Sunday, October 19, 2014

18-10-2014 தமிழ் இந்துவில் வந்த மதிப்புரையின் விரிவாக்கம்...

சொல்லப்படவேண்டிய நன்றிகள்...
-ந.பெரியசாமி


மகனுக்கு மடல் எனும் இப்புத்தகம் புதுக்கோட்டையைச் சேர்ந்த பல் மருத்துவர் நா.ஜெயராமன் ஹாக்காங்கில்  படிக்கும் தன் மகன் ஜெயகுமாருக்கு எழுதிய நான்கு கடிதங்களும், ஜெயகுமார் எழுதிய ஒரு கடிதமென ஐந்து கடிதங்களைக் கொண்டது.

கடிதங்கள் புனைவற்று உண்மைகள் நிரம்பிக் கிடப்பவை. வாழ்வின் அடுக்குகளை உரித்துப் பார்க்க ஏதுவான களம். தந்தைக்கும் மகனுக்குமான குடும்ப கடிதமாக பார்க்க முடியாது ஒரு சமூகத்தின் பரிணாமத்திற்கான சாட்சியாகவும் இப்புத்தகம் இருக்கிறது.

உயர்கல்வி எனும் தலைப்பிட்ட நீண்ட கடிதத்தில் பெற்றோரும், பிள்ளைகளும் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கம் நன்றி குறித்த உரையாடல்கள், வாசிப்பவர்களையும் ஏற்றுக்கொள்ளச் செய்து சொல்லப்படவேண்டிய நன்றிகள் நமக்கும் இருக்கு என்பதை நினைவூட்டுகிறது. பொற்றோர்கள் பிள்ளைகளின் மீது வைக்கப்படவேண்டிய நம்பிக்கைகளையும் நமக்கு இக்கடிதம் உணர்த்துகிறது.

‘இந்த தேசத்தின் மீது எனக்கு எப்படி மரியாதை வரும்? இந்த தேசம் என்மீதும் என் மக்கள் மீதும் எண்ணற்ற அவமானங்களையும் இழிவுகளையும் சுமத்தியிருக்கின்றபோது இந்தியாவை என் தாய்நாடு என்று எப்படி கூறுவேன்?’ என்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பகிரங்கமான குற்றச் சாட்டை நினைவூட்டி ஒருவரின் தகுதியும், திறமையும் பிறப்பு தீர்மானிப்பதில்லை என உணர்த்தி மகனின் பல் மருத்துவ படிப்பு குறித்து தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கூறியிருப்பது நம்பிக்கையூட்டும் செயலாக இருக்கிறது. இக் கடிதத் தொகுப்பில் நிறைய்ய இடங்களில் அம்பேத்கரின் கூற்றுகளை பயன்படுத்தி இருக்கிறார். தேவையான இடங்களில் தேவையான கூற்றாக இருப்பதால் கடிதத்தின் ஒரு அங்கமாகவே மாறியிருப்பது கவனிக்கத்தக்கது.

சாக்கடையான பெரும் கருத்தியல்களை வைத்துக்கொண்டிருக்கும் இந்தியா எப்படி புனிததேசமாகும் எனும் அவரின் கோபம் நமக்கமான கோபமாகவும் இருக்கிறது. ‘தீண்டத்தகாதவர்கள்’ எனும் கூற்றுக்குள் அடங்கியிருக்கும் அவமானங்கள் இழிவுகளை சமூகத்தில் நிகழ்ந்தேறிய சம்பவங்களை நினைவூட்டி கூறியிருக்கிறார். கூடவே அச்சமூகத்தில் வசதி வாய்ப்பு பெற்று முன்னேறியவர்கள் உயர் சாதியினரின் சடங்கு சம்பிரதாயங்களில் தன்னை ஒப்புக்கொடுத்து தன் சமூகத்தை இடத்தாலும் மனத்தாலும் விலகி நடக்கும் துரோகங்களையும் விமர்சிக்கிறார். நீந்த கற்றுக்கொள்வதற்கு பயன்பட்ட சுரக்குடுக்கையை கற்றபின் உடைத்தெறியும் செயலுக்கு ஒப்பானது என்பதை வாசிப்பவர்கள் உணரக்கூடும்.

