Monday, August 11, 2014

இதிகாச கட்டுடைப்புகள் காலத்தின் கட்டாயமாகிறது
-சூரிய நிலா

2004ஆம் ஆண்டு ‘நதிச்சிறை’ கவிதை நூலின் வழியாக அறிமுகமானவர் ந.பெரியசாமி. பத்தாண்டுகளெனும் நீண்ட இடைவெளிக்குப் பின்  ’மதுவாகினி’  எனும் இந்த நூலின் வழியாக தமது இலக்கிய வேட்கையைத் தீர்த்துக் கொண்டுள்ளார்.

கவிதைக்கான பாகுபொருட்கள் சமூகக் கட்டமைப்பில் ஏராளமாகயிருப்பினும், தனது கவிதைக்கான பாகுபொருளினை, தான் சார்ந்த வாழ்வியலிலிருந்தே எடுத்துக் கொண்டிருப்பது கவிஞரின் மிகப் பெரும் பலமாகவேயுள்ளது. ‘தோத்தான் கோழி’ போன்ற கவிதையில் தன்னை உருவகப்படுத்திக் கொண்டு சமூகத்தை கட்டுடைப்பது. அல்லது தன்னை உடைத்துக் கொண்டு சமூகத்தை கேள்விக்குள்ளாக்குவது என்ற இவரின் கவித்தன்மையுடன் கூடிய உசாவல் வெகு அற்புதம்.

அற்புத திருவந்தாதியில் காரைக்காலம்மை பாடுவார்...
மகிழ்திடே நெஞ்சே மானுடரில் நீயுந்
திகழ்தி பெருஞ் சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே
யாரென்பே யேனும் அணிந் துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே இன்னம் பெருக்கு

அறியாமை உடைய மனதை - மனிதர்களோடு சேர்ந்து மகிழ்வாகயிருக்கச் சொல்லும் பாட்டுதானிது.
தோத்தாத் கோழி நான்
வலியவனிடம் மட்டுமல்ல எளியவனிடமும்
என் பலத்தைக் காட்டுவேன் என்று ந.பெரியசாமி அழுத்தமாக கூறும்போது இதை அம்மையைப் போல ‘மட நெஞ்சே... மனிதர்களோடு சேர் அவர்களோடு மகிழ்வாயிரு’ என்று சொல்லத்தானே வேண்டும்.

மழையற்றும் மிகு வெப்பம் உமிழாதபோதும்
கைக் கொண்டலைகிறேன் என்கிறார்.

அதாவது குடையைக் கைக்கொண்டு அவர் அலையும் போது- பைத்தியமென தலையிலடித்து/முகத்துக்கு நேரும் / முதுகுக்குப் பின் / வசவை வீசுபவர்களுக்கு/எங்ஙனம் புரியச் செய்ய/ மழை விடாது பொழிகிறது/என் கனவு தேசத்திலென்று.

கவிஞன் தனது கனவில் கூட மழையைப் பிடித்துக் கொண்டு திரிகிறான். பிறகு ஊர் என்ன செய்யும்? சிரிக்கத்தானே செய்யும்?

‘மாமாயை’ என்னும் வனத்தில் அலைகிறன்டா
தாமாயுலகனைத்தும் தாது கலங்கிறண்டா
என்று பட்டினத்தார் பாடுவார்.

‘காது அவிஞ்சான்பட்டி’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில் அழகான எள்ளல் தன்மை துள்ளி விளையாடுகிறது. நோய் மிகுந்த நம் தேசத்திற்கு நூலகங்கள் எதற்கு? இப்படி முடிக்கப்படும் இக்கவிதை மிக இலாகவமாக எழுதப்பட்டதொரு காட்டமான கவிதை. ‘வதைகளின் ருசியறிந்தவர்கள்’ என்ற கவிதையும் மேற்படி தொனியில் எழுதப்பட்ட அற்புதமான கவிதைதான்.

இத்தலைப்பிட்ட கவிதைகளில் எழுதப்பட்ட வரிகள்-மக்கள் சீற்றத்தை உள்வாங்கி வெளிப்படுத்தும் நல்லதொரு கவிஞனை அடையாளம் காட்டுகின்றது.


