Thursday, August 13, 2015

கட்டியக்காரனின் 'நகை'மொழி

கட்டியக்காரனின் 'நகை'மொழி
-ந.பெரியசாமி


நாரதர் கலகத்திற்காக கொண்டு வந்த கனியை அம்மை அப்பனே உலகமென சுற்றிவந்து விநாயகர் கனியை பெற்றுக்கொள்ளும் கதை எல்லோரும் அறிந்த கதைதான். இப்படி எல்லோரும் அறிந்திருந்து புறக்கணிக்கப்பட்டவர்களின் மீதான கரிசனத்தில் அவர்களின் வாழ்வியல் வலியை அதிலிருக்கும் அரசியல் ஏமாற்றத்தை  தன் எள்ளல் மொழியால் கவிதையாக்கி நாமும் அவ்வலியை உணரச் செய்திடகிறார் இசை.  சாக்கடை, கொசு, குடிகாரன், ஈக்கள், பைத்தியம், காலை மாலை நடைக்காரர்கள், டிரைவர், கிளினர், ஊறுகாய் மட்டை, ஸ்கூட்டி, நடைபாதை வியாபாரி, டீக்கடை... இப்படி நாம் அன்றாடங்களில் சந்திக்கக் கூடியன, கூடியவர்களே அவரின் பாடுபொருளாக இருக்கிறது. அந்தக் காலம்  மலையேறிப்போனது தொகுப்பின் கவிதைகள் எள்ளலும், அது நம் உணர்வில் பாய்ச்சும் வலியையும் நாம் நினைவில் கொள்ள அவர்களின் மீதான கரிசனம் நம்மையும் தொற்றும்.

இத்தொகுப்பை சேலம் அம்மாப்பேட்டை சிவா லாட்ஜிற்கும் சமர்ப்பணம் செய்திருப்பார். அந்த லாட்ஜ் வே.பாபு கண்டடைந்த பொக்கிசம். எல்லா லாட்ஜையும் போல வெறும் அறைகளை மட்டும் கொண்டதல்ல. அடுத்தவர்களின் உணர்வை  மதிக்கத்தெரிந்த மகத்தான பணியாளர்கள் இருக்கிறார்கள். நம் இயல்பில் எவ்வித பங்கமும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வார்கள். சமகாலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் பெரும்பாலான நண்பர்கள் வந்து போனவர்களே. கேரள, கன்னட எழுத்தாள நண்பர்களும் வந்துபோயிருக்கிறார்கள். வெறுமனே எல்லோரும் வந்துபோவதில்லை. மனதை நிர்வாணப்படுத்திவிட்டு தக்கையாக வெளியேறுவார்கள்.  அறைகளின் சுவர்களில் எங்களின் சந்தோச, துயரக் கண்ணீரும் கவிதைகளும் படிந்து கிடக்கும். எத்தனை முறை சுரண்டி, எத்தனை முறை பட்டிப்பார்த்து, எத்தனை முறை பெயிண்ட் அடித்தாலும் போகாது. உள்ளிருக்கும் செங்கலோடு உறைந்து கிடக்கும். இசையின் இச்சமர்ப்பணம் நெகிழ்வானது.

நளினக்கிளி கவிதை தொகுப்பின் மணிமகுடம். இசையை நான் காலாகாலத்திற்கும் கொண்டாட இக்கவிதை போதுமானது. நாம் எவர் ஒருவர் மீது கரிசனம் காட்டத் துவங்குகிறோமோ அப்பொழுதே சுரக்கத் துவங்கும் அவர்களின் உள்ளிருக்கும் அழகுணர்ச்சி. தன் கை அசைவு சாம்பல் நிறப் பறவையாக அசைகிறதென்பதை அக் கிளினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நம்மைப்போலவே. இசை கண்டடைந்திருக்கிறார். இனி எந்த கிளினர் கை அசைத்தாலும் அச் சாம்பல் நிறப் பறவையோடு இக்கவிதையும் மிதக்கும் காட்சியை காண்போம்.