உன் பெயரைவிடவும் நீளமாக இருக்கும் பட்டங்களெல்லாம் சாதிய ஒடுக்குமுறைக்குள் சீரழிந்துகொண்டிருக்கும் ஒரு தலித் சமூகத்து சராசரி மனிதன் பெற்ற வெற்றியால்  உலக அரங்கில் நீ புகழ் பெறுகின்ற இடங்களில், மேடைகளில் இந்தியாவில் மிகமிக மோசமாக ஒடுக்கிவைக்கப்பட்ட சாதியில் பிறந்தவன் என்பதையும், தீண்டத்தகாதவன் என்ற உண்மையையும் பட்டவர்த்தமாக எவ்வித ஒளிவு மறைவுமின்றி உரத்துச் சொல். சாதிவெறி பிடித்த இந்தியர்கள் உலக அரங்கில் வெட்கித் தலைகுனியட்டும் எனும் ஜெயராமனின் கோபம் நமக்கான கோபமாகவும் மாறுகிறது.

ஒரு காலத்தில் கல்வியும், அதற்கான வாய்ப்பும் மறுக்கப்பட்ட வழித்தோன்றலான டாக்டர்.ஜெயக்குமார் ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் பல்மருத்துவம் மற்றும் குற்றம்சார்ந்த பல்மருத்துவத்தில் தொடர் ஆய்வுகள், அகதிகளின் வயதுகுறித்த சர்வதேச சட்டவிதிகள் தொடர்பான விழிப்புணர்வு, மும்பையிலிருந்து வெளிவரும் இந்திய பல்மருத்துவக்கழகத்தின்(யிமிஞிகி) பத்திரிகையின் இணை ஆசிரியர். மிகச் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளை உலகின் கவனிக்கத்தக்க சஞ்சிகைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். சென்னையில் உள்ள ‘’இச்சா’’ மையத்தால் ‘’சாதனைத்தமிழர்’’ எனும் விருதினை வழங்கி கௌரவப்படுத்தப்பட்டவர். (ஞிணீtமீ ளியீ ஙிவீக்ஷீtலீ) எனும் அமைப்பைத் துவங்கி அதன் மூலம் பிறப்புச்சான்றிதழ் இல்லா உலக மக்கள் யாவருக்கும் தன் சொந்த ஆராய்ச்சியின் மூலமாக சான்றிதழ் வழங்கும் பணி என இவரின் சேவைகள் நீண்டபடி இருக்கிறது.

நம்மால் மறக்க இயலாத கொடூரமான சம்பவமாக இருக்கும் டெல்லியில் நடந்த கூட்டு வன்புணர்ச்சிக் கொடூரத்தில் ஒருவர் வளர்இளம் பிராயத்தினர். அவரை சிறார் நீதிமன்றத்தில்தான் விசாரிக்கவேண்டுமென விவாதங்கள் நடந்துகொண்டிருந்தபோது ‘இந்தக் கற்பழிப்புக் குற்றச்சாட்டில், சிறார் பிரிவில் உள்ளவனின் சரியான வயது என்ன என்பதை எனது ஆராய்ச்சியின் மூலம் மிகத்துல்லியமாகக் கணக்கிட்டுத் தரமுடியும்’ என அரசுக்கு ஜெயக்குமார் பலமுறை தகவல் கொடுத்தும் அதை அரசு கண்டுகொள்ளவேயில்லை.

இந்தியாவில் ‘கற்றவனின்’ குரலுக்கு ஏது மரியாதை. சிறந்த ஆராய்ச்சியாளர்கள் வெளிநாடு ஓடுவது சம்பளத்திற்காக மட்டுமல்ல, சுயமரியாதைக்காகவும், மேலும் தங்கள் ஆராய்ச்சிக்கான தளமும் அமைத்துக்கொடுக்கும் இடங்களைத் தேடித்தான் எனும் ஜெயராமனின் ஆதங்கத்தில் இருக்கும் உண்மையை நாமும் உணரமுடிகிறது.

மேலும் அவர் கடிதத்தில் சமூக சிந்தனைதான் ஒரு மனிதனை முழுமையாக்கும் அதற்காக நீ டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நூல்களான 37ஐயும் படித்திட கேட்டுக்கொள்கிறார். தாய்மொழி சிறப்பு, போராட்டங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் நீளும் கடிதம் நம்மை தோய்வுறச்செய்யாது உடன் பயனிக்கச்செய்கிறது.

கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக்கொண்ட சராசரி மனிதனாகவே என்னைப் பார்க்கிறேன். சாதிப்பதற்கு 100/100 மதிப்பெண்கள் தேவையில்லை. விடாமுயற்சியும், செய்யும் வேலையில் ஈடுபாடும், கவனமும் இருந்தால் போதும் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் ஒரு மனிதனின் அனைத்து திறமைகளும் சாதியாகப் பார்க்கப்படுகிறது. நம் சமூக விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் எண்ணற்றவர்களுடன் நானும் ஒருவனாக இருப்பேன். இப்போராட்டத்தில் தோற்கலாம். ஆனால் முயற்சி எடுப்பதில் எந்த தோல்வியும் இருக்காது என்று நம்புகிறேன் என முடிவுறும் ஜெயக்குமாரின் கடிதம் நமக்கும் ஆறுதலாக இருக்கிறது. வளர்ந்து வளம் இளைஞர்களிடையே சமூக விடுதலைக்கான வேட்கை இருப்பதை கண்டுணர்ந்து அதை வளர்த்தெடுக்க நம்மின் பங்களிப்பும் வேண்டியிருப்பதன் அவசியத்தை இக் கடிதங்கள் உணர்த்துகின்றன.

மகனுக்கு மடல்
மருத்துவர்.நா.ஜெயராமன்
அபெகா வெளியீடு
832, கீழராஜ வீதி 2ம் தளம்,
புதுக்கோட்டை-622001
விலை-ரூ.80

Wednesday, August 27, 2014

தோட்டாக்கள் பாயும் வெளி

மாடிக்கு ஏறுகிறீர்கள்
அமைதியான சூழல் இருக்க
கொண்டு சென்ற தாளை விரித்து
பிடித்த முயலை வரைகிறீர்கள்
உணவும் வசிப்பிடமும் வேண்டி
புற்கள் சூழ்ந்த புதரை ஏற்படுத்துகிறீர்கள்
ஏனோ நிறைவுகொள்ளாதிருக்க
ஒன்றிரண்டு மரங்களை உருவாக்குகிறீர்கள்
அழகு சூழ மகிழ்ந்தீர்
கணத்தில் கவலையடைந்தீர்கள்
முயல் தனித்திருக்குமென
இணை ஒன்றை தருவிக்கிறீர்கள்
இரண்டும் முத்தமிட்டபடி
சந்தோசமாக உலவிக்கொண்டிருக்கிறது
உங்களுக்கான இடம் அற்றிருப்பதை உணர்ந்து
நிழலான மரத்தடியில்
ஒரு கல்லைப் போடுகிறீர்கள்
அமர்ந்து வேடிக்கையில் களித்திருக்க

மெல்லிய சப்தத்தோடு இரண்டு தோட்டாக்கள்.

நன்றி: கல்குதிரை

Monday, August 11, 2014

இதிகாச கட்டுடைப்புகள் காலத்தின் கட்டாயமாகிறது
-சூரிய நிலா

2004ஆம் ஆண்டு ‘நதிச்சிறை’ கவிதை நூலின் வழியாக அறிமுகமானவர் ந.பெரியசாமி. பத்தாண்டுகளெனும் நீண்ட இடைவெளிக்குப் பின்  ’மதுவாகினி’  எனும் இந்த நூலின் வழியாக தமது இலக்கிய வேட்கையைத் தீர்த்துக் கொண்டுள்ளார்.

கவிதைக்கான பாகுபொருட்கள் சமூகக் கட்டமைப்பில் ஏராளமாகயிருப்பினும், தனது கவிதைக்கான பாகுபொருளினை, தான் சார்ந்த வாழ்வியலிலிருந்தே எடுத்துக் கொண்டிருப்பது கவிஞரின் மிகப் பெரும் பலமாகவேயுள்ளது. ‘தோத்தான் கோழி’ போன்ற கவிதையில் தன்னை உருவகப்படுத்திக் கொண்டு சமூகத்தை கட்டுடைப்பது. அல்லது தன்னை உடைத்துக் கொண்டு சமூகத்தை கேள்விக்குள்ளாக்குவது என்ற இவரின் கவித்தன்மையுடன் கூடிய உசாவல் வெகு அற்புதம்.