ஈழ வதையில்
வழிந்த ரத்தங்களை வாக்குக்காக
மணக்க மணக்க வதக்கியபடி இருக்கிறார்கள்
ஒரே சட்டியில்
இரு அகப்பையோடு
ஆண்ட கிழவனாரும் ஆளும் குமரியும்.

ஈழப் பிரச்சினையில் எவருக்கும் அக்கறையில்லை. என்ற குற்றச்சாட்டினை இக் கவிதையில் பதிவு செய்துள்ளது பாராட்டத்தக்கது.

‘வன தேவதை’ என்ற தலைப்பிட்ட கவிதை இராமாயண தொன்மத்தை மறுபரிசீலனைக்கு கொண்டு செல்கிறது. சூர்ப்பனகை இதில் வன தேவதையாகிறாள். இக் கவிதையில் மூக்கறுப்பட்டது இராமன். அதுவும் சூர்ப்பனகையின் மேல் காதல் வயப்பட்ட இராமன். இதிகாச கட்டுடைப்புகள் காலத்தின் பட்டாயமாகின்றது. கவிதை அதை முன்னெடுத்துச் செல்கின்றது.

‘மதுவாகினி’ இவரது பல கவிதைகளில் வந்து போகும் இடுகுறிப் பெயராகவுள்ளது. காதலியாக, அன்னையாக, அஃறிணைப் பொருளாக மதுவாகினியை இவர் வடிவமைத்துள்ளார். ஒரு பெயர் பிடித்துப் போய்விட்டால் கனவிலும், நனவிலும் அது தொக்கி நிற்கும் எங்கும் உடனலையும் மனதுக்குள் உட்கார்ந்து கொண்டு மகுடி வாசிக்கும். அப்பெயர் கவிஞனுக்கு பிடித்துப் போய்விட்டது என்றால் இப்படித்தான் பல கவிதைகளில் அப் பெயர் ஒட்டிக் கொண்டிருக்கும். அதனால்தான் குளித்து வந்த மதுவாகினியின்/கூந்தலில் வடிந்த நீர்த்துளிக(ள்)ளை-

நீராடி கேசம் நீவிய துரோபதையை-ஒப்புமையாக்கியது. அந்த பெயரின் பிரேமையின்றி வேறென்ன?

கனவு வேட்டை, பொக்கை வானம் போன்ற கவிதைகளில் சிறுவர்களின் மன கிலேசங்கள் அழகாக பதிவாகியுள்ளன.

வாழ்வெனும் நீண்ட பாதையில் பயணித்து வந்த ஒரு கவிஞன். அதன் திரட்சிகளை நனவின் உக்கிரத்தோடும், மிகு கவனமாக தனது நினைவலைகளை பரப்பிச் செல்லும் உத்வேகத்தோடும் தனது - கவிதைப் படைப்பை உலகிற்கு தருகிறான். இவ்வுலகம் அதை ஏற்றுக் கொண்டால் மிகுந்த போதைக்குள்ளாகிறான். இல்லாவிட்டால் தொடர்ந்து போராடுகிறான். கவிதைகளை நாமள்ளிக் கொள்ளும் வரை கவிஞனின் போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அத்தகையானதுதான் ந.பெரியசாமியின் இவ்விரண்டாம் முயற்சி.

நன்றி: தீராநதி.


Thursday, July 10, 2014

நடுகல் நாயகர்களோடு...


என்றாவதுதான் வாய்ப்பதுண்டு. நண்பர்களோடு ஊர் சுற்றுவது. ஒருநாள் நானும் கவிஞர்.பத்மபாரதியும் நாங்களிருக்கும் ஓசூர் பகுதியைச் சுற்றினோம். ஒரு சிறிய கோவிலைச் சுற்றிலும் சதுரமான பெரிய பெரிய கற்கள் அடுக்கப்பட்டிருந்தன. அதில் நிறைய சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. சிதைந்து கிடந்த கற்களிலும் சிற்பங்கள் இருந்தன. உடனடியாக மனோன்மணியை தொடர்புகொண்டு கூறினோம். அடுத்த வாரமே ஓசூர் வந்துவிட்டார்.

