Tuesday, November 3, 2015

நன்றி- தீராநதி.

தோட்டாக்கள் பாயும் வெளி
மதிப்புரை- கமலாலயன்

'நதிச்சிறை', 'மதுவாகினி' என முதலிரு தொகுப்புகளுக்குப் பின் ந.பெரியசாமியின் மூன்றாவது கவிதைத் தொகுதியாக 'தோட்டாக்கள் பாயும் வெளி' வந்திருக்கிறது. சம காலத்து வாழ்க்கையில் குழந்தைகள், பெண்களின் துணையுடன் அடைகிற, அடையத் தவிக்கிற சின்னச் சின்ன சந்தோஷங்களைப் பேசுகிற கவிதைகள் இவை. எதிர்ப்படுகிற துயரங்கள், எதார்த்தங்களின் அவலங்கள், ஏமாற்றங்களையும் சொல்கின்றன. சிறு சிறு சம்பவங்களை, அல்லது மன வெளியில் உருவாகும் காட்சித் துணுக்குகளை கவித்துவத் திரைச்சீலைப் பின்னணியில் கோட்டோவியங்களாகத் தீட்டிக் காட்டுகிறார் கவிஞர்.

மூன்று சக்கர சைக்கிள் ஓட்டுவதில் தொடங்கும் பயிற்சி, பெரிய சைக்கிளில் பெடல் அடித்து ஓட்டுகிற நிலையை அடைவதற்கும் உடலெங்கும் சிராய்ப்புகள், முட்டிகளில் காயங்கள் என 'விழுப்புண்கள்' பெற்ற பிறகே ஓரளவு தைரியமாக சைக்கிள் ஓட்ட முடிகிற அளவுக்குச் செழுமையடைகிறது. இது தன் கவிதைகளுக்கும் பொருந்தும் என்கிறார் பெரியசாமி. ¢

குழந்தைகளின் மன உலகம் குறித்த கரிசனமும் அதன் வெளிகளில் பயணித்து பதிவுகளாக்க முற்படும் உந்துதலும் சமீப காலங்களில் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. பள்ளி செல்லும் வயது முன்பெல்லாம் 5 அல்லது 6ஆக இருந்தது. இப்போதோ ஒன்றரை வயதானதுமே மழழையர் பள்ளி நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகிவிட வேண்டிய நிலைக்குக் குழந்தைகள் ஆளாக்கப்படுகிறார்கள். இந்த 'வலியின் சித்திரங்கள்' மனதில் அச்சமூட்ட ''பதட்டத்தில் உடல் நடுங்கினோம்/நாளை அனுப்ப வேண்டும் -பள்ளிக்கு'' என பெற்றோர் மனம் பதைப்பது கவிதையாகிறது.(பக்-10,11)

'அணிலாடு முன்றில்களுக்கு இன்றைய அபார்ட்மெண்ட் வாழ்க்கை வெளிகள்' இடமளிப்பதில்லை. எனவே, ஒண்டுக் குடித்தன அறைகளினுள் அணிலோ, குருவியோ, பூனைகளோ அழையா விருந்தாளிகளாய் நுழைந்து எட்டிப் பார்க்கின்றன. இங்கு வருகிற அணிலுக்குக் குடில் அமைத்து உணவு சேமிக்கத் தொடங்குகிறார் கவிஞர். இருப்பின் கொஞ்சலும், இல்லாமையின் தவிப்பும் இருவருக்கும் பொதுவான உணர்வுகள். அணிலின் மொழி பரிச்சயமாகி, உறவு நீடிக்கிறது. மகளின் பிடிவாதங் கருதி, அணில் உடலின் கோடுகளின் கதையைக் கூறுமகிறார் கவிஞர். அடுத்தடுத்த நாட்களில் எஞ்சியிருப்பது சிறு குடிலும் அதன் வீச்சமும் மட்டுமே.