தின்று பெருத்ததால் நடக்கிறார்களோ, ஆரோக்கியத்திற்காக நடக்கிறார்களோ, பெரிய மனிதர்களின் தயவு தேவை என்பதற்காக அவர்களோடு சேர்ந்து நடக்கிறார்களோ, ஜால்ராவை நடையிலும் போட முடியும் என்பதற்காக இருக்குமோ அரசியல்வாதிகளுடன் நடக்கும் அல்லக்கைகளின் நடை, இசையின் 'இன்னொருவன் சொல்கிறான்' கவிதையில் வரும் காரணமாக இருக்குமோ என அவ்வப்போது கேள்விகள் மனதில் தோன்றும். உணவில், உழைப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்திற்கு காரணமான கார்ப்ரேட் அரசியலால் உலகத்தை காலை, மாலை நடைக்காரர்களாக மாற்றிக்கொண்டிருப்பதை இசை கூத்தில் வரும் கட்டியக்காரனாக மாறி தன் 'நகை'மொழியால் தொகுப்பில் சில கவிதைகளில் காட்சிபடுத்துகிறார்.

வெள்ளத்தால் ஆற்றின் கரை ஒதுங்கிக் கிடக்கும் மரங்களைப் போல திடுமென காணக்கூடும் சில பைத்தியங்களை. பூட்டை சுமந்தபடி, பாட்டில்களை சுமந்தபடி, ஹெல்மெட்டை மாட்டி. இவர்களில் பெண்ணாக இருப்பின் நம் சமூகம் அவர்களையும்  பிள்ளை சுமக்கச் செய்திடுகிறது. இவர்களின் கடவுளாக அவதரித்தவர்கள்தான் டீக்கடை, நடைபாதை வியாபாரிகள். திட்டிக்கொண்டே எதையாவது தின்னக் கொடுத்துவிடுவார்கள். சில நேரம் சுடுதண்ணிரை மேலே ஊற்றி துன்புறுத்தினாலும் அவ்வப்போது டீயை கொடுக்கும் புண்ணியவான்களும் இவர்களே. அப்படி வாங்கப்பட்ட ஒரு டீயை பார்க்கும் இசை தெய்வமே/இந்த டீ/சூடாதிருக்கட்டும்/சுவை குன்றாதிருக்கட்டும்/பருகப் பருக பல்கிப் பெருகட்டும் என வேண்டுதல் வைக்கிறார். நமையும் வைக்கச் செய்திடுகிறார்.

மின்கம்பம் சாய்க்கும் டாஸ்மாக், வித்யாபதியிடம் சரணடைதல், கண்டடைய வேண்டிய அரூப விரல், நடந்தபடியே இருக்கும் பயக்கிறுக்கு, எச் செயலுக்காக போகிறோமோ அச்செயலுக்காக நமை தகவமைத்துக்கொள்ளும் போக்கைக்கூறும் 'தம்பி' கவிதை, திருட்டுக் களையை போக்கும் ஈக்கள், நினைவில் தழுவும் காதலி, முட்டை புரோட்டவுக்குள் குதிக்கும் ஆனந்தன், நமக்கான ஊறுகாய் மட்டையை தேடச்செய்தல், ஃபேனை ஏற்றிவைக்கச் செய்திடுகிற பாலை, நமை வாங்கும் காற்று, ஒப்புக் கொடுக்க வைக்கும் 'நைஸ்', தனிமையின் விளையாட்டுகள், மடை மாற்றும் கனவு, உழைப்புக் கனி ஈந்தவோர் மீதான அக்கறை, வாணிஸ்ரீ வருகைக்காக உலகை திறந்து வைத்தல், விநாயகர் சுமந்திருக்கும் கனியின் ரகசியம், வீட்டை உலகமாக்கியவர்களின் தொடரும் துயரம், குற்ற உணர்வின் அறவுணர்ச்சி, குழந்தைகளின் பசிக்கு மண்ணைத் தின்னக் கொடுக்கும் சமூக அவலம், காமத்தின் தேவை வடிய உதிர்க்கும் தத்துவக் கணக்கு, லூஸ்கேர் இயக்கும் ஸ்கூட்டிகளின் தடத்தில் அங்கப்பிரார்த்தனை இருத்தல், இணங்கி இருக்கவிடாது தொரத்தியபடி இருக்கும் அதிகாரம், கறைபடாதிருக்க பாதுகாப்பு பட்டையை சுமந்தபடி இருக்கும் துயரம், மலையேறிப்போன காலம் குறித்த சலிப்பு, உளுந்து வடைகளின் உறுதித்தன்மை என வலியூட்டும் நகைப்பின் மொழியில் லயித்துக்கிடக்கச் செய்திடுகிறார்.

தன்னில் விழும் சறுகின் பாரத்தைக்கூட நூல் பிரித்து வட்ட வட்டமாக அலைவு கொள்ளச் செய்யும் நீரின் தன்னையில் தான் கொண்ட, பார்க்க நேர்ந்த துயர்களை தனக்கான மொழியின் வல்லமையால் நறுக்குத் தெறித்தாற் போன்ற மின்னடிப்புகளால் மனதில் அலைவுகளை ஏற்படுத்தக்கூடியன இசையின் கவிதைகள்.

