Saturday, February 18, 2017

 தோழர்
Elancheral Ramamoorthy
ந.பெரியசாமியின் நான்காவது கவிதைத் தொகுப்பு
“குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்”
பூங்கா தேவதை
தன் பிரசன்னத்தால்
எல்லோரும் சூழச் செய்தாள்
குட்டி தேவதை
கண்களை இறுக மூடச் சொல்லி
தேவைகளைக் கேட்டறிந்து
சொற்களைப் பிறப்பித்துப் பொம்மைகளாக்கி
கையளித்து மறைந்தாள்
அவரவரும் தம் பொம்மைகளோடு
உரையாடியபடியே கலைந்தனர். பக்-19
குழந்தைமையின் மீது கொள்கிற அக்கறைகள் அதிகமாகவேண்டிய காலம் இது. ந.பெரியசாமியின் கவிதைகளில் குழந்தைகள் உலகம் பற்றிய கனவு நனவுச் சித்திரங்கள் கொண்ட நூல் இது. மற்ற தனது தொகுப்புகளிலிருக்கிற கவிதைகளுடன் புதிய கவிதைகள் இணைக்கப்பட்ட தொகுப்பு இது. இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் சொற்றொடரைப் பேசத் துவங்கியதும் குழந்தைகளுக்குப் பாடம் வாசிக்கவும் ஓவியங்கள் வரையவும் நடனமாடவும் கற்றுக் கொடுத்துவிடவேண்டும் என பெற்றோர்கள் ஆசைப்படுகிற பொருளியல் புகழ் நோய் அதிகரித்துவிட்ட காலம். குழந்தைகளின் செயல்பாடுகளை ஆச்சர்யத்துடன் பேசி மகிழ்வதும் அதன் மீது எதிர்கால புகழ் போதையை ஏற்றுவதுமாக நடுத்தரக் குழந்தைவாசிகள் பழக்கப்பட்டுவிட்டார்கள். நவீன வாழக்கையில் குழந்தைகள் ஏற்கும் கதாபாத்திரங்கள் மிகவும் சிக்கலானது. பெற்றோர்களுக்குப் புகழையும் செல்வத்தையும் அள்ளி அள்ளிக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் கடமைப்பட்டவர்களாக இருப்பதை ந.பெரியசாமி தன் கவிதைகளில் பேசுகிறார்.
குடும்பத்தில் குழந்தைகள் வெகுவாகக் குறைந்து போய்விட்ட காலமும் இது. அச்சுருத்தும் எதிர்காலப் பொருளாதார வாழ்வு. பணத்தையும் பணப்பரிவர்த்தனை அட்டைகள் கடன் அட்டைகள் சூழப்பட்ட வாழ்க்கையில் ஆறுதல் தந்து கொண்டிருப்பவர்கள் குழந்தைகள். ஒவ்வொரு குழந்தையும் சுட்டுவது எதிர்காலத்தை நமக்கான எதிர்காலத்தை. ஆனால் அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய அக்கறையோ ஆர்வமோ சிலாகிப்போ இல்லாதவர்கள் குழந்தைகள். உண்மையைப் பேசுவதனால் குழந்தைகளுக்காகத்தான் பெற்றோர்களில் சில கலைஞர்களாக மாறத்துவங்குகிறார்கள். குழந்தைகள் மூலமாகத் தான் அச்சத்தை உணர்ந்து விடுபடக்கற்றுக் கொள்கிறோம். எந்தத் திணிப்பையும் எதிர்க் கேள்விகளால் கட்டுடைப்பைச் செய்கிற முதல் கலைஞராக அறியப் படுகிறவர்கள்
குழந்தைகள் பற்றிய விவரணைகள், செய்திகள், விவர அட்டவணைகள் சமகாலத்தில் அதிகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரே குழந்தையை வைத்துக் கொண்டு ஏகப்பட்ட பணத்தை வைத்துக் கொண்டு அதிகமான வசதிகளைப் பெற்று உலகம் தெரியாமல் வளர்கிற குழந்தையும் சமூகத்தில் உள்ளது. அதே போல ஏழை எளிய மக்களின் சேரிகளில் ஒரு சத்துணவு ஆயாவின் பாதுகாப்பில் வாழ்ந்து வசிக்கிற குழந்தைகளும் உண்டு. எந்த இடத்திலும் இருந்தாலும் அவர்களுக்குக் கிடைக்காத ஒன்று அவர்களின் கனவுகளுக்குரிய இடங்கள்தான். காணவிரும்புகிற இடங்கள்.