எங்களோடு அவ்வூருக்குச் செல்லும் வழியில் அவர் நடுகல் ஒன்றைப் பார்க்க வேகமாக ஓடினார். எங்களை அழைத்து ஆச்சரியமாக இது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இப்பகுதியில் வாழ்ந்த வீரன் ஒருவனுக்காக நடப்பட்டிருக்கு என்றார். பக்கத்தில் இருந்த சிறிய கோவிலை பார்த்து மீண்டும் ஓடினார். அங்கிருந்த ஒரு கல்லில் கல்வெட்டுகள் இருப்பதைப் பார்த்து அங்குமிங்குமாக ஓடி இலைதழைகளைப் பறித்து வந்து அதில் தேய்த்தார். எழுத்துக்கள் தெரிய ஆரம்பிக்க ஓவென கூச்சலிட்டு வேகமாக படித்துக் காட்டினார். அவரது செயல் தொப்புள் கொடியின் ஈரப் பிசுபிசுப்போடு இருக்கும் குழந்தையை ஏந்திய தாயின் பரவசத்தை நினைவூட்டியது.

நடு கற்கள் வெறும் சாவுச் செய்தி கற்களல்ல. அதற்கும் உயிர் உண்டு. வாழ்வு இருக்கிறது.தன் இனக்குழுவை காப்பதற்காக புலியைக் கொன்றவன், போரிட்டு இறந்த வீரன் போன்றோருக்குத்தான் நடுகல் வைக்கப்பட்டிருக்கு. நடுகற்களுக்கு உண்மையான வரலாறு  உண்டு என்பதை அறிந்த தருணம் மகத்தானது. சில மகத்தான தருணங்கள் மனிதனை செழுமைப்படுத்தும். அன்றிலிருந்து பாறை தகர்க்கும் வெடிச் சத்தம் கேட்கையில் அவசர ஊர்தியின் ஓசை கேட்டு உண்டாகும் பதற்றம் தொற்றுகிறது. ஏதாவது கல்வெட்டுகள் அழிந்திருக்குமோ, பாறை ஓவியங்கள் சிதைவடைந்திருக்குமோவென..

அடிக்கடி மனோன்மணியோடு சுற்றத் துவங்கினேன். அதன் நீட்சியாகத்தான் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையம், ஓசூர் ஏற்பாடு செய்த நடுகற்கள்-தேசிய கருத்தரங்கில் கலந்துகொண்டேன். ஓசூரில் ஜூன்21 மற்றும் 22ம் தேதிகளில் நடந்தது. புத்தக வெளியீடு, தொல்லியலாளர் மங்கை-வீரராகவன் ஆகியோரின் நடுகற்கள் பற்றிய கண்காட்சி, புத்தக கண்காட்சியும் நிகழ்ந்தன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா தொல்லியல்  ஆய்வு அறிஞர்களின் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. ஒவ்வொரு அறிஞர்களும் அவர்களின் கண்டுபிடிப்புகளை குறுந்திரையில்  ஒளிபரப்பி விளக்கம் சொல்லியது சிறப்பான ஏற்பாடாக இருந்தது. கர்நாடக இதிகாச அகாதெமி பெங்களூர் (ஹம்பி பல்கலைக்கழகம்) தலைவர் பேரா.முனைவர் தேவர கொண்டா ரெட்டி, வணிகவரி இணை ஆணையர் பா.தேவேந்திரபூபதியும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அன்று  மாலையில் ஓசூரிலிருந்து பாகலூர் செல்லும் சாலையில் இருக்கும் குடிசெட்லு கிராமத்தில் இருந்த நடுகல் கோவிலுக்கு சிற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, போய் வந்தது எல்லோருக்கும் நல்ல அனுபவமாக இருந்தது. அதைத் தொடர்ந்து இரவு திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் கி.பார்த்திபராஜா தலைமையில் மாற்று நாடக குழுவினரின் பறை, செண்டை இசை நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு பெரும் துடிப்பை உண்டாக்கியது.