வெளியீடு- காலச்சுவடு.

நன்றி- கல்குதிரை

Tuesday, June 30, 2015

மீதமிருக்கும் அன்புகளினாலான வண்ணங்களும் சிற்பங்களுமான சொற்களின் வெளி

மீதமிருக்கும் அன்புகளினாலான வண்ணங்களும் சிற்பங்களுமான சொற்களின் வெளி
- ஜீவன் பென்னி
நம்பிக்கையின் மிருதுவான சொற்களிலாலான கவிதையுடன் தன் தொகுப்பைத் தொடங்கியிருக்கிறார் ந.பெரியசாமி. பிரியங்களி னாலான சொற்களுக்கும் அவற்றினூடான செயல்பாடுகளுக்கும், காட்சிபடுத்துதலிலாலான அழகியல் வெளிக்கும் மிக அருகிலிருப்பது மான கவிதானுபவமே ந.பெரியசாமி கவிதைகளில் வழிந்திடும் சிறு சிறு துளிகளாகயிருக்கின்றன. சொல்லிக்கொண்டே செல்வதன் மூல மான அவதானிப்புகளும் விவரணைகளும் சொற்சித்திரங்களும் அவரின் முந்தைய தொகுப்புகளைவிட கொஞ்சமேனும் மேம்பட் டிருக்கின்றன மேலும் செழுமை அடைந்திருக்கின்றன, ஆனால் கவிதைகளைத் தேர்ந்தெடுத்தலின் மிக இளகியதன்மை இத் தொகுப்பிலும் படர்ந்திருக்கின்றன. சொற்சேர்க்கையின் அளவுகளும் கச்சிதத்தன்மையும் ஒரு இடைவெளி வரை பெருங்கவிதைகளிலும் படர்ந்திருப்பதை மிக உற்சாகமாக கவனிக்க முடிகிறது. குறிப்பாக சிறுகவிதைகளின் பிரதான அடர்த்திகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களினாலே வெற்றிகரமாக அமையப்பெற்றிருக்கின்றன. தொடர்ந்து கடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அனுபவங்களின் நிழல் களையே வார்த்தைகளாக எல்லாக்கவிதைகளிலும் பரவவிட்டிருக் கிறார் ந.பெரியசாமி.
அகமன மாற்றங்களினூடாக மாறிவருகின்ற மதுவாகினியை மடி யிலிட்டு வலியின் சோர்வு கடக்க ஆசுவாசப்படுத்தி உறங்கவைக்கும் குழந்தைமையின் சந்தோசங்களையும், கேள்விகளையும், பதில் களையும், விளையாட்டுக்களையும் உணரமுடிகின்றன - வலியின் சித்திரங்கள், சாயற்கனி, நிலையானது - இக்கவிதைகளில். சிறு வெளிச்சங்களின் அசைவுகளும் அன்புகளும், சிறு சத்தங்களின் மெலிதான கோட்டோவியங்களும் மனதின் வெறுமைகளை, முன்னெப்போதுமில்லாத சமநிலையின் வேர்களை எப்படியோ மாற்றுகின்றன - அணிலாடுமறை, எனது கடல், சென்னசேகவர், வண்ணக்கிளி, வளர்ப்பு நிழல், நிலையானது - இத்தலைப்பிட்ட கவிதைகள். காட்சிகளின் அழகுநிலைகளின் ஈரப்பதங்களினாலான இச்சொற்கள் பல ஞாபகங்களை உருவாக்குகின்றன. புத்தரின் சாந்தியை ஒத்த அடர் திராட்சை நிறச்சாறு பரவிடும் அறைக்கு வரும் ஏங்கல்ஸையும், மார்க்ஸையும், ஜென்னியையும், இன்னும் அதிக மானவரையும் ஒரு திரையில் நகரும் பிம்பங்களெனக் காண்பிக்கிறார் “ஏங்கல்ஸ் வந்திருந்தார்..” கவிதையில். “யாரும் தீண்டாத மூலையில் / கழிவை மிதக்கவிட்ட குளத்தினுள் / முத்தமிட்டபடி இருந்தன ஆமைகள்” - இம் மூன்று வரியில் மிதந்துகொண்டிருக்கின்றன மொத்தக் கவிதையும். கவிதைகளுக்குள் நுழைந்து பழக்கப்பட்டு விட்ட பூனைகளும் காணக்கிடைக்கின்றன. மழையின் சொற்களிலாலான- உயிர்ப்பு, களியாட்டம், வெளியே மழை பெய்தது... மழை ஆகிய கவிதைகளின் அடர்ந்த குளிர் நிறைந்த சித்திரங்கள் இன்னுமின்னும் அமைதி கொண்டு