மண்ணின் மொழியறிய முற்படுகிறவர்களுக்கு மழை வரும் நாட்கள் மிகவும் உவப்பானவை. பெய்யும் மழை முழுவதையும் சுவடு கூட எஞ்சிராமல் குடித்துவிட முடிகிறது அவர்களால். நீர்த்தாகமெடுத்து அலைபாயும் வேர்களும், ஆற்று மணற்பரப்பும், குளம் - குட்டைகளும் வெடித்துக் கிடக்கும் நிலப் பிளவுகளும் உயிர் நீரை உறிஞ்சியபின் உயிர்ப்படைகின்றன. காய்ந்து பழுப்பேறிக் கிடப்பவை பசுமையடைகின்றன. இந்த 'உயிர்ப்பு' மிக்க பரிமாற்றங்களின் வளர்ச்சிப் போக்கில் மழை வரும் நாளில் மண்ணின் உடலாகவே மாறிவிடுகிற விந்தையைச் சொல்கிறது ஒரு கவிதை (பக்-18.).

ஒழுகிக் கொண்டிருக்கும் வீட்டின் மனிதர்கள்,. வீட்டினுள் மழை ஈரம் படாமல் தப்பிப் பிழைக்கும் சில மூலைகளில் ஒடுங்கிக் கொண்டு, சொட்டும் நீர்த்துளிகளால் நிறைந்து வழியும் பாத்திரங்களை இடம் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டு நாட்களைக் கடத்துவது எதார்த்தமான ஒரு வாழ்நிலை. இந்தப் படிமத்தை ஒன்றை மறந்து புதிதாக வேறொன்றைக் கேட்கும் மகனின் ஆசைகளை எதிர்கொள்வதற்கு நாளை, அடுத்த வாரம், கட்டாயம் வரும் மாதம் என பாத்திரங்களை மாற்றிக்கொண்டே இருக்கும்  பெற்றோருக்கு ஒப்புமையாக்கி இருக்கிறார் பெரியசாமி. உவமை பழையது. வாழ்நிலைக்கூறு புதியது. இத் தொகுப்பின் பல கவிதைகளில் இத்தகைய தன்மைகளைக் காண முடிகிறது.

குழந்தைகளின் உலகில் பயணிக்கும் மற்றொரு கவிதை- 'வெளியே மழை பெய்தது'. மேலும், 'தலையணை', 'துணைவானம்', 'புதைந்தகுரல்கள்', 'நட்சத்திரத்தை அறையுள் அடைத்தவள்', 'பூங்கா தேவதை', 'நிழல் சுவை', 'நிலையானது', 'சித்திரச் சுவர்கள்', 'சாயற்கனி' இப்படியாக இத்தொகுப்பின் பல கவிதைகள் பிஞ்சு மனங்களுக்குள் பெரும் படைப்பாற்றல் நிறைந்த தூரிகைகள் ஓயாமற் பிரசவித்துக் கொண்டிருக்கும் உயிரோவியங்களை இடம் பெயர்த்து வார்த்தைப்படுத்துகிறவையாய் அமைந்துள்ளன.

அடுக்கு மாடிக் குடியிருப்புகளால் இன்று விண்முட்ட உயர்ந்தோங்கிய கட்டடங்களின் அடித்தளங்களினுள் புதையுண்டு கிடப்பவை, நூற்றாண்டு காலங்களைக் கடந்த பெரும் நீர் ஆதாரங்கள் என்பது நாமெல்லாரும் அறிந்ததே. நீர்நிலைகள் மட்டுமின்றி, மரம், செடி-கொடிகள், மண் உள்ளிட்ட இயற்கைப் படைப்புகளும் நம்முள் எண்ணற்ற சிற்றுயிர்களையும் சேர்த்தேதான் பராமரித்து வந்திருக்கின்றன. இனியும் தொடர்ந்து பராமரிக்கப் போகிறவை அவைதாம். ஆனால் அந்த உயிராதார நீர்ப்பரப்புகளையும், வனங்களையும், உணவு வயல்களையும் மனம்போன போக்கில் அழித்துக் கொண்டிருக்கிற இன்றைய பெருவாணிகக் கூட்டங்கள், கேளாக் காதுகளுடையவையாகவும், பாராமுகங்களைக் கொண்டவையாகவுமே இருக்கின்றன. இந்தக் கூட்டத்தினரின் கேளாக்காதுகளுக்கு உரத்த குரலில் முழங்கித் தீர வேண்டியதன் அவசியத்தை 'புதைந்த குரல்கள்' கவிதை (பக்-63) உணர்த்துகிறது.

