Saturday, February 11, 2017

Leena Manimekalai
தக்கை வெளியீடாக வந்திருக்கும் நண்பன் கவிஞர் பெரியசாமியின் நான்காவது கவிதை தொகுப்பு. அவ்வளவு மென்மையாகவும் அவ்வளவு கனமானதுமான "கொட்டு'க்காய்கள். தொகுப்பை வாசித்து முடிக்கும்போது வீடெங்கும் குழந்தைகள் நிரம்பி, மடியில் ஒன்று, தோளில் ஒன்று, முதுகில் ஒன்றென ஒரே சலசலப்புடன் விளையாடிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு. வெறும் தாள்களையும் வார்த்தைகளையும் குழந்தைமையைக் கொண்டு மாய நிலமாக மாற்றிப் பார்க்கிறார் கவிஞர். புதைந்த குரல்கள், வலியின் சித்திரங்கள், அலெக்ஸ் மரம், அருவி, கனவு மோதிரம், வாஞ்சையின் கடும் ஈரம் போன்ற கவிதைகள், குழந்தைகளின் பிரத்யேக உலகத்திற்கு உள்ளே அழைத்துச் செல்வதும் வெளியிலிருந்து அவதானிப்பதாகவுமாய் நம்மோடு உரையாடுகின்றன.
குளக்கரையின் நிழலை
நீர்
தளும்பி விளையாட
சிறு புழுக்களைச் செருகி
மீன்களைக் குவித்தவன்
வயிற்றைக் கிழித்து
தேடத் தொடங்கினான்
பாட்டியின்
கதை மோதிரத்தை
- இது மேற்கோள் கவிதை யல்ல. கவிஞன் அடைகாத்த மழழைப்புலம்.
சித்திரங்கள் உயிர்பெற்று வரும் motiff திரும்ப திரும்ப வருவதை தவிர்த்திருக்கலாம். மற்றபடி நல்ல வாசக மனம் இருந்தால், கவிஞனோடும் கவிஞன் படைக்கும் குழந்தைகளோடும், நாமும் பொக்கை விழுந்த வானத்திலிருந்து விழும் நட்சத்திரங்களுக்காக ஆவென வாயைப் பிளந்துக் கொண்டு நிற்கும் உற்சாகம் வாய்க்கும்.
பெரியசாமிக்கு என் அன்பு முத்தங்கள். <3

Saturday, August 6, 2016

தூக்கணாங்குருவி

தூக்கணாங்குருவி
மழையின் ரகசியத்தை
தன் கூட்டில் உணர்த்தி
உள்ளிருந்தது.
வழிப்போக்கனொருவன் மரம் ஒதுங்கி
நீர் அற்றுப்போன தன் ஊரின்
தவிப்பைப் பாடலாக்கினான்.
குளங்களை விதைகளாக்கி வைத்திருக்கும்
கதை கூறி ஒன்றை அவன்
கைகளில் விழச் செய்தது.
குமரிகள் நீர் மொண்டபடி இருக்க
குழந்தைகள் விளையாடினர்
மிதக்கும் தாமரை நோக்கி
வாலிபர்கள் நீச்சலில்.
காட்சிகள் பெருக்கம் கொண்டபடி இருக்க
குளவிதையை ஏந்தி நடந்தான்.
----------------
அன்புக்குரிய லதா ராமகிருஷ்ணன் அவர்கள் ஆங்கில மொழிபெயர்த்திருப்பது மிகவும் வசீகரித்தும்.. பெருமை கொள்ளவும் செய்கிறது. அவருக்கு என் அன்பும் நன்றியும்.
The Weaverbird
revealing the secret of rain in its nest
remained inside.
A traveller came to rest under the tree
and made the anguish of his native town
bereft of water into a song.
Telling a tale that had in it ponds turned into seeds
It made it fall into his hands.
With young girls fetching water
children played happily.
The youths swam towards the floating lotuses.
With scenes forever swelling
He walked on holding the seed of pond in his hand.
நன்றி :  Anaamikaa Rishi

Tuesday, July 12, 2016

பயணத்தில் கண்ட கதை முடிச்சுகள்...


