செய்து அவதியுறுகிறோம்.

ராமநாயக்கன் ஏரியின் அழகும் கம்பீரமும் குமிழித் தூம்பு மதகும் அதன் மேல் அமைக்கப்பட்டிருந்த அழகிய கல் மண்டபமும்தான்.  ஏற்கனவே இருக்கும் சாலையையே மேம்படுத்தி இருந்தாலே போதுமானதாக இருக்கும். தேவையற்ற விரிவாக்கத்தால் காலம் முழுமையும் பாதுகாக்க வேண்டியதை இழந்து நிற்கின்றோம். பழமையை காக்கும் மனநிலை அற்று பழமைமீதான பெருமிதங்கள் அற்ற அரசும் அதிகார வர்க்கத்திடமிருந்து கல் மண்டபத்தைக்கூட காப்பாற்ற இயலாத நம் வாழ்வு நம்மீது எச்சிலைத் துப்பிக்கொண்டிருக்கிறது. துடைத்து துடைத்து முகப்பூச்சை தடவி மினுக்கிக்கொண்டு திரிகின்றோம். 

ராமநாயக்கன் ஏரிக்கானதாக சுருக்கிப்பார்க்கத் தேவையில்லை. பெரும்பாலான ஏரிகளின் நிலையும் இதுவாகத்தான் இருக்கிறது. புதிதாக உருவாக்க முடியாவிட்டாலும் இருப்பதையாவது காணாமலாக்காமல் விழிப்போடிருப்போம்.

Wednesday, July 6, 2022

நன்றி: தமிழ் இந்து

 

தடைபடாத நீர் ஓட்ட அழகு.
*

க.மோகனரங்கன். இப்பெயர் ஓர் மந்திரச் சொல். நினைவில் சட்டென நிதானத்தை கொண்டுவரும் தன்மை கொண்ட எழுத்துக்காரர். தூரிகைகளும் வர்ணங்களும் இல்லாது நம்முள் சித்திரங்களை வரைந்து செல்லும் கவிமொழிக்காரர். தற்பெருமையும், தளும்புதலும் இல்லாது மொழிக்கு வளமை சேர்த்தபடியே இருப்பவர். நான்கு கவிதை தொகுப்புகள், இரண்டு கட்டுரை நூல், ஒரு கதை தொகுப்பு, இரு மொழிபெயர்ப்பு நூல்களென இவரின் பங்களிப்புகள் நீண்டுகொண்டிருக்கின்றன.

வரப்பிலிருக்கும் புல்லை அறுத்து சீர்செய்தபடியே இருக்கும் தாத்தாவிடம், தண்ணியோடத்தானே போகுது, எதுக்கு ஓயாம அதுகூட மல்லுகட்டுறீங்க என்றேன். தடைபடாத தண்ணியோட்டம் ஒருவித அழகுடா எனக்கூறி அவ்வேலையை தொடர்ந்து செய்தார். 'கல்லாப் பிழை' தொகுப்பை வாசிக்க இச்சம்பவம் நினைவிற்கு வந்தது. கச்சிதத்தன்மையே வாசிப்போட்டத்தின் பேரழகு. 

'வாசனை' கவிதை வரைந்த பூக்கட்டும் பெண் தொடங்கி 'கிளிப்பெண்'ணோடு கூடடைந்தது நல் அனுபவம்.

மலையில்/ ஏறம்போது/ மருளவும்/மலரில்/ஊறும்போது/மயங்கவும்/தெரியாத/எறும்பிற்குத்/ திறந்திருக்கிறது/எல்லாத் திசைகளிலும்/ பாதைகள். 'திறப்பு' கவிதை எறும்பை சாவியாக்கி நம்முள் மூடுண்ட கதவுகளை திறக்கச் செய்திடுகிறது.

இரண்டு கால்களும்/இரண்டு கைகளும்/எவ்வளவு உழைத்தும் போதவில்லை/ஒரு வயிற்றுக்கு... என்று நீளும் 'நடைவழி' கவிதை கொரானா காலத் துயர்களின் சாட்சியாக நிற்கும்.