அற்புத திருவந்தாதியில் காரைக்காலம்மை பாடுவார்...
மகிழ்திடே நெஞ்சே மானுடரில் நீயுந்
திகழ்தி பெருஞ் சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே
யாரென்பே யேனும் அணிந் துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே இன்னம் பெருக்கு

அறியாமை உடைய மனதை - மனிதர்களோடு சேர்ந்து மகிழ்வாகயிருக்கச் சொல்லும் பாட்டுதானிது.
தோத்தாத் கோழி நான்
வலியவனிடம் மட்டுமல்ல எளியவனிடமும்
என் பலத்தைக் காட்டுவேன் என்று ந.பெரியசாமி அழுத்தமாக கூறும்போது இதை அம்மையைப் போல ‘மட நெஞ்சே... மனிதர்களோடு சேர் அவர்களோடு மகிழ்வாயிரு’ என்று சொல்லத்தானே வேண்டும்.

மழையற்றும் மிகு வெப்பம் உமிழாதபோதும்
கைக் கொண்டலைகிறேன் என்கிறார்.

அதாவது குடையைக் கைக்கொண்டு அவர் அலையும் போது- பைத்தியமென தலையிலடித்து/முகத்துக்கு நேரும் / முதுகுக்குப் பின் / வசவை வீசுபவர்களுக்கு/எங்ஙனம் புரியச் செய்ய/ மழை விடாது பொழிகிறது/என் கனவு தேசத்திலென்று.

கவிஞன் தனது கனவில் கூட மழையைப் பிடித்துக் கொண்டு திரிகிறான். பிறகு ஊர் என்ன செய்யும்? சிரிக்கத்தானே செய்யும்?

‘மாமாயை’ என்னும் வனத்தில் அலைகிறன்டா
தாமாயுலகனைத்தும் தாது கலங்கிறண்டா
என்று பட்டினத்தார் பாடுவார்.

‘காது அவிஞ்சான்பட்டி’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில் அழகான எள்ளல் தன்மை துள்ளி விளையாடுகிறது. நோய் மிகுந்த நம் தேசத்திற்கு நூலகங்கள் எதற்கு? இப்படி முடிக்கப்படும் இக்கவிதை மிக இலாகவமாக எழுதப்பட்டதொரு காட்டமான கவிதை. ‘வதைகளின் ருசியறிந்தவர்கள்’ என்ற கவிதையும் மேற்படி தொனியில் எழுதப்பட்ட அற்புதமான கவிதைதான்.

இத்தலைப்பிட்ட கவிதைகளில் எழுதப்பட்ட வரிகள்-மக்கள் சீற்றத்தை உள்வாங்கி வெளிப்படுத்தும் நல்லதொரு கவிஞனை அடையாளம் காட்டுகின்றது.


ஈழ வதையில்
வழிந்த ரத்தங்களை வாக்குக்காக
மணக்க மணக்க வதக்கியபடி இருக்கிறார்கள்
ஒரே சட்டியில்
இரு அகப்பையோடு
ஆண்ட கிழவனாரும் ஆளும் குமரியும்.

ஈழப் பிரச்சினையில் எவருக்கும் அக்கறையில்லை. என்ற குற்றச்சாட்டினை இக் கவிதையில் பதிவு செய்துள்ளது பாராட்டத்தக்கது.

‘வன தேவதை’ என்ற தலைப்பிட்ட கவிதை இராமாயண தொன்மத்தை மறுபரிசீலனைக்கு கொண்டு செல்கிறது. சூர்ப்பனகை இதில் வன தேவதையாகிறாள். இக் கவிதையில் மூக்கறுப்பட்டது இராமன். அதுவும் சூர்ப்பனகையின் மேல் காதல் வயப்பட்ட இராமன். இதிகாச கட்டுடைப்புகள் காலத்தின் பட்டாயமாகின்றது. கவிதை அதை முன்னெடுத்துச் செல்கின்றது.