படைப்பாக்க மனநிலையைத் துணைக்கொண்டு புனைவுலகில் நாம் தொலைந்து போக முற்படும் வேளைகளில் சிறகுகள் நினைவூட்ட தரையைப் பார்க்கிறோம். வீடுகள் நிலவுகளாகவும், நிலவெளி வானமாகவும் விரிவுகொள்கின்ற விந்தை நிகழ்கிறது. (புறா-பக்-64) இதையே தலைகீழாக்கிப் பார்க்கிறாள் ஒரு சிறுமி. அவள் வரைந்தனுப்பிய துணை வானம், ஒரு நிலா, ஒரு சூரியன், நிறைய நட்சத்திரங்கள்தாம் இன்று நாம் காண்கிற பால்வெளி வீதிக் காட்சிகள் என்கிற கவிதை (துணைவானம்-பக்-65) நெஞ்சை ஈர்க்கிறது.
தலைப்பு இடப்படாத ஒரு கவிதையின் இறுதி வரிகள் இவை. ''தன் உயிரை எழுத்தாக்கி மிதக்கச் செய்தாள் யாரேனும் சிறுசிறு கற்கள் கொண்டு நிரப்பி வழியும் நீரில் தன்னை வாசிக்கக் கூடுமென்று'' படைப்புக் கலைஞர்களின் உயிரைக் குடித்துக் குடித்தே உருப்பெற்று வெளிப்படுகின்றவை கவிதைகள், சிற்பங்கள், ஓவியங்கள், காவியங்கள், இசைப்பாடல்கள்- இன்ன பிற யாவும் கேட்பதற்குச் செவிகளும், பார்ப்பதற்குக் கண்களும் வேண்டுமே''.

உரத்துப் பேச வேண்டிய காலமாக நம்முடையது ஆகிவிட்டது. சமூக வெளியில் நிகழும் அவலங்கள் குறித்து முணுமுணுப்பையேனும் வெளிப்படுத்தத் தவறுகிற கலைஞர்கள் என்றேனும் ஒரு நாள் காலத்தின் விசாரணையிலிருந்து தப்பவே முடியாது. பெரும் வன்முறைகளையும், கொலைவெறித் தாக்குதல்களையும் அதிகார வர்க்கத் தடைகளையும், தோட்டாக்களையும் முன்னெப்போதையும் விட எதிர்கொண்டே தீரவேண்டிய நாட்களாகி விட்டன இன்றைய நாட்கள். சுற்றி நடக்கின்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல், நமக்கெதுக்கு ஊர் வம்பு என நல்லத்தனமாக புனைவுப் போர்வைகளைப் போர்த்திக் கொண்டு கனவுலகவாசிகளாயிருப்பவர்கள் தாம் எழுத்துலகில் அதிகம். இது ஏதோ இன்றைய நிலைமை மட்டுமன்று. எந்தக் காலத்திலும், எதிர்ப்புக் குரலெழுப்பி மாற்றும் சிந்தனைகளை முன் வைப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவுதான்.

அதே வேளையில், தோட்டாக்கள் பாயும் வெளி தான் இது என நன்கறிந்தே அந்த வெளிகளை ஊடறுத்துக் கொண்டு முன்னேறிப் போய்ப் புதுப்பாதையை உருவாக்குவதற்காக, நெருஞ்சி முட்கள் நிரம்பிக் கிடக்கும் ஒற்றையடிப் பாதையில் நடக்க முற்படுகிறவர்கள் சிலர்தாம். எனினும் அவர்களும் இதே சமகாலத்தின் குரல்களை எதிரொலித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். அத்தகையவர்களுள், ந.பெரியசாமியும் ஒருவர் என நிறுவுகிறது 'தோட்டாக்கள் பாயும் வெளி'

வெளியீடு-புதுஎழுத்து

நன்றி- தீராநதி.