கதைகள் சொல்லவும் எழுதவுமாக இயங்கிக் கொண்டே இருக்கின்றன. வாசிக்கும் கதைகளை விடவும் கேட்கும் கதைகள் மர்மமான குகையுள் நுழைந்து கொண்டே இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றன. இந்த அனுபவம் எல்லோருக்கும் பொதுவானதாகவும் இருப்பதில்லை. அப்படி இருக்க வேண்டிய கட்டாயமுமில்லை. கணேஷ் வெங்கட்ராமனின் டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில் தொகுப்பிலுள்ள கதைகள் எழுதப்பட்ட கதைகளாக இருந்தபோதும் அதன் தன்மை சொல்லும் கதைகளாகவும் இருக்கின்றன.
சிறுவனாக இருக்கும்போது எங்கள் ஊரில் வருடாவருடம் டூர் சீட்டு நடத்தி முடிவில் டூர் போய் வருவார்கள். அப்படி வந்தவர்கள் ஊரில் பார்த்தவற்றை பொங்கப் பொங்க ஆர்வத்தோடு சொல்லியபடியே இருப்பார்கள். ஒரு ஊரை பார்த்து வருவதில் இவ்வளவு கதை இருக்கா எனும் ஆச்சரியம் எனைப் பிடித்தாட்டும். எங்கள் குடும்பத்தில் அப்படி யாரும் போய் வராமலிருப்பது எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருக்கும். நீயும் டூர் சீட்டில் சேரும்மா என அம்மாவிடம் ஆசையாய் சொல்ல பொழப்புல முளைச்ச புள்ளப் புடுங்கவே நேரம் போதல. இதுல பொங்க வச்சி பூச வேற போடனுமா போடா போக்கத்தவனேயென திட்டிட அதுகுறித்து அம்மாவிடம் எப்பொழுதுமே கேட்பதில்லை. ஆனால் டூர் போய் வந்தவர்களிடம் போய் கதைகேட்டு ரசிப்பேன். ஒரே ஊரைப்போய் பார்த்து வந்தபோதும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமான கதை இருப்பதும் எனக்கு பெரும் வியப்பூட்டும்.
கணேஷ் வெங்கட்ராமனின் 'டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்' தொகுப்பில் பெரும்பாலான கதைகள் அவர் பயணித்தின் பொருட்டு சென்று வந்த வெளிநாடுகள், அங்கு அவர் சந்திக்க நேர்ந்த பிரச்சினைகள், அவரை ஈர்த்த சூழல்களை கதைகளாக்கி சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆபத்தான இம் முயற்சியில் வெற்றியும் தோல்வியுமான கலவையோடு கதைகள் உள்ளன.
தைவானில் உள்ள டைசுங் நகரில் இருக்கும் புத்தர் சிலை பார்த்த அனுபவத்தை காட்சிபடுத்தப்பட்டிருப்பது நம்மையும் உடன் அழைத்துச் செல்லப்பட்டதுபோல் இருந்தது. சிரிக்கும் புத்தர் சிலை நம்மையும் ஆச்சரியப்படுத்தியது. இவருக்கு இரண்டாவது தரிசனமாக அமைந்தது அங்கு வேலை பார்க்கும் முதியவரின் முதுகில் பச்சை குத்தப்பட்ட புத்தர். வியர்வையோடு மினுங்கிய பச்சை புத்தரே நம் நினைவிலும் இருப்பார்.
ஒருவர் முதன்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டால் அவர் இத்தொகுப்பை வாசித்திருப்பாரேயானால் உறுதியாகச் சொல்லலாம் எவ்வித இன்னலும் இன்றி நிறைவான பயணத்தை அனுபவித்து விடலாம். அதற்கான வழிகாட்டுதலும் இத்தொகுப்பில் உள்ளன.
சம்பவம்-1
நண்பரின் அறை ஒன்று பகலில் பிளாஷ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சா¬லாயாகவும், இரவில் அவர் வாசிக்கும் நூலகமாகவும் மாற்றம் கொள்ளும். அங்கு வந்துபோகும் நண்பர்கள் தேவையான புத்தகத்தை எடுத்துபோய் வாசித்து பின் கொண்டு வந்து வைத்துவிடுவார்கள். அந்த அறைக்கு ஒருநாள் சென்றேன். பெரும் மாறுதலோடு இருந்தது. புத்தகம் இருக்கும் பிரோவின் முன் பெரிய பிளாஷ்டிக் மூட்டை வைக்கப்பட்டிருந்தது. என் பார்வையால் என்னுள் இருக்கும் கேள்விக்கு பதிலைத் தந்தார். நண்பர்களை திருடர்களாக்கிப் பார்க்க விரும்பவில்லை அதனால்தான் இம்மாற்றம் என்றார்.