குழந்தைமை அறியாத ஒன்று ஏற்றத்தாழ்வும் அதன் பகிரங்கங்களும். அவன் ஏன் மிகவும் சிவப்பாக அழகாக குண்டாக இருக்கிறான். விளம்பரங்களில் வரும் குழந்தைகள் எங்கிருந்து வருகிறது. நிஜமாகவே அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு அதே போல அவர்கள் விரும்புவது வாங்கித்தருகிறார்களா பெற்றோர்கள் எனும் சந்தேகங்கள் எழும். அவர்களின் சந்தேகக் கேள்விகள்தான் இந்த உலகத்தின் அடுத்த பக்கத்தைப் புரட்டிப்பார்க்கத் தோன்றும் விசயம்.
ந.பெரியசாமியின் இந்த நூலில் உள்ள கவிதைகளில் குழந்தைமையின் நவீன மனஉலகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நம்மிடம் உள்ள சிறார் இலக்கிய வகைமையிலிருந்து நவீன கவிஞனின் பார்வையில் குழந்தைமையின் கனவுகள் பற்றிய சொற்களைக் காணமுடிகிறது. புத்திசாலித்தனமிக்க குழந்தைகளுக்கும் கவிஞனுக்குமான உறவு எப்படி இருக்கும் என்பதை உணரக்கூடியதாக இக்கவிதைகள் உள்ளது. பல நூறு குடும்பங்கள் உள்ள ஒரு தெருவில் நான்கைந்து குழந்தைகள் மட்டுமெ தெருவில் விளையாடிப்பார்க்கும் அருகதை கொண்டவர்கள் நாம். நம்முடைய பிரதான பொழுதுபோக்கே குழந்தைகளின் அறிவார்த்தமான செயல்பாடுகளைக் குற்றம் சொல்வதும் மறுத்து வாதிடுவதும்தான்.
நிழல் சுவை
உப்பு நீரில் ஊற வைத்து
கழுவிய திராட்சையை
தின்றிடத் துவங்குகையில்
நரி வந்து கேட்டது
நாலைந்து ஆய்ந்து கொடுத்தேன்
புலி வந்தது
சிறு கொத்தை ஈந்தேன்
குட்டிக்கரணம் இட்டவாறு
குரங்கு வந்ததைத் தொடர்ந்து
ஆடு மாடு கோழி பூனையென
உருமாற்றப் படையெடுப்புகள்...
எனக்கிது போதுமென
கொடுத்தத் திராட்சையின் சாயலை
விழுங்கிக் கொண்டிருந்தேன்.-------பக் 34
மேலே குறிப்பிட்ட கவிதையில் உள்ள பண்புருவமும் புனைவும் மாய எதார்தமும் நிறைந்த கவிதையாக அமையப்பெற்றதாகும். முப்பது கவிதைகளே அடங்கிய தொகுப்பு என்றாலும் கவித்துவத்தின் பளுவை உள்ளடங்கிய தொகுப்பு. Intuition எனும் உள்ளுணர்வு மிக்க கவிதைகள் பல உண்டு. குழந்தைகள் உள்பட பல எளிய வாசகர்கள் வாசித்து அறிய முடியாத வண்ணம் முழுமையாக நவீன கவிதையின் உருவகங்களும் படிமங்களும் நிறைந்தவையாக இருப்பது விமர்சனத்திற்குரியது. ந.பெரியசாமி விரும்பும் “கொட்டுக்காய்“த் தனமிக்க விமர்சனம் இது.
குழந்தையின் மனத்திலிருந்தும் கவிஞனின் மனத்திலிருந்தும் வெளிப்படுகிற சொற்கள் முற்றிலும் பல முரண்களையும் திருப்பங்களை அரூபமான கனவிலி சம்பவங்களையும் சொல்கிறது. மிக இயல்பாக மிக எளிய முறையிலேயே விவரித்திருக்கலம். “அப்படியா நான் நினைத்தேன்..நான் அந்தப் பொருளில் சிந்திக்கவில்லையே“ குழந்தைகள் மனம் எதிர் கேள்விகள் கேட்கிற தொனியில் சில கவிதைகள். என்றாலும் எதாவது குறிப்பிடவேண்டுமே என்பதல்ல.. எளிமைக்கும் நவீன வடிவத்திற்குமான அமைப்பியல் என்பதே தர்க்கத்தை விளைவிக்க வைப்பதே..நவீனத்திற்குத் தர்க்கம்தான் அவசியம்..
வாழ்த்துக்கள் பெரியசாமி.. தக்கை நண்பர்களுக்கும் அன்பு...