Monday, November 2, 2015

nantri: vaa.manikandan

பக்கத்து வீட்டில் ஒரு குழந்தை இருக்கிறது. பால்கனி, வீட்டின் உட்புறம் என்று ஓரிடத்தையும் விட்டு வைப்பதில்லை. பென்சிலை எடுத்து தனது கைத்திறமையைக் காட்டிவிடுகிறது. அது வாடகை வீடு. உரிமையாளர் கடுப்பாகிவிடுகிறாராம். எப்பொழுதோ ஒரு சமயம் அப்பாவிடம் புகார் அளித்துக் கொண்டிருந்தார். ‘ஆடு மாடு இலை தழைன்னு கண்டதையும் கிறுக்கி வெச்சுடுது சார்’. பார்த்து பார்த்து கட்டிய வீடு. ‘கனவுல கூட ஆடு மாடு வரும் போல இருக்கும்’ என்றார். சிரிப்பு வந்துவிட்டது. ஆடு, மாடு என்றால் பிரச்சினையில்லை. வீட்டு உரிமையாளரின் கனவில் வருகிறதென்றால் குழந்தையிடம் சொல்லி பேய்ப் படத்தை வரையச் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டேன். மாநகரங்களில் இந்த வீட்டு உரிமையாளர்கள் தொல்லை பெருந்தொல்லை.
குழந்தையின் ஓவியங்களிலிருப்பவை உயிர் பெறுகின்றன என்பதே fantasy கற்பனை. என்னதான் கடுப்பில் இருந்தாலும் அந்த வீட்டு உரிமையாளரின் கற்பனை அபாரமானது. ஒருவேளை குழந்தைகளின் ஓவியங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும்? விசித்திரமான ஜந்துக்களும் முக்கோண வடிவ முகமுடைய மனிதர்களும் பெரும்பற்களுடன் சாலைகளில் நடந்து கொண்டிருப்பார்கள். மலைகளும் பாதி உதயமான சூரியன்களும் தெருவெங்கும் நிறைந்திருக்கும். அற்புதமான வண்ணக் கலவைகளால் இந்த உலகம் வேறொன்றாக இருந்திருக்கும். இல்லையா?
இந்தச் சுவர் கிறுக்கல் ஞாபகத்திற்கு வரக் காரணம் ந. பெரியசாமியின் கவிதைத் தொகுப்பான ‘தோட்டாக்கள் பாயும் வெளி’. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிந்தவுடன் தொகுப்பை வாசித்துவிட வேண்டும் என்று தோன்றியது. ஒரு விருது குறிப்பிட்ட படைப்பை கவனம் பெறச் செய்கிறது. ‘அப்படியென்ன இருக்கிறது?’ என்று வாசகனுக்குள் ஒருவிதமான குறுகுறுப்பை உருவாக்குகிறது. இத்தனைக்கும் பெரியசாமி ஓசூரில்தான் இருக்கிறார். நிறையப் பேசிக் கொள்வதுண்டு. ஆனால் வாசிக்காமல் விட்டிருக்கிறேன்.
கவிதைத் தொகுப்பில் வீட்டு உரிமையாளரைப் போலவே fantasy கற்பனையுடனான கவிதைகள் இருக்கின்றன. குழந்தைகள் வரையும் ஓவியங்கள் உயிர்பெறுகின்றன. ஆடு, மாடுகள் அந்தரத்தில் பறக்கின்றன. பொம்மை மான்கள் உயிரோடு அலைகின்றன. பால்ய நினைவுகள் கவிதைகளுக்குள் வந்து வந்து போகின்றன. இப்படி நாம் பெரும்பாலும் பொருட்படுத்தாத நம்முடைய ஆழ்மன விருப்புகளை மெல்லிய சீண்டல்களுடன் கவிதைகளாக்குவதை பெரியசாமி தனது பாணியாக்கியிருக்கிறார்.
உப்பு நீரில் ஊற வைத்து
கழுவிய திராட்சையை
தின்றிடத் துவங்குகையில்
நரி வந்து கேட்டது
நாலைந்து ஆய்ந்து கொடுத்தேன்
புலி வந்தது
சிறு கொத்தை ஈந்தேன்
குட்டிக்கரணம் இட்டவாறு
குரங்கு வந்ததைத் தொடர்ந்து
ஆடு மாடு கோழி பூனையென
மகனின் படையெடுப்புகள்
எனக்கேதும் வேண்டாமென
கொடுத்த திராட்சையின் சாயலை
விழுங்கிக் கொண்டிருந்தேன்
இது பெரியசாமியின் கவிதைகளில் ஒன்று. திராட்சை தின்று கொண்டிருப்பவனிடம் மகனின் படைப்புகள் வந்து திராட்சைகளை வாங்கிச் சென்றுவிடுகின்றன. ‘எனக்கு திராட்சை இல்லைன்னாலும் பரவாயில்லை’ என்று எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு திராட்சையின் சாயலை விழுங்கிக் கொண்டிருக்கிறான். இதுதான் கவிதை.
இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறதா? இதெல்லாம் சாத்தியமேயில்லை. இப்படி சாத்தியமில்லாத ஒன்றை ஏன் கவிதையாக்க வேண்டும்? கவிதையுடன் அறிமுகமில்லாத ஒருவன் வாசித்தால் இது புரியுமா? புரியாத ஒன்றை ஏன் எழுத வேண்டும்?