அன்பின் முடிச்சு சூட்சுமம் மிகு குகை போன்றது. கழுத்துக்கு மட்டுமல்ல, காலாகாலத்திற்கும் உடனிருந்து மர்மங்களை அவிழ்த்து புதிய உலகை தரிசிக்கச் செய்தபடியே இருக்கக் கூடியதும்.'முடிச்சு' கவிதை பயணிப்பு.

பிடித்த பாடலுக்கு மனம் தானாய் தாளமிடும். இத்தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளுக்கு மனம் தாளமிட்டவாறு இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

அசையாத உறுதியையும், அவசரமில்லாத நிதானத்தையும் புழுவாக ஊர்ந்து வாழ வழிகாட்டும் 'அடங்கல்' கவிதை ஞானத்தின் திறவுகோலாகிறது.

எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தை இருந்துகொண்டிருக்கும். அக்குழந்தையை, மொழி எப்பொழுதாவது வெளிக்கொணர்ந்திடும். மதுவிடுதியில் வேலைபார்க்கும் சிறுவனின் பையிலிருந்து சிதறிய கோலிக்குண்டுகளை எல்லோரையும் பொறுக்கித்தர செய்த யூமாவாசுகியின் கவிதையை நினைவூட்டிய 'நிறைதல்' கவிதை தரை தாழ விடாமல் வண்ண பலூனை ஏந்தச் செய்தது. இக்கவிதையின் நீட்சியாக 'ருசி' கவிதையும் நம்மை வாழச் செய்கிறது.

....இருப்பினுமிந்த/மனதை திருப்புவதுதான்/மலையைப் புரட்டுவதுமாதிரியிருக்கிறது. என்று முடிவுறும் வே.பாபுவின் நினைவுக்காக எழுதப்பட்ட 'நினைவூசல்' கவிதை இணக்கமான தோழமையோடிருந்த நாட்களை மீட்டுத் தந்தது. அப்பாவின் நினைவில் எழுதப்பட்ட 'வழி'கவிதை கண்களில் நீர் முடிச்சுகளை உருவாக்கியது.

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி எனத் தொடங்கும் பாடலில் இறைவனைப்பற்றிய நூல்களைப் படித்து, அதன்படி வாழ்வை நடத்தாமல் இருப்பதை கல்லாப் பிழை என்கிறார் பட்டினத்தார். க.மோகனரங்கனின் 'கல்லாப் பிழை'யோ வாழ்வு எட்டி நிற்பதல்ல, நிழலாய் உடன் நிற்கும் வாழ்வின் மீதான பிடிப்பை இணக்கமாக சொல்லிச் செல்கின்றது.