சம்பவம்- 2
தேடிச் சோறுநிதந் தின்று-பல
சின்னங் சிறுகதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிகவுழன்று- பிறர்... என நீளும் பாரதியாரின் கவிதை வரிகளோடு அவரின் உருவம் பதித்த தாள் ஒன்றை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். வீட்டிற்கு வந்திருந்த நண்பர் ஒருவர் அதை ரசித்து பார்த்தபடி இருந்தார். சிறிது நாள் கழித்து அவரின் வீட்டில் ஒரு விழாவிற்காக சென்றிருந்தேன். நான் பத்திரப்படுத்திய தாள் அங்கு அழகான சட்டமிட்டு மிகக் கம்பீரமாக தொங்கிக்கொண்டிருந்தது.
மேற்கண்ட சம்பவங்களும் தொகுப்பிலிருக்கும் சரவணரவி எனும் கதையை வாசிக்க நினைவில் வந்தன. சரவணரவி கதையிலும் வெகுநாட்களாக பாதுகாத்த போட்டோவை வீட்டிற்கு வந்திருந்த நண்பரிடம் காட்டி பெருமை கொண்டு பழைய நினைவில் லயித்திருந்தனர். அவருக்கு விருதிட்டு வழியனுப்பி வைத்தனர். ஆனால் அவர் விடைபெற்றுச் செல்லும்போது அவரோடு அப்புகைப்படமும் போய்விடுகிறது.
கெட்ட கெட்ட கனவாக வருது. எப்ப பாரு ஒரே கனவு, இடத்த மாற்றிப் படுக்கனும், கெட்டதை கனவில் கண்டால் நல்லது நடக்கும். நல்லதை கனவில் கண்டால் கெட்டது நடக்கும். கனவு கண்டமாதிரியே ஆகிடுச்சிப்பா, என இப்படியான சொல்லாடலை அடிக்கடி கேட்டபடியே இருப்போம். படைப்பாளிகளிடமிருந்தும் கனவு எப்படி தப்பி விட முடியும். கணேஷ் வெங்கட்ராமனும் 'கனவு நோயாளி' எனும் கதையில் இருளுக்கும் உடலுக்குமான உரையாடலில் நமை கவனிக்கச் செய்திடுகிறார்.
கலையும் பிம்பங்கள், வாசனை, சமிக்ஞை கதைகளில் வரும் கதை மாந்தர்களின் உலகு எனக்கு பரிச்சயம் இல்லாத உலகாக இருந்ததால் என்னால் அக்கதைகளோடு லயித்திருக்க முடியவில்லை. வெறுமனே சினிமா பார்த்து, சினிமா பார்த்து வருவது போன்ற மனநிலையே இருந்தது.
உறவுக்காரன், ஊர்க்காரன், ஆண்டான், அடிமை, படித்தவன், படிக்காதவன், நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எல்லோருக்கும் ஒரே நேர்கோட்டுப் பார்வைதான் பெண் மீது என்பதை தொகுப்பில் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் சுட்டுகிறார் கணேஷ் வெங்கட்ராமன்.
வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்ணின் கதை கூறும் 'இரு குரல்கள்' மற்றும் தன்னிடம் வேலை பார்க்கும் பெண்களின் பலவீனங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களை தன் எச்சில் பண்டமாக மாற்றுபவள் கதை கூறும் 'முதல் நாள்' கதைகளில் சக மனுசிகளின் துயர்களை கூறுவதன் மூலம் காலமாற்றம் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சிந்தனை மாற்றம் இல்லாது இருப்பதை உணர்த்திடுகிறார். இரு கதைகளுமே வாசிப்பவர்களை தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்டவை.
பயணம் சார்ந்த கதைகளை தனிதொகுப்பாக்கி இருக்கலாம். இருவித மனநிலைகளோடு வாசிக்க வேண்டிய தொகுப்பாக உள்ளது கணேஷ் வெங்கட்ராமனின் 'டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்'
வெளியீடு- காலச்சுவடு.
nantri:malaigal.com