இப்படியெல்லாம் கேள்விகள் எழ வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த உலகில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் உண்டு. ஒருவேளை நமக்கு பதில் தெரியாமல் இருக்கலாமே தவிர பதில் இல்லாத கேள்விகள் என்று எதுவுமேயில்லை. இந்தக் கேள்விகளும் அப்படியானவைதான். இன்னொருவர் பதில் சொல்லி சமரசம் ஆவதைவிட கேள்விகளுக்கான பதிலை நாமே கண்டடைந்து சமரசமாவதுதான் சாலச் சிறந்தது.
‘மகனின் படைப்புகளில் இருந்து விலங்குகள் உயிர் பெறுகின்றன’ என்று இந்தக் கவிதையைப் புரிந்து கொள்கிறேன். அவ்வளவுதான். இந்த ஓர் அடிப்படையைப் புரிந்து கொண்டால் போதும். அதற்கு மேல் நம் கற்பனையைப் பொறுத்து கவிதை நம்மை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இந்த ஒரு கவிதையை வைத்துக் கொண்டு கற்பனை செய்யலாம். நம் வீட்டில், நம் குழந்தை வரையும் படங்கள் உயிர்பெறுவதிலிருந்து அப்படியெல்லாம் நடந்தால் என்னவாகும் என்பது வரை என்னனென்னவோ யோசிக்கலாம். இப்படியொரு பொறியைத் தட்டிவிடுவதுதான் கவிதையின் வேலை. அதற்கு மேல் கவிதையிடம் நிறைய எதிர்பார்க்க வேண்டியதில்லை.
இன்னொரு கவிதையையும் பார்த்துவிடலாம்.
பிளந்த மாதுளையிலிருந்து
உதிர்ந்தன சிவந்த கண்ணீர் துளிகள்
எறும்பு ஒன்று
ஒரு துளியை இழுத்துச் செல்ல
மீந்ததைப் பங்கிட்டனர் மகன்கள்
எதிர் இல்ல யுவதி
பிணி நீக்க
எடுத்துச் சென்றாள் தொலிகளை.
கழுவினேன்
கையிலிருந்த பிசுபிசுப்பை.
இந்தக் கவிதைக்கு விளக்கம் கொடுப்பது சாத்தியமேயில்லை. ஒரேயொரு காட்சிதான் கவிதையாகியிருக்கிறது. ஒரு வீட்டில் மாதுளம் பழத்தை பிளந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டும்தான். கண்ணீர், பிணி, பிசுபிசுப்பு இந்தச் சொற்கள் கவிதையை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றுவிடுகின்றன. பிசுபிசுப்பு என்று இந்தக் கவிதை எதைக் குறிப்பிடுகிறது? மாதுளம் பழத்தின் பிசுபிசுப்பை மட்டுமா? எதனால் மாதுளம் பழத்தின் சாறு கண்ணீர் துளியாகத் தெரிகிறது? எதிர் வீட்டு பிணியின் காரணமாகவா? தொலிகளைக் கூட இவர்கள் வீட்டில் வந்து வாங்கிச் செல்லும் யுவதியின் ஏழ்மையின் காரணமாகவா? அப்படியென்றால் இவனது குற்றவுணர்ச்சிதான் பிசுபிசுப்பா? இப்படி கேள்விகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கலாம்.
இதுதான் கவிதையின் சூட்சமம். மிகச் சாதாரணமான வரிகள்தான். ஆனால் அந்தக் காட்சியும் சொற்களும் நம்மைப் புரட்டிக் கொண்டேயிருக்கும் வலிமையை உடையவை.
கவிதை வாசிப்பதால் என்ன பலன் என்பது க்ளிஷேவான கேள்வி. வெவ்வேறு ஆளுமைகள் வெவ்வேறு பதில்களைச் சொல்லியிருந்தாலும் தொகுத்துப் பார்த்தால் அவையும் க்ளிஷேவான பதில்களாகத்தான் இருக்கும். ஆராய்வது விமர்சகர்களின் வேலை. அனுபவிப்பது வாசகர்களின் வேலை. கவிதையின் ரசிகனாக கவிதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தால் போதும். இத்தகைய கவிதைகள் அனுபவிப்பதற்கானவை.
இன்னுமொரு கவிதையுடன் முடித்துக் கொள்ளலாம்-
துளிகளை அனுப்பி
சன்னல் வழியே அழைத்து
தன் ஆட்டத்தை துவங்கியது
மழை
வேடிக்கை பார்க்கக்
காமக் களியாட்டத்தில் மனம்
விருது பெற்றிருக்கும் ந.பெரியசாமிக்கும் தொகுப்பை வெளியிட்ட புது எழுத்து பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள்.
nantri: vaa.manikandan