ரசிக்கவும் அனுபவிக்கவும் வைக்கின்றன. ஜீவிதங்கள் முடிந்திடாத பெருவாழ்வின் நகரத்தையும், லௌகீக தேவைக்கான சோம்பல் படிந்த வாழ்வின் குவி மற்றும் குழி ஆடிகளின் மாறுபட்ட புரிதல்களையும். சரியான ஊதியங்களற்ற உழைப்பின் வலிகளையும், தரப்படுத்துதலின் வழியேயான வேதனைகளையும், புறாக்களின் முத்தங்களையும், வறட்டியாகி விட்ட நிலவையும், எதுவுமற்ற வாழ்வில் கிடைத்துவிடும் வெறுங்கையின் பிசுபிசுப்புகளையும் மனதின் ஓர்மையின் ஊடாக அனுபவிக்கவும் பிரியங்கொள்ளவும் முடிகின்றன.
காந்தி வந்து செல்லும் கவிதையில் வெளிப்பட்டிருக்கும் நிகழ்கால அரசியலுக்கான அங்கத சொற்றொடர்கள் வெகு சீக்கிரம் வசீகரிப்ப தான குறுங்கதையென இருக்கின்றன. நிழலில் வளர்த்து வருவதான பசுவின் சித்திரங்களும், நீலம் புயலுக்குப் பிறகான குட்டிப்பசுவின் வருகையுமான “வளர்ப்பு நிழல்” கவிதை பேசும் மௌன அழகியல் மிக அழகாகயிருக்கிறது. சாக்பீசால் வரைந்திடும் ஓவியங்களின் பூக்களும் கனிகளும் உயிர்பித்து மின்ன அவரவருக்கானவற்றை எல்லோரும் எடுத்துசென்றதும் தழும்பும் வெற்றிடமும், பிளந்த மாதுளையின் மிச்சமெனயிருக்கிற பிசுபிசுப்பின் வெறுமையும் கவனிக்கக் கிடைக்கின்றன - (எஞ்சியவை & நிலையானது தலைப் பிட்ட கவிதை). மெல்லிய சப்தத்தோடான இரண்டு தோட்டக்களால் நிறைவுபெறுகிறது அழகும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த வேடிக்கைகளினாலான இப்பெரும் வாழ்வு.
யாருமற்ற தனிமையின் நிகழ்வுகளை ஒரு உறைவிடம் என சொல் லும் இக்கவிதைகள், நிகழ்கால அரசியலையும் அதன் முன்னேற்றப் பாடல்களையும் எள்ளி நகையாடுகின்றன. ஒரு வரையறையில் நிகழ்த்துவதான இவ்வசைவுகளின் வாக்கியங்கள் எப்போதுமிருக் கும் துன்பங்களின் எண்ணிலடங்கா நுட்பங்களைச் சொல்கின்றன. பக்கத்து சீட்டின் சகமனிதன் சாய்ந்துகொள்ள வசதியாக தோள் தரும் மனிதனின் விருப்பமும் அவ்வாறில்லாத மனதின் செதில்களும் கலந்தும், கலைந்தும் கிடக்கின்ற தொகுப்பு இது. ஒரு நுட்பத்தில் உரை நடையின் கவித்துவ அழகு கொண்ட சொற்களென பாவிக்கப்படவும் வாய்ப்பிருக்கின்ற சில நெடுங்கவிதைகளின் இயல்புகள் கொஞ்சமேனும் சலிப்பை ஏற்படுத்துகின்றன. சிறு சிறு கவிதைகளின் தேர்ந்தெடுப்பு காரணிகளும், நுட்பச்செறிவும் ஒரு வழியில் நின்று வெறுமையை ஏற்படுத்தாமல், வாசிப்பிற்குப் பிறகும் எப்பொழுதும் மனதிற்குள்ளியங்குவதாக அமைக்கப்பட்டிருக்கும் அழகியலும் கொஞ்சம் கவனிக்கும் படியாகவும், ஆழ்ந்த புரிதலுக்குமானதாகவும் இருக்கின்றன. தொடர்ச்சியான இதன் வடிவங்கள் மற்றும் சொல் நேர்த்தியின் செயல்கள் சார்ந்து ந.பெரியசாமி கவிதைகளின் முன்னேற்றங்கள் ஆர்வங்கொள்ளும் விதமாகவும் நம்பும்படியாகவு மிருக்கின்றன. மீதமிருக்கும் நம்பிக்கைகளும் அன்புகளும் எவ்வளவு எழுதிய பிறகும் மீதமிருப்பவை தான், அதைத்தான் ந.பெரியசாமி தன் வானமென விரித்திருக்கிறார் சில பறவைகளுடன் நிறைய்ய நீலங்களுடனும்.
தோட்டாக்கள் பாயும் வெளி - ந. பெரியசாமி
- புது எழுத்து,- ஆகஸ்ட் 14 - ரூ70/-