Thursday, June 30, 2016

தானியக்காளியின் முத்த விதைகள்...

தனித்திருந்தேன் மதிய பொழுதொன்றில். சூரியன் உடலுக்கருகில். எல்லாவற்றின் மீதும் எரிச்சல் அருவியாக கொட்டியபடி இருந்தது. எதன் மீதும் நாட்டங்களற்றிருந்தேன். பாலைக்கான நிறத்தை கொட்டியபடி இருந்தது காலம். வாசல் திறந்தது. முத்தம் ஒன்று உடல் அணைக்க சூரியன் விலகியது. குளிர்மையின் நிறம் அறையுள் நிரம்பிக்கொண்டிருந்தது. எல்லாவற்றின் மீதும் பற்றுகள் அரும்பத் துவங்கின. முத்தத்திற்கு அத்தகைய வலிமை உண்டு. சக்திஜோதி முத்தத்தின் வலிமை உணர்ந்தவர்போலும். அவரின் பெரும்பாலான கவிதைகளில் முத்தத்தின் ஈரத்தை உணரலாம். மழைக்குப்பின் இலைகளில் தேக்கி வைக்கும் சொட்டு துளி போல் இவரின் கவிதைகளில் முத்தம் தொக்கி நிற்கும். மழைபோல் முத்தம் பேதமற்றது.

சக்திஜோதியின் கவிமுலை எப்பொழுதும் பாலை முத்தத்தின் ஈரத்தோடு நிறுத்தங்களற்று சுரந்தபடியேதான் இருக்கிறது. இது எல்லோருக்கும் வாய்க்காது. அவருக்கு வாய்த்திருக்கிறது. அவரும் அதை லாவகமாக கையாள்கிறார். நீர்த்துப்போகாது அவ் வார்த்தையை உயிர்ப்போடு வைத்திருப்பது அவரின் ஆளுமையாக இருக்கிறது. அக்கவிமுலை ஆதித்தாயின் முலையாகவும் மாறுகிறது. ஆதிப்பெண்களின் வலியை தன் கவிதைகளில் உணரச் செய்திடுகிறார்.

ஓதற்பிரிவு, பகைவயிற் பிரிவு, தூதிற் பிரிவு, காவற்பிரிவு, பொருள்வயிற் பிரிவு, பரத்தையற் பிரிவு என வெளியேறிப்போயிருக்கும் தலைவனுக்காக காத்திருப்பின் வலியையும், காத்திருப்பின் காலங்களில் அவர்களின் நினைவில் இருக்கும் காதலையும் இன்றைய மொழியில் அதன் வலிமையோடு தந்தபடி இருக்கிறார் கவிதைகளில். அப்படியான கவிதைகளை இவரின் ஆறாவது தொகுப்பாக வந்திருக்கும் சொல் எனும் தானியம் தொகுப்பிலும் காணமுடிகிறது.

தான் பிறர் கையகப்படுத்தும் நிலம் அல்ல என்பதை உணர்ந்து நிலவை தனதாக்கிக் கொண்டு சூரியனை நோக்கி பயணிப்பவள்...

தன் வேலை நிமித்தமான பிரிவின் காலங்களை மகளின் ஓவியங்களில் கண்டடைபவள்..

புறப்புகார்களில் வெறுப்புற்று தன்னை தனிமைப்படுத்தி சொற்களின் ஆழம் கண்டு மௌனத்தில் ஆரவாரிப்பவள்...

தன் கனவின் ரகசியங்களை பறவைகளுக்கு இரையாக்குபவள்...

கால மாற்றத்திற்கேற்ப அப்பா மகள் உறவுகளில் ஏற்படும் மாற்றத்தை தன் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து ஏக்கத்தோடு கவனித்திருப்பவள்..

தன் இயல்பை கணித்து பஞ்ச பூதமாக பரிணமித்திருப்பவள்...

புதிரும் மாயங்களும் நிறைந்த வாயிற்கதவை என்றுதான் திறக்கப்போகிறீர்களோவெனும் எதிர்பார்ப்போடு இருப்பவள்...

வானுயர வலம் வரும் தேவனுக்காகவும், பால்ய சிநேகிதிக்காகவும் காத்திருப்பவள்...

வனதேவதையாக மின்னலை வெடிப்புறச் செய்து தீக்கோளமாகி நடனமிட்டு காமத்தை விளைவிப்பவள்...