‘மதுவாகினி’ இவரது பல கவிதைகளில் வந்து போகும் இடுகுறிப் பெயராகவுள்ளது. காதலியாக, அன்னையாக, அஃறிணைப் பொருளாக மதுவாகினியை இவர் வடிவமைத்துள்ளார். ஒரு பெயர் பிடித்துப் போய்விட்டால் கனவிலும், நனவிலும் அது தொக்கி நிற்கும் எங்கும் உடனலையும் மனதுக்குள் உட்கார்ந்து கொண்டு மகுடி வாசிக்கும். அப்பெயர் கவிஞனுக்கு பிடித்துப் போய்விட்டது என்றால் இப்படித்தான் பல கவிதைகளில் அப் பெயர் ஒட்டிக் கொண்டிருக்கும். அதனால்தான் குளித்து வந்த மதுவாகினியின்/கூந்தலில் வடிந்த நீர்த்துளிக(ள்)ளை-

நீராடி கேசம் நீவிய துரோபதையை-ஒப்புமையாக்கியது. அந்த பெயரின் பிரேமையின்றி வேறென்ன?

கனவு வேட்டை, பொக்கை வானம் போன்ற கவிதைகளில் சிறுவர்களின் மன கிலேசங்கள் அழகாக பதிவாகியுள்ளன.

வாழ்வெனும் நீண்ட பாதையில் பயணித்து வந்த ஒரு கவிஞன். அதன் திரட்சிகளை நனவின் உக்கிரத்தோடும், மிகு கவனமாக தனது நினைவலைகளை பரப்பிச் செல்லும் உத்வேகத்தோடும் தனது - கவிதைப் படைப்பை உலகிற்கு தருகிறான். இவ்வுலகம் அதை ஏற்றுக் கொண்டால் மிகுந்த போதைக்குள்ளாகிறான். இல்லாவிட்டால் தொடர்ந்து போராடுகிறான். கவிதைகளை நாமள்ளிக் கொள்ளும் வரை கவிஞனின் போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அத்தகையானதுதான் ந.பெரியசாமியின் இவ்விரண்டாம் முயற்சி.

நன்றி: தீராநதி.


Thursday, July 10, 2014

நடுகல் நாயகர்களோடு...


என்றாவதுதான் வாய்ப்பதுண்டு. நண்பர்களோடு ஊர் சுற்றுவது. ஒருநாள் நானும் கவிஞர்.பத்மபாரதியும் நாங்களிருக்கும் ஓசூர் பகுதியைச் சுற்றினோம். ஒரு சிறிய கோவிலைச் சுற்றிலும் சதுரமான பெரிய பெரிய கற்கள் அடுக்கப்பட்டிருந்தன. அதில் நிறைய சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. சிதைந்து கிடந்த கற்களிலும் சிற்பங்கள் இருந்தன. உடனடியாக மனோன்மணியை தொடர்புகொண்டு கூறினோம். அடுத்த வாரமே ஓசூர் வந்துவிட்டார்.

எங்களோடு அவ்வூருக்குச் செல்லும் வழியில் அவர் நடுகல் ஒன்றைப் பார்க்க வேகமாக ஓடினார். எங்களை அழைத்து ஆச்சரியமாக இது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இப்பகுதியில் வாழ்ந்த வீரன் ஒருவனுக்காக நடப்பட்டிருக்கு என்றார். பக்கத்தில் இருந்த சிறிய கோவிலை பார்த்து மீண்டும் ஓடினார். அங்கிருந்த ஒரு கல்லில் கல்வெட்டுகள் இருப்பதைப் பார்த்து அங்குமிங்குமாக ஓடி இலைதழைகளைப் பறித்து வந்து அதில் தேய்த்தார். எழுத்துக்கள் தெரிய ஆரம்பிக்க ஓவென கூச்சலிட்டு வேகமாக படித்துக் காட்டினார். அவரது செயல் தொப்புள் கொடியின் ஈரப் பிசுபிசுப்போடு இருக்கும் குழந்தையை ஏந்திய தாயின் பரவசத்தை நினைவூட்டியது.