Saturday, February 11, 2017

Leena Manimekalai
தக்கை வெளியீடாக வந்திருக்கும் நண்பன் கவிஞர் பெரியசாமியின் நான்காவது கவிதை தொகுப்பு. அவ்வளவு மென்மையாகவும் அவ்வளவு கனமானதுமான "கொட்டு'க்காய்கள். தொகுப்பை வாசித்து முடிக்கும்போது வீடெங்கும் குழந்தைகள் நிரம்பி, மடியில் ஒன்று, தோளில் ஒன்று, முதுகில் ஒன்றென ஒரே சலசலப்புடன் விளையாடிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு. வெறும் தாள்களையும் வார்த்தைகளையும் குழந்தைமையைக் கொண்டு மாய நிலமாக மாற்றிப் பார்க்கிறார் கவிஞர். புதைந்த குரல்கள், வலியின் சித்திரங்கள், அலெக்ஸ் மரம், அருவி, கனவு மோதிரம், வாஞ்சையின் கடும் ஈரம் போன்ற கவிதைகள், குழந்தைகளின் பிரத்யேக உலகத்திற்கு உள்ளே அழைத்துச் செல்வதும் வெளியிலிருந்து அவதானிப்பதாகவுமாய் நம்மோடு உரையாடுகின்றன.
குளக்கரையின் நிழலை
நீர்
தளும்பி விளையாட
சிறு புழுக்களைச் செருகி
மீன்களைக் குவித்தவன்
வயிற்றைக் கிழித்து
தேடத் தொடங்கினான்
பாட்டியின்
கதை மோதிரத்தை
- இது மேற்கோள் கவிதை யல்ல. கவிஞன் அடைகாத்த மழழைப்புலம்.
சித்திரங்கள் உயிர்பெற்று வரும் motiff திரும்ப திரும்ப வருவதை தவிர்த்திருக்கலாம். மற்றபடி நல்ல வாசக மனம் இருந்தால், கவிஞனோடும் கவிஞன் படைக்கும் குழந்தைகளோடும், நாமும் பொக்கை விழுந்த வானத்திலிருந்து விழும் நட்சத்திரங்களுக்காக ஆவென வாயைப் பிளந்துக் கொண்டு நிற்கும் உற்சாகம் வாய்க்கும்.
பெரியசாமிக்கு என் அன்பு முத்தங்கள். <3

Saturday, August 6, 2016

தூக்கணாங்குருவி

தூக்கணாங்குருவி
மழையின் ரகசியத்தை
தன் கூட்டில் உணர்த்தி
உள்ளிருந்தது.
வழிப்போக்கனொருவன் மரம் ஒதுங்கி
நீர் அற்றுப்போன தன் ஊரின்
தவிப்பைப் பாடலாக்கினான்.
குளங்களை விதைகளாக்கி வைத்திருக்கும்
கதை கூறி ஒன்றை அவன்
கைகளில் விழச் செய்தது.
குமரிகள் நீர் மொண்டபடி இருக்க
குழந்தைகள் விளையாடினர்
மிதக்கும் தாமரை நோக்கி
வாலிபர்கள் நீச்சலில்.
காட்சிகள் பெருக்கம் கொண்டபடி இருக்க
குளவிதையை ஏந்தி நடந்தான்.
----------------
அன்புக்குரிய லதா ராமகிருஷ்ணன் அவர்கள் ஆங்கில மொழிபெயர்த்திருப்பது மிகவும் வசீகரித்தும்.. பெருமை கொள்ளவும் செய்கிறது. அவருக்கு என் அன்பும் நன்றியும்.
The Weaverbird
revealing the secret of rain in its nest
remained inside.
A traveller came to rest under the tree
and made the anguish of his native town
bereft of water into a song.
Telling a tale that had in it ponds turned into seeds
It made it fall into his hands.
With young girls fetching water
children played happily.
The youths swam towards the floating lotuses.
With scenes forever swelling
He walked on holding the seed of pond in his hand.
நன்றி :  Anaamikaa Rishi

Tuesday, July 12, 2016

பயணத்தில் கண்ட கதை முடிச்சுகள்...