உள்கிடக்கும் அழுக்கு, தோய்ந்த குருதி, துயருற்ற கண்ணீரின் உப்புப் படிமமென எல்லாவற்றையும் முத்தத்தால் கலைத்து காத்திருப்பவள்...

கூந்தலில் வழியும் பச்சை மழையை வேடிக்கை பார்த்திருப்பவள்...

முந்தானையில் நிரப்பி வந்த கூலியால் வீட்டின் பசியாற்றி நிலமெங்கும் காதலை விளைவித்துக்கொண்டிருப்பவள்...

தன்னிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள யாவற்றையும் நேசிப்பவள்...

இங்கு எல்லாம் பெண்ணாகவே இருக்கின்றன. ஆனால் பெண்ணுக்கென்று ஏதுமில்லை எனும் நிலையில் இச்சமூகம் வைத்திருந்தபோதும் அன்பின் நிலமென இருக்கிறேன் எனும் பெருமிதம் கொள்பவள்...

தன்னுள் இருக்கும் காதல் சுரபியின் காரணம் தெரியாது வியந்து கிடப்பவள்...

விடுவித்துக்கொள்ள இயலாத சிலிப்புறும் கணங்களை வரிசையிட்டு விடுவித்துக்கொள்ளப்போவதாக பாவனை செய்பவள்...
சூரிய வாசம் உணர்ந்து தன்னை ஒப்புக்கொடுத்த தினத்தின் நினைவுகளை காட்சிப்படுத்துபவள்...

கடல் சேரா கூழாங்கற்களின் இசையை கேட்டபடி வெயில் நதியில் தகித்திருப்பவள்...

திளைத்திருந்த கணங்களை காட்சியாக்கி கொண்டாடக் கூப்பிடுபவள்...

மௌனப் பரிசில் நிரம்பி விடுபவள்...

பனித்துளிகளை சுவைப்பவள்...

கிடைத்த  கிடைக்கும் முத்தங்களை, உடலை நெகிழச்செய்து கண்களை சிவப்பேற்றிய முதல் முத்தத்தோடு பொருத்திப் பார்ப்பவள்..

புராதன வேட்கை எதுவென அறிந்து கொள்ள இளமையை தொலைத்தேனா அறிந்தேனா எனும் குழப்பங்களோடு இருப்பவள்...

நீர்க்கால்களின் தடம் அறிந்து அருந்த வல்லவரை தன் இமைக்குள் வைத்து நீலவானமாக ஒளிர்விக்கச் செய்பவள்...

மாசற்றது நிர்வாணம் என பெருமை பூப்பவள்...

கசடுகள் நிரம்பிய மனதோடு காலங்காலமாக உடன் வாழும் சக இனத்தை தங்களின் சவுகரியங்களுக்காக பெரும் துரோகங்களை விளைவித்துக்கொண்டிருப்பதால் உண்டான தொடரும் தூக்கமற்ற இரவுகளின் வலியைக் கூறி சவம்போல் யுகாந்திர உறக்கம் எனை தழுவட்டும் என வேண்டுபவள்...

மனதில் தாவரங்களை வளர்த்தபடி இருப்பவள்...

நிலைத்திருத்தலில் தன் இயங்குதல்களை கண்டடைந்தவள்...

ஒளிர்தலின் மர்மங்களை சொற்களாக்கி பூசிக்கொண்டிருப்பவள்...

வீடு மட்டுமே தன் உலகமல்ல என வாழ்பவள்...

காயப்படுத்தியது போதும் ஒரு முத்தம் அல்லது ஒரு சொல் போதுமென இறைஞ்சுபவள்...

கொடுக்கப்படாத முத்தத்தை உடலில் துளிர்க்கச் செய்திருப்பவள்...
என எண்ணற்ற பெண்களை சொல் எனும் தானியம் தொகுப்பில் தரிசிக்க இயலுகிறது.

சொல்லப்படும் சமாதானங்களிலும் சுயமான சமாதானங்களிலும் தங்கள் வாழ்வை இயல்பாக நகர்த்தியபடி இருக்கும் பெண்களின் வலிகளை இத்தொகுப்பெங்கும் சக்திஜோதி விதைத்தபடி செல்கிறார்.

நன்றி- படிகம்