வெளியீடு: தமிழினி
விலை: ரூ.90

Friday, July 1, 2022

நன்றி: வாசகசாலை

 யாதுமாகி நின்ற காளி 

இயல்பு நிலைக்கு திரும்புதலே மனிதர்களின் ஆகப் பெரும் எதிர்பார்ப்பு. இயல்பாக இருத்தலே வாசிப்பிற்கும் எழுதுவதற்குமான காலம். மழையை ரசிக்கும் மனம், தொடர்ந்து பெய்யும் மழையை ரசிப்பதில்லை. வெயிலை மனம் தேடத் தொடங்கிவிடும். சிலருக்குக் கவிதையே மழையாகவும் பனியாகவும் வெய்யிலாகவும் இருந்து கொண்டிருக்கிறது. ‘சித்து’ எனும் முதல் தொகுப்பில் இறகொன்றில் காதைக் குடையும் போது காற்றின் பெருங்குரலைக் கண்டடைந்து கொள்ளும் ஆசை,  இக்கவிதை மூலம் பறக்கத் தொடங்கி விடுகிறார். ‘ஒரு எளிய கோடு வளைந்து உருப்பெற்றது ஒரு முட்டை சட்டென்று கோட்டை அழித்துவிட்டு  அதிலிருந்து பறந்துசெல்கிறது முன்னெப்போதும் பறந்திராத ஒரு பறவை.’ காற்றை உணர்வதும், காற்றில் மிதக்கும் உயிரியாக உருமாற்றம் கொள்ளச் செய்தலும் கவிதைக்கான மொழியை அடையத் தொடங்கியதன் அடையாளமாகி விடுகின்றன. ஆசையின் முதல் தொகுப்பான ‘சித்து’வில்  அதற்கான தடங்களைக் காண முடிகிறது. பறவைகள் இவ்வுலகை அழகுபடுத்திக் கொண்டிருக்கின்றன. அதன் இறக்கைகள் அழகோவியம். அதன் குரல் ஸ்வரங்களுக்கு அப்பாற்பட்டவை. நம் வாழ்வில் நிறைய அத்தியாயங்கள் அவற்றுக்கானவை. வளர்ப்புப் பறவை தொடங்கி, வான் மிதக்கும் பறவைகள் வரை நம்மைக் கவர்ந்திழுத்தபடியே இருக்கும். வசீகரம் மிக்க பறவை கொண்டலாத்தி. அதற்கு நியாயம் செய்யும் வகையில் ஆசையின் ‘கொண்டலாத்தி’ தொகுப்பைக் கண்கவர வடிவமைத்துள்ளனர் க்ரியா பதிப்பகத்தினர். ஆசை, பறவைகளின் வாழ்வியலை நெருக்கமாகப் பார்த்துள்ளதை வெளிப்படுத்துவதாக உள்ளது இத்தொகுப்பு. வானத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க ஏதேனும் ஒரு பறவையோ, பறவைக் கூட்டமோ கடந்து சென்று நமை மகிழ்விக்கும். ஏதுமற்ற நாளில் மேகங்கள் பறவைக் கூட்டமாகி மிதந்து சென்று நமை ஏமாற்றம் கொள்ளாதிருக்கச் செய்யும். பறவைகள் நம்மை மகிழ்விக்கும் தேவதைகள். கொண்டலாத்தியில் எனை மிஞ்சிட முடியாது உங்களின் எழுத்து என கரிச்சான், தேன்சிட்டு, மைனா, தவிட்டுக்குருவி, தையல் சிட்டு போன்ற பறவைகள் நம்மைப் பார்ப்பதாகவே படுகிறது. கொக்கை ஓரேர் உழவனாக்கி இருப்பது, காற்றைத் தன்னொலியாக்குவதோடு நம் ஒலியாக்கிச் செல்வதைக் காட்சிபடுத்தியிருப்பதும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. ‘கொத்திக் கொத்தி எடுத்தாள் காற்றிலிருந்து/ ஒவ்வொரு ஒலியாய்’ எனும் ‘மழைக்கொத்தி’ கவிதை மனம் கொத்திச் செல்கிறது. வலியதின், பெரியதின் இடம் கீழே இருக்கிறது; மெலியதின், மிருதுவின் இடம் மேலே இருக்கிறது.  – தாவோ தே ஜிங் குறிப்போடு ஆரம்பிக்கும் ‘சிறியதின் இடம்’ கவிதையில் நமக்கான இடத்தையும் தேடச் செய்திடுகிறார் ஆசை. கிளி கொத்தும் பழத்தையும் கொடுக்குமென் கரத்தையும் சித்தம் மயங்கிச் சரியும்- முத்தமிடக் குனிகையில் எச்சமிடும் கையில் மகிழ்ந்து பனிபோல் குளிரும் மனது. கிளிகள் மீனாட்சியின் தோள் அமர்ந்து வணங்குவோரை ஆசிர்வதிப்பவை மட்டுமல்ல, பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் நம்மை பச்சையாக்கும் அற்புதம் மிக்கவை. கொண்டலாத்தி நம்மைப் பறவையாக்கும் வனம். ‘கொண்டலத்தி‘ தொகுப்பிற்குப் பின் நீண்ட காத்திருப்பில் தன்னுள் இருந்த காளியை கண்டடைந்து களமாடி இருக்கிறார் ‘அண்டங்காளி‘ தொகுப்பில்.   “இந்தக் கவிதைகளை எழுதிய குறுகிய காலத்தில் தான் கடந்த 20 ஆண்டுகளில் நான் மிகவும் பரவசமாக இருந்தேன். அதீத விழிப்பு நிலையை உணர முடிந்தது. எல்லா உணர்வுகளும் அவற்றின் உச்ச நிலையில் என்னிடமிருந்து வெளிப்பட்டன” என்று ஆசை முன்னுரையில் கூறியிருப்பதின் உண்மையைப் பிரதிபலிக்கின்றன கவிதைகள். தன்னைத் தானே உணர்ந்து கொள்ளச் செய்யும் தன்மை கவிதைகளுக்கு உண்டு.   ‘யாதுமாகி நின்றாய் காளி- எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மை யெல்லாம் காளி! – தெய்வ லீலை யன்றோ’ என்று நம் முன்னோடி பாரதி கொண்டாடிய காளியை, ஆசை அண்டங்காளியாக்கியுள்ளார். நடனக்காளி, இருட்காளி, கொடுங்காளி, பேயிருட்காளி, பேய்க்காளி என காளிக்குப் பல்வேறு பிறப்புகளை கொடுத்துள்ளார். காளி, தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் எனும் நிலையை தொகுப்பில் அடையச் செய்துள்ளார்.  மொத்த உலகையும் தன் திரட்சியான முலைக்குள் பாலாக்கிப் பாதுகாப்பதாகப் பரிணமிக்கச் செய்துள்ளார். “இருமுனை முடிவின்மையின் நடுவெளி நர்த்தனம் நீ தொடுஊழி தரையிறக்கும் தத்தளிப்பு நீ கடல்புரியும் தாண்டவத்தின் தெறிப்பும் நீ எரிஜோதி இடைபறக்கும் கொடும் பறவை நீ அனலுமிலும் கனல் மயக்கும் பேய்ச்சிரிப்பு நீ நாத்திகனின் கனவில் வரும் நடனக்காளி நீ.” மென்மேடுடைய யோனியுள் மீண்டும் உட்சென்று கருவறை இருட்டின் கதகதப்பில் உறங்கச் செய்யும் உன்னதம் கவிதைக்கு உண்டு. ‘யாதுமாகி நின்ற காளி’ போல் எதுவுமாகி நிற்கச் செய்கின்றன காளியைக் கவிதைகள். சுண்டக் காய்ச்சுதல், சொற்சிக்கனம் போன்ற தன்மையை இத்தொகுப்பில் காண முடியாது. கொஞ்சமாக தாராளப்படுத்தியுள்ளார். கவிதைகளின் ஓசை லயத்திற்கு அதன் தேவையைக் கவிதைகள் ஏற்கின்றன. இப்படியான மரபின் தொடர்ச்சியை நினைவூட்டும் தொகுப்பும் அவசியமே. நமக்குப் பிடித்தவர்களோடு நாம் ஆடும் ஆட்டத்தில் ஒருவித லயிப்பு உருக்கொள்ளும். கவிக்கும் காளிக்குமான ஆட்டத்தில் எழும் ஓசை ரசிக்கத்தக்கதாக உள்ளது. பேயவள், தாயவள், மாயவள், தூயவள், தீயவள் என காளிக்குப் பல அவதாரங்களைக் கொடுத்துக் களமாட வைக்கிறார் ஆசை. “உலகம் அழிப்பேன் நான் உன்மத்தம் திறப்பேன் நான் ஓங்கிய கதவடைத்து ஒழிவுநிலை கொள்வேன் நான் பாதிப் பிறப்பைச் சுமந்து மீதிப் பிறப்பைத் தேடுவேன் நான் உடலுக்குள்ளே நீச்சலடித்து ஒதுங்கியேறிச் செல்வேன் நான் புள்ளியதைத் தாண்டிச் சென்று புள்ளினமாய் வருவேன் நான்.” தொகுப்பில் காளியைத் தெய்வமாக மட்டும் பார்க்கவில்லை ஆசை. ஏமாற்றப்பட்ட, தன் வலியை வெளிச் சொல்ல இயலாத பெண்களின் மனக் குமுறலுக்கு உருவம் தந்தால் அது காளியாக இருக்கும் என்பதை உணர்த்தியிருக்கிறார் ஆசை. “பத்ரகாளி படமெடுத்தாடும் தீலி மிதித்தாடி நீ சிதைத்தழித்துச் சென்றதில் மிச்சமுள்ள  சூனியம்தான் இது என்ற ஏளனமா உனக்கு மிஞ்சியது சூனியம்தான் ஆனால்  கருக்கொண்ட சூனியம் அதில் உருக்கொண்டு