Sunday, June 21, 2015

நிழல் கதை

நிழல் கதை

எழுந்திரி நேரமாச்செனும் குரலுக்கு
போர்வைக்குள் பதுங்கும் குழந்தையாக
புலர்பொழுதில்
தன்னை காணாமலாக்கிக்கொண்ட பனி
வெளிவரத் துவங்கிய அந்தியில்
பெரும்வனமடங்கிய கனியின் நிழல்
தங்க இடமற்று தவித்தது
பிடித்தென் மூத்த கிழவியிடம் கொடுத்தேன்
பாதுகாப்பாக நிலாவில்
பதுங்கியிருக்கிறாள்
என்றாவது இவ்வுலகம்
விதையற்று தவிக்கையில்
விழச் செய்வதாகக் கூறி.
*

தித்திப்பு

நிலங்கள் ஐந்தின் பூக்களை
மனத்திரையில் காட்சிபடுத்தி
நினைவில் வடியும் வாசனைகளை
சுவைத்தபடி இருந்தேன்
பதற்றமாக வந்தவன்
தன் புத்தகத்தில் இருந்த ராணித் தேனியை
காணவில்லை என்றான்
புன்னகையோடு தலைவருட
மீண்டும் பக்கங்களை புரட்டினான்
தேனீக்களின் இசை குறிப்புகள்
அதிசயித்தவன் விழி விரிய
பெரும் வனமாகியது வீடு
பூக்கள் நிறைந்த வேப்பமர குச்சொன்றில்
தேன் கூடாகிக்கொண்டிருந்தேன்
தித்திப்பில் கனிந்துகொண்டிருந்தது உலகு.

நன்றி : கணையாழி
*

Friday, June 19, 2015

பன்றிக்கு ரோஜாக்களை தருபவன்...