நடு கற்கள் வெறும் சாவுச் செய்தி கற்களல்ல. அதற்கும் உயிர் உண்டு. வாழ்வு இருக்கிறது.தன் இனக்குழுவை காப்பதற்காக புலியைக் கொன்றவன், போரிட்டு இறந்த வீரன் போன்றோருக்குத்தான் நடுகல் வைக்கப்பட்டிருக்கு. நடுகற்களுக்கு உண்மையான வரலாறு  உண்டு என்பதை அறிந்த தருணம் மகத்தானது. சில மகத்தான தருணங்கள் மனிதனை செழுமைப்படுத்தும். அன்றிலிருந்து பாறை தகர்க்கும் வெடிச் சத்தம் கேட்கையில் அவசர ஊர்தியின் ஓசை கேட்டு உண்டாகும் பதற்றம் தொற்றுகிறது. ஏதாவது கல்வெட்டுகள் அழிந்திருக்குமோ, பாறை ஓவியங்கள் சிதைவடைந்திருக்குமோவென..

அடிக்கடி மனோன்மணியோடு சுற்றத் துவங்கினேன். அதன் நீட்சியாகத்தான் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையம், ஓசூர் ஏற்பாடு செய்த நடுகற்கள்-தேசிய கருத்தரங்கில் கலந்துகொண்டேன். ஓசூரில் ஜூன்21 மற்றும் 22ம் தேதிகளில் நடந்தது. புத்தக வெளியீடு, தொல்லியலாளர் மங்கை-வீரராகவன் ஆகியோரின் நடுகற்கள் பற்றிய கண்காட்சி, புத்தக கண்காட்சியும் நிகழ்ந்தன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா தொல்லியல்  ஆய்வு அறிஞர்களின் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. ஒவ்வொரு அறிஞர்களும் அவர்களின் கண்டுபிடிப்புகளை குறுந்திரையில்  ஒளிபரப்பி விளக்கம் சொல்லியது சிறப்பான ஏற்பாடாக இருந்தது. கர்நாடக இதிகாச அகாதெமி பெங்களூர் (ஹம்பி பல்கலைக்கழகம்) தலைவர் பேரா.முனைவர் தேவர கொண்டா ரெட்டி, வணிகவரி இணை ஆணையர் பா.தேவேந்திரபூபதியும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அன்று  மாலையில் ஓசூரிலிருந்து பாகலூர் செல்லும் சாலையில் இருக்கும் குடிசெட்லு கிராமத்தில் இருந்த நடுகல் கோவிலுக்கு சிற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, போய் வந்தது எல்லோருக்கும் நல்ல அனுபவமாக இருந்தது. அதைத் தொடர்ந்து இரவு திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் கி.பார்த்திபராஜா தலைமையில் மாற்று நாடக குழுவினரின் பறை, செண்டை இசை நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு பெரும் துடிப்பை உண்டாக்கியது.

22ம்தேதியும் நடுகல் அறிஞர்களின் கட்டுரை வாசிப்பு தொடர்ந்தது. பின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த தியோடர் பாஸ்கரன் உரையாற்றினார்.  அவரைத் தொடர்ந்து தார்வாட் கன்னட ஆய்வு மையம் கர்நாடக பல்கலைக்கழகத்தில் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற ஷதக்ஷரய்யா உரையாற்றினார். கர்நாடக பகுதி தொல்லியல் ஆய்வு குறித்து அறிந்துகொள்ள ஏதுவாக இருந்தது.

முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் கே.எ.மனோகரன் மற்றும் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரிச் செயலாளர் குமார் தலைமையில் பேராசிரியர் கோவிந்தன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்வு தொடங்கியது. நடுகற்களில் இருந்த கல்வெட்டுகளை திரையிட்டு அதை வாசித்துக் காட்டி அவற்றில் இருக்கும் ஈர்ப்பான சொற்களை குறிப்பிட்டு அதனோடு தொடர்புடைய சங்க இலக்கியப் பாடல்களை கூறினார் தமிழகத் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் இர.பூங்குன்றன்.

வரலாறு மன்னர்களுக்கானது மட்டும் அல்ல. மக்களுக்கானதும்தான் என்பதை உணர்த்தும் நடுகற்களின் முக்கியத்துவம் அறிந்து ஆதிக்கும் ஆதியில் வாழ்ந்த நடுகல் நாயகர்களோடு அலைந்து திரிந்த அனுபவத்தைத் தந்தது நிகழ்வு.