Saturday, September 26, 2015

நாமாகவும் இருக்கக் கூடும்


காரம் தூக்கலான போண்டாவிற்காக
அக்கடைக்கு அவ்வப்போது செல்வீர்கள்
தொட்டுப் பார்க்க மகிழ்ந்து
நான்கைந்தை கையால் சுருட்டி அமர்ந்தீர்கள்
நைந்த நாளிதழை விரித்து
வெளிநாட்டுப் விளம்பரங்களிடையே
துண்டான செய்திகளை வாசித்து வெளியேறினீர்கள்.

வருகிறீர்கள் காலம் கடந்து
விரிந்த சாலையில்
அக்கடையும் காணாமல் போயிருக்க
துணுக்குற்று நிமிர்கிறீர்கள்
கண்ணாடிகள் போர்த்தி பளிச்சிட்டபடி
முளைத்திருக்கும் கடையொன்றில்
சமச்சீராக அடுக்கப்பட்டிருக்கின்றன போண்டாக்கள்
உள் நுழைகிறீர்கள் ஊறும் எச்சிலோடு.
மேசைமீது கிடந்த விலைப்பட்டியலில்
பத்து ரூபாயாக போண்டா பரிணாமித்திருந்தது
சமாதானத்தோடு ஆர்டர் செய்கிறீர்கள்
உங்களுக்கு சந்தோசம் இறுப்புக்கொள்ளவில்லை
காரம் தூக்கலான அதே சுவை
டிஸ்யூ பேப்பரில் உதடுகளை ஒத்தியவாறு
நியான் விளக்கடியிலிருந்த தேவதையிடம்
பார்கோடிட்ட பில்காட்டிய தொகை கொடுத்து
சமையலறையை எட்டிப் பார்க்கிறீர்கள்
மாஸ்டராக பழைய கடைக்காரர்
தொப்பி கழட்டி வியர்வையை துடைக்கிறார்.
அவரின் நிலைக்காக வேதனைப்பட துவங்குகையில்
உங்களின் நினைவுக் காட்சியில்
அங்கிருக்கும் டேபிள்களை
சீருடை அணிந்து நீங்கள்
துடைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நன்றி- கணையாழி