மீண்டும் முளைத்து உன்மீது குதித்தாடியுனை சிதைத்தழிக்கும் நீதந்த என் கவி.” காளியைச் சவாலுக்கு இழுக்கும் இக்கவிதையில் படைப்பாளி தன் கவிமீது வைத்துள்ள நம்பிக்கையை நமக்கான நம்பிக்கையாகவும் கொள்ளச் செய்கிறது அண்டங்காளி. * ‘இந்த வெப்பம் உடலின் குரல்… நீ என் வெப்பமாகும்போது/ நான் வெப்பத்தின்/ குரலாவேன்’ எனத் தொடங்கும் ‘குவாண்டம் செல்ஃபி’யின் கவிதைகள் உடலையும், அதில் உருவாகும் இசையையும் கொண்டாடச் செய்கின்றன. தன்னை ரசித்து, தன் உடலைக் கொண்டாடுபவர்கள், தனக்கானவர்களையும் கொண்டாடும் இயல்புடையவர்களாகி, காமத்தில் உருக்கொள்ளும் அதிருப்தியைக் கடந்து களிப்படைபவர்களாக இருப்பார்கள். தொகுப்பில் இருக்கும் கவிதைகளில் அதற்கான சன்னதங்களைக் காண முடிகிறது. உடலின் எல்லையை அறியத் துடிக்கும் மனம், மரணத்தை உடலுக்கு எதிரான கலகமாக பார்க்கப்படுவது வாழ்வு குறித்த புரிதலின் முதிர்வு. ‘உடலின் எல்லை எதுவரை’ எனத் தொடங்கும் கவிதையில்  இதனை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார். அம்மா என்பவளைத்  தியாகத்தின் உருவாக்கி என்றைக்கும் உழைத்துக் கொண்டே இருக்கும் இயந்திரமாக வைத்திருப்பதில் இருக்கும் கயமையை  நம்மிடமிருந்து அகற்றி, அவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டென்பதை உணர்ந்து, அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களையும் பொருட்படுத்த வேண்டிய அவசியத்தை, அம்மாவின் மீது நம்மிடம் இருக்கும் உண்மையான பிரியம் எது என்பதை, “நான் இருக்கிறேன் என்று பார்க்காதே அம்மா சரசமாடு உன் காதலனுடன் தயக்கமேதுமின்றி இடுப்பில் எனைச் சுமந்தபடி. …… …….. காதல் செய் காதல் செய் அப்பா தவிர்த்த காதல் செய் அப்போதுதான்  நீ அழகு.” எனும் நீண்ட கவிதையில் ஆசை உணர்த்துகிறார். காதல் எனும் உணர்வு எதையும் தனதாக்கிக்கொள்ளும். சாத்தியமில்லாதவற்றைச் சாத்தியப்படுத்தும். “… உன் முலைக்காம்புகளின்  வழியே இந்த உலகத்தைப் பார்ப்பதற்குப் பெயரும் காதல்தான்.”  என முடிவுறும் கவிதையில் காதலின் தகிப்பை உணர முடிகிறது. பெண்களை நேசித்தல் என்பது அவர்களை உணர்ந்து கொள்வதிலிருந்து தொடங்க வேண்டும். நிலம் விழும் மழை நீர் திரண்டோடி, வேர்களைக் கண்டடைந்து, மரங்களுடன் கலப்பதை ஒத்ததாக இருக்க வேண்டும் அவர்களை உணர்ந்து கொள்ளுதல். மகிழ்வில்  பங்கெடுக்கும் ஆண், வலியில் பங்கெடுக்காது, அது அவர்களின் பிரச்சினை, நாம் என்ன செய்வது எனத் தத்துவம் பேசிக் கடப்பதே அதிகம். மாதவிடாய் என்பது மாதச் சுழற்சி. உள்ளும், புறமும் எரிச்சல் மிக்க நாட்கள் அவை. ஆண் கூடுதல் நேசிப்பைச்  செலுத்த வேண்டிய நாட்கள் அவை. புரிந்தவர்கள் ஆசையின் இக் கவிதையை கொண்டாடச் செய்வார்கள்: ‘உன் மாதவிடாய் வலியைத் தன்மேல் பூசிக்கொள்ளத் தெரியவில்லை என்றால் இக்கவிதை உயிரற்றது என்று அர்த்தம்’ எனத் தொடங்கும் கவிதை நாம் எத்தகையானவர்களாக இருக்கிறோம் என்பதைக் காட்டும் கண்ணாடியாக இருக்கிறது. காதலின், காமத்தின் தீவிரத் தன்மைகளைக் காட்சிபடுத்தும் ‘குவாண்டம் செல்ஃபி’ தொகுப்பு நம்மை நாம் ஆராதித்து வாழ்ந்து பார்க்கச் செய்யும். 