22ம்தேதியும் நடுகல் அறிஞர்களின் கட்டுரை வாசிப்பு தொடர்ந்தது. பின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த தியோடர் பாஸ்கரன் உரையாற்றினார்.  அவரைத் தொடர்ந்து தார்வாட் கன்னட ஆய்வு மையம் கர்நாடக பல்கலைக்கழகத்தில் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற ஷதக்ஷரய்யா உரையாற்றினார். கர்நாடக பகுதி தொல்லியல் ஆய்வு குறித்து அறிந்துகொள்ள ஏதுவாக இருந்தது.

முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் கே.எ.மனோகரன் மற்றும் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரிச் செயலாளர் குமார் தலைமையில் பேராசிரியர் கோவிந்தன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்வு தொடங்கியது. நடுகற்களில் இருந்த கல்வெட்டுகளை திரையிட்டு அதை வாசித்துக் காட்டி அவற்றில் இருக்கும் ஈர்ப்பான சொற்களை குறிப்பிட்டு அதனோடு தொடர்புடைய சங்க இலக்கியப் பாடல்களை கூறினார் தமிழகத் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் இர.பூங்குன்றன்.

வரலாறு மன்னர்களுக்கானது மட்டும் அல்ல. மக்களுக்கானதும்தான் என்பதை உணர்த்தும் நடுகற்களின் முக்கியத்துவம் அறிந்து ஆதிக்கும் ஆதியில் வாழ்ந்த நடுகல் நாயகர்களோடு அலைந்து திரிந்த அனுபவத்தைத் தந்தது நிகழ்வு.

Saturday, May 31, 2014

டாக்டர் சித்தார்த்!

பள்ளியின் வளாகத்தில்
நீங்களும் காத்திருக்கிறீர்கள்
எல்.கே.ஜி. அட்மிசனுக்காக.
ஒருவர் பின் ஒருவராகச் சென்றுவர
இப்போது உங்களது முறை
பையனது பெயர் கேட்க
'டாக்டர் சித்தார்த்' என்கிறீர்கள்.
எல்லோரும் உங்களையே வியந்து பார்க்க
பெருமிதங்களோடு வெளியேறுகிறீர்கள்.
அக்கம் பக்கத்தினரும்
அழைக்கத் தொடங்கினர்
டாக்டர் அப்பா... டாக்டர் அப்பாவென.
உங்களது கனவு வளர்ந்துகொண்டே இருக்க
டாக்டர் சித்தார்த்
பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சியடைந்தார்.
ஓவியக் கல்லூரியில் சேர
விருப்பம் தெரிவித்தார்.
அறுந்தது உங்களது கனவு.
விடுவீர்களா என்ன...
விஷப்புட்டி ஒன்றை கையிலெடுக்கிறீர்கள்.
தன் ஆசையைப் பலியிட்டு
டாக்டர் சித்தார்த்
'டாக்டர் சித்தார்த்' ஆனார்!

நன்றி: ஆனந்த விகடன்

நீரைத் தேடிப் பயணிக்கும் வேர்களாக...

படித்து முடித்தோம், வேலைக்குச் சேர்ந்தோம், நன்றாக சம்பாதித்தோம், திருமணம் முடித்து செட்டிலாகிவிட்டோம் எனும் மனநிறைவோடு வாழ்வை நகர்த்தாது தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலர் தன் மாதச்சம்பளத்தில் சிறு தொகையை பகிர்ந்து 1995ல் ‘அன்புக்கரங்கள்’ எனும் அமைப்பை உருவாக்கினர். அதன் மூலம் மேல்படிப்பிற்கு வழியற்று ஆர்வம் இருந்தும் வறுமையால் படிக்க இயலாது தவிக்கும் மாணவ மாணவிகளை கண்டடைந்து அவர்களுக்கு உதவத் துவங்கினர். பின் மருத்துவச் செலவிற்கும் உதவத்துவங்கினர். நீரைத் தேடிப் பயணிக்கும் வேர்களாக தங்களின் பயணத்தை வேறுவேறு தளங்களில் துவங்கினர்.

2004-ல் இரத்தக் கொடையாளர்களை ஒருங்கிணைக்க ‘உதிரம்’ அமைப்பும், கண்தானம் செய்ய விரும்புவர்களுக்காக 2009ல் ‘விழி’ என்ற அமைப்பையும், குழந்தைகளின் மாற்றுச் சிந்தனைப் போக்கை வளர்த்தெடுக்க ‘குட்டி யானைகள்’ என்ற அமைப்பையும் உருவாக்கி அன்புக்கரங்களின் பரிணாமம் நீண்டுகொண்டே சென்றது.