பன்றிக்கு ரோஜாக்களை தருபவன்...
வெய்யிலின் குற்றத்தின் நறுமணம் தொகுப்பு குறித்த என் வாசிப்பனுபவம்...
தங்க நாற்கர சாலைகளுக்காக பொக்லைனுக்குப் பிறந்த ராட்சச கைகள் புதைமேடுகளை அள்ளி வீச எழுந்த ஆதித்தாய் மாறிக்கிடக்கும் ஊரில் அவளின் அடையாளங்கள் அழிந்துபோய் இருக்க எங்களின் வாசனையை நுகர்ந்தபடி வீடு வந்து சேர்ந்தாள். சிதறிக்கிடக்கும் நாளிதழ்களை நோட்டமிட்டாள். மரம் தன்போக்கில் நின்றுகொண்டிருக்க அதன் இரு கிளைகளில் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் தொங்கவிடப்பட்டிருந்த படம் பார்த்து அதிர்ந்தாள். இன்னமும் நீடித்தபடி இருக்கும் பாலியல் வன்கொடுமை செய்திகளை எல்லா நாளிதழ்களிலும் பார்த்தவள் எரிச்சலுற்று ஓங்கி ஒப்பாரியிடத் தொடங்கினாள். அடங்கா மிருகங்கள் இன்னும் நிகழ்த்தக்கூடும் தன் வேட்டையை. மான்கள் தப்பி ஓடித்தான் பிழைத்திருக்க வேண்டுமென. எங்களை அணைத்து பாதுகாப்பற்றுப்போன இம் மண்ணின் மீதமிருக்கும் கதைகளைத் கூறத் துவங்கினாள்.
கொலைதேசம் ஒன்றில் ஒரு இனத்தையே கொன்று கொன்று வெவ்வேறு காரணங்களைக் கூறி சடலத்தை பூவாக்கி புத்தருக்கு படைத்துக்கொண்டிருக்க, இக்கொடூரத்தின் சாட்சியாய் நின்றுகொண்டிருக்க இயலாது தவித்தபடி இருக்கும் புத்தரின் கதையைக் கூறி தன் மடியில் படுத்துறங்கும் நேசிக்கும் வளர்ப்புப் பிராணியைக் கொல்வதும் தன் சக உயிரிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு இனத்தைக் கொல்வதும் வேறு வேறானதல்ல என்றாள்.
பிழைக்குப் பிறந்த பிள்ளைகளைப் பார்த்து பதறி செத்துத் தொங்கும் குறியை அறுத்தெறிந்து மனித குமாரனாகிய அப்பாக்களின் துயர்தொடங்கி...
வனம் ஒன்றில் தனித்திருக்கும் பழந்தாயொருத்தியின் துயர்களை கசிய விட்டபடி இருக்கும் புல்லாங்குழல்...
துரோகங்களுக்குப் பின் தன் ரகசியப் பேழைக்குள்லிருந்த சர்ப்பமாக தன்னுடலை மாற்றி வேட்டையில் விரல்களில் ஊறும் ரத்தப் பிசுபிசுப்பை நக்கும் அம்மா...
எரியும் கஞ்சாபுகையில் சுவாசம் தேடி உடைந்த சாராய தம்ளரில் அம்மாவின் வாசனையை அறிபவன்...
வாழ்வு சாவு குறித்த புரிதலிருப்பவர்களுக்கு கிடைக்கக்கூடும் போதுமடா இனி செத்துத் தொலைக்கலாம் எனும் பெரும் நிறைவுகொள்ளும் தருணங்கள். மதுப்புட்டி ஒன்றை சில்க் சிமிதாவின் உடலாக்கி அதனுள் தம்புராவின் இசை நரம்புகளை பின்னி, ரெசோ செரஸின் பியனோ கட்டைகளில் தேங்கிய இசையை மீட்டெடுத்து, ஒசோ, புத்தன், மகதலேனா, சில்வியா பிளாத்தென ஆளுமைகளை புட்டியினுள் உலாவவிட்ட துயர் ஞாயிறொன்றில் விருப்பமுள்ளவர்களை சாக அழைப்பவன்..
துரோகத்தின் வலியால் ரௌத்திரம் கொண்டு கொலைக்கு அலைபவன்..
ஜீவன் மிக்க பறையையும், உணர்வுகளைக் கீறும் பாடலையும் பிள்ளையிடம் ஏற்றுக்கொள்ள இறைஞ்சும் நிலமற்ற தகப்பன்...
ஊராரின் நிர்வாண ரகசியம் அறிந்து அரைக்கூலியில் வாழ்வை நகர்த்தும் சுடலை நாசுவன்...
பிள்ளை விற்ற பெரும் வாழ்வில் பிரார்த்தனையிலிருப்பவனை கொல்ல உடலில் கடவுள் புணர்ந்த யோனிகளோடு இருப்பவன்...
எல்லாவிதமான சித்திரவதைகளையும் தாங்கிக் கொண்டு தன் மொழியையும் ஊரின் பெயரையும் ஞாபகப்படுத்த தாங்கவியலா துயரோடு அலைபவன்...