கதைகள் சொல்லவும் எழுதவுமாக இயங்கிக் கொண்டே இருக்கின்றன. வாசிக்கும் கதைகளை விடவும் கேட்கும் கதைகள் மர்மமான குகையுள் நுழைந்து கொண்டே இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றன. இந்த அனுபவம் எல்லோருக்கும் பொதுவானதாகவும் இருப்பதில்லை. அப்படி இருக்க வேண்டிய கட்டாயமுமில்லை. கணேஷ் வெங்கட்ராமனின் டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில் தொகுப்பிலுள்ள கதைகள் எழுதப்பட்ட கதைகளாக இருந்தபோதும் அதன் தன்மை சொல்லும் கதைகளாகவும் இருக்கின்றன.
சிறுவனாக இருக்கும்போது எங்கள் ஊரில் வருடாவருடம் டூர் சீட்டு நடத்தி முடிவில் டூர் போய் வருவார்கள். அப்படி வந்தவர்கள் ஊரில் பார்த்தவற்றை பொங்கப் பொங்க ஆர்வத்தோடு சொல்லியபடியே இருப்பார்கள். ஒரு ஊரை பார்த்து வருவதில் இவ்வளவு கதை இருக்கா எனும் ஆச்சரியம் எனைப் பிடித்தாட்டும். எங்கள் குடும்பத்தில் அப்படி யாரும் போய் வராமலிருப்பது எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருக்கும். நீயும் டூர் சீட்டில் சேரும்மா என அம்மாவிடம் ஆசையாய் சொல்ல பொழப்புல முளைச்ச புள்ளப் புடுங்கவே நேரம் போதல. இதுல பொங்க வச்சி பூச வேற போடனுமா போடா போக்கத்தவனேயென திட்டிட அதுகுறித்து அம்மாவிடம் எப்பொழுதுமே கேட்பதில்லை. ஆனால் டூர் போய் வந்தவர்களிடம் போய் கதைகேட்டு ரசிப்பேன். ஒரே ஊரைப்போய் பார்த்து வந்தபோதும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமான கதை இருப்பதும் எனக்கு பெரும் வியப்பூட்டும்.
கணேஷ் வெங்கட்ராமனின் 'டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்' தொகுப்பில் பெரும்பாலான கதைகள் அவர் பயணித்தின் பொருட்டு சென்று வந்த வெளிநாடுகள், அங்கு அவர் சந்திக்க நேர்ந்த பிரச்சினைகள், அவரை ஈர்த்த சூழல்களை கதைகளாக்கி சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆபத்தான இம் முயற்சியில் வெற்றியும் தோல்வியுமான கலவையோடு கதைகள் உள்ளன.
தைவானில் உள்ள டைசுங் நகரில் இருக்கும் புத்தர் சிலை பார்த்த அனுபவத்தை காட்சிபடுத்தப்பட்டிருப்பது நம்மையும் உடன் அழைத்துச் செல்லப்பட்டதுபோல் இருந்தது. சிரிக்கும் புத்தர் சிலை நம்மையும் ஆச்சரியப்படுத்தியது. இவருக்கு இரண்டாவது தரிசனமாக அமைந்தது அங்கு வேலை பார்க்கும் முதியவரின் முதுகில் பச்சை குத்தப்பட்ட புத்தர். வியர்வையோடு மினுங்கிய பச்சை புத்தரே நம் நினைவிலும் இருப்பார்.
ஒருவர் முதன்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டால் அவர் இத்தொகுப்பை வாசித்திருப்பாரேயானால் உறுதியாகச் சொல்லலாம் எவ்வித இன்னலும் இன்றி நிறைவான பயணத்தை அனுபவித்து விடலாம். அதற்கான வழிகாட்டுதலும் இத்தொகுப்பில் உள்ளன.
சம்பவம்-1
நண்பரின் அறை ஒன்று பகலில் பிளாஷ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சா¬லாயாகவும், இரவில் அவர் வாசிக்கும் நூலகமாகவும் மாற்றம் கொள்ளும். அங்கு வந்துபோகும் நண்பர்கள் தேவையான புத்தகத்தை எடுத்துபோய் வாசித்து பின் கொண்டு வந்து வைத்துவிடுவார்கள். அந்த அறைக்கு ஒருநாள் சென்றேன். பெரும் மாறுதலோடு இருந்தது. புத்தகம் இருக்கும் பிரோவின் முன் பெரிய பிளாஷ்டிக் மூட்டை வைக்கப்பட்டிருந்தது. என் பார்வையால் என்னுள் இருக்கும் கேள்விக்கு பதிலைத் தந்தார். நண்பர்களை திருடர்களாக்கிப் பார்க்க விரும்பவில்லை அதனால்தான் இம்மாற்றம் என்றார்.