‘கூட்டு முயற்சி’ என்னும் வார்த்தையில் மிகுதியான நம்பிக்கை வைத்திருப்பதால் எந்த ஒரு தனிநபர் பெயரையும் அமைப்போடு பொருத்திப் பார்க்காது எல்லோருக்குமானதாக இருப்பதால் அது தன் தொடர் பயணத்தில் எவ்வித இடையூறுமின்றி வளர்ந்துகொண்டிருக்கிறது.

01 மே 2014 உதிரம் அமைப்புத் துவங்கி பத்தாம் ஆண்டு. ஒவ்வொரு ஆண்டும் மே முதல்நாள் இரத்தக்கொடை முகாம் நடத்தப்படும். தொழிலாளர்களும் பொதுமக்களும் ஆர்வாமாக வந்து பங்குகொள்வார்கள். இவ்வாண்டு இரத்தக்கொடையாளர்களின் எண்ணிக்கை 949 ஆக எட்டியது. ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளும், பெங்களுர் டி.டி.கே இரத்த வங்கியும் வந்திருந்து இரத்தக்கொடை முகாம் சிறப்புற உதவினர்.

குடும்பம் குடும்பமாக நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு தங்களின் மேலான உழைப்பை எவ்வித சலிப்புமின்றி ஆண்டுதோறும் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆணும், பெண்ணுமாக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, அவர்களது குழந்தைகள் ‘குட்டி யானைகள்’ அமைப்பில் ஓவியம் வரைதல், கதை சொல்லல், விடுகதை போடுதல், சிறுசிறு விளையாட்டென கொண்டாட்டமாக இருப்பார்கள். சற்றே வளர்ந்த மாணவர்கள் மரக்கன்றுகள் விநியோகிக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்வார்கள். முகாம் ஆண்டுதோறும் சிறக்க ஒசூர் ஆட்டோ தொழிலாளர்களின் பங்களிப்பு மகத்தானது. அவர்களின் சவாரியில் முகாமின் விளம்பரமும் பயணிக்கும். பழங்கள், பழச்சாறு, இளநீர், கேக், மற்றம் சிறுசிறு பரிசுபொருள்கள் என வருடம் தோறும் முகம் சுளிக்காமல் வழங்கிக்கொண்டிருக்கும் நன்கொடையாளர்களின் தாராளமான மனமும் முகாமிற்கு மகுடம் சேர்க்கும்.

ஓசூரில் வெவ்வேறு அமைப்புகளால் அடிக்கடி இரத்தக்கொடை முகாம் நடப்பதுண்டு. ஆனாலும் மே முதல்நாள் கொடுப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்தபடி இருக்கும். சுற்றுப்புற ஊர்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் தங்கள் இரவுப்பணி முடித்து நண்பர்களின் அறைகளில் தங்கி காலையிலேயே வந்திருந்து இரத்தம் வழங்கி பின்னர் ஊருக்குச்செல்வார்கள். தொழிலாளர்களின் மேதின பணிகளில் முதன்மையாக இரத்தம் கொடுப்பதும் முதன்மையானதாக மாறிப்போனது குறிப்பிடத்தக்கது.

மருத்துவக் குழுவினர், தன்னார்வலர்கள், இரத்தக்கொடையாளர்கள், பார்வையாளர்கள் என திரண்டிருக்கும் அவையின் மையத்தில் ஒசூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களை அழைத்துவந்து ஒவ்வொருவராக அமரச்செய்து துண்டு போர்த்தி, மெடல், கேடயம், மற்றும் சிறு பரிசும் வழங்கி அவர்களை கௌரவித்தது நெகிழ்வான சம்பவமாக இருந்தது.

நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் விபத்துகளின் எண்ணிக்கை பெரும் கவலையை அளித்துக்கொண்டிருக்கையில் உதிரம் போன்ற அமைப்புகளின் பணி மேலும் சிறக்க நாமும் பக்கமிருப்போம்..