நினைவிலிருக்கும் வாழ்வின் உடல்களைப் புதைத்து பனங்கிழங்கையாவது பற்றிக்கொண்டு வாழ முற்படுபவனென இம் மண் தந்த பெரும் துயர்களோடு வாழ்ந்தவர்களின் கதைகளைக் கூறிய அலுப்பில் உறங்கினாள் ஆதித்தாய்.
மழை நிரம்பிய குளம் பார்க்க வந்த சூரியனை தன் தூண்டிலில் சிக்கவைத்திட காத்திருக்கும் கிழவன்...
கடல்நிரப்பி தாவரங்களின் வேர்களாக கிடக்கும் எலும்புக்கூடுகளை உயிர்ப்பித்து பயணிக்கும் மழைத்துளி...
ராட்டினக்காரனுக்காக காத்திருக்கும் சிறுவர்களாக மழைக்காக காத்திருந்து மழையைச் சேகரிக்கும் குருவிகள்..
தவளை வீட்டில் வசித்து தாமரைத் தண்டோடு உரையாடி தொலைத்தவைகளை குலசாமி தருமென நம்பி கழுதியிரவில் வெண்குதிரையேறி பறந்த ஆலமரத்தான்...
முற்றத்தில் மலர்ந்த கோலம் ரசித்து, முதல் முத்தத்தின் இசை உணர்ந்து, சுடரும் ஒளியின் நடனம் ரசித்து, யாமத்தின் ருசியை முலைக்காம்புகளில் தேடி திருடத் துணியும் கணத்தை உருவாக்கும் திராட்சை பூக்களின் பாடல்...
தன் தொட்டிச் செடிக்கு மழையைக் கொண்டு வர கனவில் தொலைந்து சாப்ளின் நாயோடும், நகுலனின் பூனையோடும் விளையாடிக்கொண்டிருப்பவன்...
நாடோடியின் மனற் திராட்சையை ருசிக்கத் துவங்கிய பாலையின் அனற்காற்று...
குறிஞ்சி யாழின் சாதாரிப்பண் மீட்க காந்தள் மலர்ச்சூடி மலைக்குறவனாக உருமாறி மீ மிருக நடனமாடுபவன்...
மன்புழுக்களின் முத்தங்களில் மயங்கி நிற்கும் வேர்கள்..
உளுந்து துவையலுக்கு உடலையே எச்சிலாக ஊறச்செய்யும் அம்மாக்களின் கதை...
சாராயம் மணக்கும் உதடுகளால் சமணமுனி சொன்ன நிசி மழை கூத்து...
தான் இருக்கும் அறையின் நிர்வாண ரகசியம் அறிந்த மீன்களுக்கு தொட்டியாகி சகோதரனும் காதலியும் முத்தமிட்டுக்கொள்பதை அறிந்துகொண்டவன் கதையென விவரித்த காட்சிகளில் வியப்புற்று, அதனோடு பயணித்து நாமும் நம் கனவுகளோடு ஆகாயம் பறக்கச் செய்தாள் ஆதித்தாய்.
தங்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும் ரகசியம் அறிந்தவர்கள் குழந்தைகள். ஒரு பட்டாம் பூச்சியை வாங்கி அது பறந்து திரிய பூங்காட்டையே உருவாக்கச் செய்து, உடலையே இனிக்கச் செய்யும் முத்தத்தை கொண்டிருப்பவள்...
என்றோ பார்க்க நேர்ந்த சிறுமியோடு வய்லட் நிறப்பூ குறித்த உரையாடலில் மணந்திருந்து வய்லட்நிற முத்தங்களைப் பெற்று இன்னமும் வெற்றிருக்கையில் உதிர்ந்து கிடக்கும் நாவல் பூக்களை வேடிக்கை பார்த்திருப்பவன்...
கணக்கிலடங்கா முத்தங்களைப் பெற்றதன் நிமித்தம் பொம்மைகளில் களித்த வேடிக்கையில் தாயை தொலைத்த குழந்தை...
பொருள் தேடி பொருள் தேடி எதனோடும் லயித்திருக்க இயலாது ஓடிக்கொண்டே இருப்பவர்களின் அசைக்காதிருக்கும் சபிக்கப்பட்ட கழுத்தை நினைவூட்டி ஆகாயத்தை விரித்தும் சுருக்கியும் வி¬ளாயடுபவளென குழந்தைகளின் கதையைக் கூறியவள் மீண்டும் தொடர்ந்தாள்.
தன் கறுத்த தேவதையின் முத்தத்தை முட்களாலும் துளைக்க இயலாத காற்றின் குமிழியாக்கி அவளற்ற பொழுதுகளில் குமிழியின் விரல் பிடித்து வாழ்ந்துகொண்டிருப்பவன்...
நம்முள் இருக்கும் இசையை நாம் கண்டடையும் தருணம் மலரும் பூக்களைக் காண இயலாததை ஒத்தது. நம் விருப்பியவளின்/விரும்பியவனின் வருகை அதைச் சாத்தியப்படுத்தும். தன்னுள் இருக்கும் வாத்தியத்தை கண்டெடுக்க கோருபவன்...
காமத்தின் யாமருசி அறிந்தவன்...
பிரியத்திற்குரியவளால் மொத்த வாழ்வுக்கும் போதுமான கனவுகளை நிரப்பிக்கொண்டவன்...