Thursday, August 13, 2015

கட்டியக்காரனின் 'நகை'மொழி

கட்டியக்காரனின் 'நகை'மொழி
-ந.பெரியசாமி


நாரதர் கலகத்திற்காக கொண்டு வந்த கனியை அம்மை அப்பனே உலகமென சுற்றிவந்து விநாயகர் கனியை பெற்றுக்கொள்ளும் கதை எல்லோரும் அறிந்த கதைதான். இப்படி எல்லோரும் அறிந்திருந்து புறக்கணிக்கப்பட்டவர்களின் மீதான கரிசனத்தில் அவர்களின் வாழ்வியல் வலியை அதிலிருக்கும் அரசியல் ஏமாற்றத்தை  தன் எள்ளல் மொழியால் கவிதையாக்கி நாமும் அவ்வலியை உணரச் செய்திடகிறார் இசை.  சாக்கடை, கொசு, குடிகாரன், ஈக்கள், பைத்தியம், காலை மாலை நடைக்காரர்கள், டிரைவர், கிளினர், ஊறுகாய் மட்டை, ஸ்கூட்டி, நடைபாதை வியாபாரி, டீக்கடை... இப்படி நாம் அன்றாடங்களில் சந்திக்கக் கூடியன, கூடியவர்களே அவரின் பாடுபொருளாக இருக்கிறது. அந்தக் காலம்  மலையேறிப்போனது தொகுப்பின் கவிதைகள் எள்ளலும், அது நம் உணர்வில் பாய்ச்சும் வலியையும் நாம் நினைவில் கொள்ள அவர்களின் மீதான கரிசனம் நம்மையும் தொற்றும்.

இத்தொகுப்பை சேலம் அம்மாப்பேட்டை சிவா லாட்ஜிற்கும் சமர்ப்பணம் செய்திருப்பார். அந்த லாட்ஜ் வே.பாபு கண்டடைந்த பொக்கிசம். எல்லா லாட்ஜையும் போல வெறும் அறைகளை மட்டும் கொண்டதல்ல. அடுத்தவர்களின் உணர்வை  மதிக்கத்தெரிந்த மகத்தான பணியாளர்கள் இருக்கிறார்கள். நம் இயல்பில் எவ்வித பங்கமும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வார்கள். சமகாலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் பெரும்பாலான நண்பர்கள் வந்து போனவர்களே. கேரள, கன்னட எழுத்தாள நண்பர்களும் வந்துபோயிருக்கிறார்கள். வெறுமனே எல்லோரும் வந்துபோவதில்லை. மனதை நிர்வாணப்படுத்திவிட்டு தக்கையாக வெளியேறுவார்கள்.  அறைகளின் சுவர்களில் எங்களின் சந்தோச, துயரக் கண்ணீரும் கவிதைகளும் படிந்து கிடக்கும். எத்தனை முறை சுரண்டி, எத்தனை முறை பட்டிப்பார்த்து, எத்தனை முறை பெயிண்ட் அடித்தாலும் போகாது. உள்ளிருக்கும் செங்கலோடு உறைந்து கிடக்கும். இசையின் இச்சமர்ப்பணம் நெகிழ்வானது.