சம்பவம்- 2
தேடிச் சோறுநிதந் தின்று-பல
சின்னங் சிறுகதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிகவுழன்று- பிறர்... என நீளும் பாரதியாரின் கவிதை வரிகளோடு அவரின் உருவம் பதித்த தாள் ஒன்றை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். வீட்டிற்கு வந்திருந்த நண்பர் ஒருவர் அதை ரசித்து பார்த்தபடி இருந்தார். சிறிது நாள் கழித்து அவரின் வீட்டில் ஒரு விழாவிற்காக சென்றிருந்தேன். நான் பத்திரப்படுத்திய தாள் அங்கு அழகான சட்டமிட்டு மிகக் கம்பீரமாக தொங்கிக்கொண்டிருந்தது.
மேற்கண்ட சம்பவங்களும் தொகுப்பிலிருக்கும் சரவணரவி எனும் கதையை வாசிக்க நினைவில் வந்தன. சரவணரவி கதையிலும் வெகுநாட்களாக பாதுகாத்த போட்டோவை வீட்டிற்கு வந்திருந்த நண்பரிடம் காட்டி பெருமை கொண்டு பழைய நினைவில் லயித்திருந்தனர். அவருக்கு விருதிட்டு வழியனுப்பி வைத்தனர். ஆனால் அவர் விடைபெற்றுச் செல்லும்போது அவரோடு அப்புகைப்படமும் போய்விடுகிறது.
கெட்ட கெட்ட கனவாக வருது. எப்ப பாரு ஒரே கனவு, இடத்த மாற்றிப் படுக்கனும், கெட்டதை கனவில் கண்டால் நல்லது நடக்கும். நல்லதை கனவில் கண்டால் கெட்டது நடக்கும். கனவு கண்டமாதிரியே ஆகிடுச்சிப்பா, என இப்படியான சொல்லாடலை அடிக்கடி கேட்டபடியே இருப்போம். படைப்பாளிகளிடமிருந்தும் கனவு எப்படி தப்பி விட முடியும். கணேஷ் வெங்கட்ராமனும் 'கனவு நோயாளி' எனும் கதையில் இருளுக்கும் உடலுக்குமான உரையாடலில் நமை கவனிக்கச் செய்திடுகிறார்.
கலையும் பிம்பங்கள், வாசனை, சமிக்ஞை கதைகளில் வரும் கதை மாந்தர்களின் உலகு எனக்கு பரிச்சயம் இல்லாத உலகாக இருந்ததால் என்னால் அக்கதைகளோடு லயித்திருக்க முடியவில்லை. வெறுமனே சினிமா பார்த்து, சினிமா பார்த்து வருவது போன்ற மனநிலையே இருந்தது.
உறவுக்காரன், ஊர்க்காரன், ஆண்டான், அடிமை, படித்தவன், படிக்காதவன், நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எல்லோருக்கும் ஒரே நேர்கோட்டுப் பார்வைதான் பெண் மீது என்பதை தொகுப்பில் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் சுட்டுகிறார் கணேஷ் வெங்கட்ராமன்.
வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்ணின் கதை கூறும் 'இரு குரல்கள்' மற்றும் தன்னிடம் வேலை பார்க்கும் பெண்களின் பலவீனங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களை தன் எச்சில் பண்டமாக மாற்றுபவள் கதை கூறும் 'முதல் நாள்' கதைகளில் சக மனுசிகளின் துயர்களை கூறுவதன் மூலம் காலமாற்றம் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சிந்தனை மாற்றம் இல்லாது இருப்பதை உணர்த்திடுகிறார். இரு கதைகளுமே வாசிப்பவர்களை தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்டவை.
பயணம் சார்ந்த கதைகளை தனிதொகுப்பாக்கி இருக்கலாம். இருவித மனநிலைகளோடு வாசிக்க வேண்டிய தொகுப்பாக உள்ளது கணேஷ் வெங்கட்ராமனின் 'டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்'
வெளியீடு- காலச்சுவடு.
nantri:malaigal.com