* நூல்களின் விவரங்கள்: 

1.சித்து க்ரியா வெளியீடு ஆண்டு: 2006 பக்கங்கள்: 116 விலை: ரூ.75 (தற்போது அச்சில் இல்லை)

 2.கொண்டலாத்தி (முழுக்கவும் பறவைகளைப் பற்றிய, வண்ணப் படங்களுடன் கூடிய கவிதைத் தொகுப்பு) க்ரியா வெளியீடு ஆண்டு: 2010 பக்கங்கள்: 64 விலை: ரூ.180 தொடர்புக்கு: 7299905950 

3.அண்டங்காளி டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு ஆண்டு: 2021 பக்கங்கள்: 88 

4.குவாண்டம் செல்ஃபி டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீசு ஆண்டு: 2021 பக்கங்கள்: 152 மேற்கண்ட இரண்டு நூல்களுக்கும் தொடர்புக்கு: 8754507070  



உணவெனும் கலை

 உணவெனும் கலை

*

வாத்துகளாயிரம் அல்லிகளாய் மலர்ந்திருக்க
குருவியின் சிறுமனை
கிளைகளில் நிலவாய் தொங்கும்
ஆற்றின் அருகமர்ந்து
தீ பொசுக்கும் கறியிலிருந்து
சொட்டும் எண்ணை எச்சிலாகி
உடலை நனைத்த கதையைச் சொல்லியவாறு
குடல், ஈரல், தொடைக்கறியென
பந்தி விரித்து
பாங்காய் இது பங்கோடாவென
பொட்டலம் பிரித்த
ததும்பும் பிரியங்களால்
மாட்டுக்கறியின் ருசியை
அரூரில் சுவைக்கக் கற்றேன்.
ஆம்பூர், பேரணாம்பட்டென
பயணத்தில்  மனமும் மணக்க
சூப்பும் சுக்காவுமாக
அலைகள் அடித்தது புதுச்சேரியில்.

உண்பதும் உணர்தலும்
அவரவர்களுக்கனது
அவை அவைகளுக்கானதும்.