பன்றிக்கு ரோஜாக்களை தருபவன்...
காலி செய்ய இயலாத கோப்பைகளோடு இருப்பவனின் கதைகளென பெரும் காதலில் களித்திருக்கச் செய்தாள்.
இச்சமூகம் எல்லோருக்கும் நிறைவான வாழ்வை தந்துவிடவில்லை. மூன்று வேளையும் பசியாறினேன் என்பது பலருக்கு பெரும் கனவு. சில வீடுகளில் வாழும் நாய்களுக்குக் கிடைக்கும் உணவை பலருக்கு பண்டிகை நாட்களில்தான் பார்க்க முடியும். இப்படியான அவலச் சூழலில் எதையாவது செய்து பசியாற வேண்டித்தான் இருக்கிறது. ஒற்றைக் குச்சியின் முனையில் படுத்து வித்தைக் காட்டும் குழந்தையைப் பார்த்து பிச்சையிடாது போவோரின் சட்டையை பிடித்து உலுக்கி பிச்சையிடு இல்லையேல் குழந்தையை தாங்கும் கையைத் தட்டிவிடுவென ஆவேசமானாள்.
நம் ஏமாற்றங்களின் பட்டியல் நீளமானது. நிலம் இழந்த கதைகளில் மனம் பதைக்கும். பிறர் கொழுக்க தூண்டில் முள்ளில் செருகப்படும் மண்புழுவாக வாழ்ந்து மடிந்த நம் பாட்டன்களின் வாரிசுகளானவர்கள் சுரப்பற்றுப்போன முலை பெருத்த நகரத்தில் திருடர்களாக அலைவுறும் அவலக் கதையைக் கூறினாள்.
குற்றங்களின் வழியாக கடவுளை அடையும் வழியைக் கூறிய கன்னியாஸ்த்திரி...
மூதாதைகளிடம் உறிஞ்சிய ரத்தத்தை மீண்டும் மண்ணில் சிந்த வைக்க அம்பு தூக்கி நிற்கும் வழித்தோன்றல்களின் ஆவேசம்...
தேவைகளை மட்டும் உறிஞ்சிக்கொண்டு மீதியை குப்பையாக்கும் போக்கு நம்பிடையே தொன்றுதொட்டு வரும் பழக்கம். பஃப்பூன்களை வெறும் சிரிப்பூட்டும் எந்திரமாக மட்டுமே பார்த்து காட்சி முடிய வெளியேறிவிடுவோம். அவர்கள் வாழ்வு குறித்து கிஞ்சித்தும் அக்கறையற்றுதான் இருக்கிறோம். பெரும்பாலானவர்களுக்கு போதைக்கு தொட்டுக்கொள்ளும் ஊறுகாய்க்கான இடத்தைத்தான் கொடுத்திருக்கிறோம். அவர்களுக்கு அள்ளிக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை அவர்கள்மீதான அக்கறையைக்கூட வெளிப்படுத்த தவறிவிடுகிறோம் என பஃப்பூன்கள் குறித்த கதையைக் கூறினாள்.
கடலும் கடல் சார்ந்த பகுதியை நெய்தல் என்பர். முல்லையும் குறிஞ்சியும் திரிய பாலை என்பர். ஆனால் பாலைக்கான சூழல் அதிகம் பொருத்தமாக இருப்பது நெய்தல் நிலத்திற்குத்தான்.பிழைத்துத் திரும்புதல் நிச்சயமற்ற வாழ்வு ஒருபுறம் இருந்தாலும், அண்டை நாட்டின் சிறைபிடிப்பும் சித்ரவதைகளும் பெரும் துயர்தான். வான்விரிந்த கடலை கழிவு நீர் குட்டையாக்கி காக்கும் கொற்றவையை கதிர்வீச்சால் நோய்மை அடையச் செய்த பாவனை அரசுகளின் பிரகடனங்களை நம்பி வாழ்வை நகர்த்தும் பரதவர்களோ பூமிக்கும் ஆகாயத்திற்கும் இடையில் கழுகின் அலகில் சிக்கித் தவிக்கும் மீனாக வாழ நேர்ந்த துயரை கடலின் மொத்த கரிப்பையும் தன் கண்ணீர் துளிகளாக்கி அலுப்பில் அயர்ந்தாள் ஆதித்தாய்.
நீண்டு கொண்டிருந்த இரவில் கேட்ட கதைகளால் தூக்கமற்றுப்போய்விட அவளின் துயர்களை பெரும் குளமாக்கி சக மனிதர்களை மீன்களாக்கி பொரியைத் தூவி எல்லோரையும் ஓரிடத்தில் குவியச்செய்து விதை இழந்து நிலம் இழந்து தொழில் இழந்து நிலம் சார்ந்த வாழ்வின் அழகியலை இழந்து மோசடிகளுக்க துணை போகும் கள்ள மௌனத்தோடு நிலங்களை தொலைத்து பெரும் அறுவடைக்காக கனவு கண்டு பொருள்தேடி ஓடியபடி இருக்கும் வாழ்வில் எழுந்த குற்றஉணர்வுகளை பகிர்ந்தபடி இருந்தேன்.
நன்றி - திணை