நளினக்கிளி கவிதை தொகுப்பின் மணிமகுடம். இசையை நான் காலாகாலத்திற்கும் கொண்டாட இக்கவிதை போதுமானது. நாம் எவர் ஒருவர் மீது கரிசனம் காட்டத் துவங்குகிறோமோ அப்பொழுதே சுரக்கத் துவங்கும் அவர்களின் உள்ளிருக்கும் அழகுணர்ச்சி. தன் கை அசைவு சாம்பல் நிறப் பறவையாக அசைகிறதென்பதை அக் கிளினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நம்மைப்போலவே. இசை கண்டடைந்திருக்கிறார். இனி எந்த கிளினர் கை அசைத்தாலும் அச் சாம்பல் நிறப் பறவையோடு இக்கவிதையும் மிதக்கும் காட்சியை காண்போம்.

தின்று பெருத்ததால் நடக்கிறார்களோ, ஆரோக்கியத்திற்காக நடக்கிறார்களோ, பெரிய மனிதர்களின் தயவு தேவை என்பதற்காக அவர்களோடு சேர்ந்து நடக்கிறார்களோ, ஜால்ராவை நடையிலும் போட முடியும் என்பதற்காக இருக்குமோ அரசியல்வாதிகளுடன் நடக்கும் அல்லக்கைகளின் நடை, இசையின் 'இன்னொருவன் சொல்கிறான்' கவிதையில் வரும் காரணமாக இருக்குமோ என அவ்வப்போது கேள்விகள் மனதில் தோன்றும். உணவில், உழைப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்திற்கு காரணமான கார்ப்ரேட் அரசியலால் உலகத்தை காலை, மாலை நடைக்காரர்களாக மாற்றிக்கொண்டிருப்பதை இசை கூத்தில் வரும் கட்டியக்காரனாக மாறி தன் 'நகை'மொழியால் தொகுப்பில் சில கவிதைகளில் காட்சிபடுத்துகிறார்.

வெள்ளத்தால் ஆற்றின் கரை ஒதுங்கிக் கிடக்கும் மரங்களைப் போல திடுமென காணக்கூடும் சில பைத்தியங்களை. பூட்டை சுமந்தபடி, பாட்டில்களை சுமந்தபடி, ஹெல்மெட்டை மாட்டி. இவர்களில் பெண்ணாக இருப்பின் நம் சமூகம் அவர்களையும்  பிள்ளை சுமக்கச் செய்திடுகிறது. இவர்களின் கடவுளாக அவதரித்தவர்கள்தான் டீக்கடை, நடைபாதை வியாபாரிகள். திட்டிக்கொண்டே எதையாவது தின்னக் கொடுத்துவிடுவார்கள். சில நேரம் சுடுதண்ணிரை மேலே ஊற்றி துன்புறுத்தினாலும் அவ்வப்போது டீயை கொடுக்கும் புண்ணியவான்களும் இவர்களே. அப்படி வாங்கப்பட்ட ஒரு டீயை பார்க்கும் இசை தெய்வமே/இந்த டீ/சூடாதிருக்கட்டும்/சுவை குன்றாதிருக்கட்டும்/பருகப் பருக பல்கிப் பெருகட்டும் என வேண்டுதல் வைக்கிறார். நமையும் வைக்கச் செய்திடுகிறார்.

மின்கம்பம் சாய்க்கும் டாஸ்மாக், வித்யாபதியிடம் சரணடைதல், கண்டடைய வேண்டிய அரூப விரல், நடந்தபடியே இருக்கும் பயக்கிறுக்கு, எச் செயலுக்காக போகிறோமோ அச்செயலுக்காக நமை தகவமைத்துக்கொள்ளும் போக்கைக்கூறும் 'தம்பி' கவிதை, திருட்டுக் களையை போக்கும் ஈக்கள், நினைவில் தழுவும் காதலி, முட்டை புரோட்டவுக்குள் குதிக்கும் ஆனந்தன், நமக்கான ஊறுகாய் மட்டையை தேடச்செய்தல், ஃபேனை ஏற்றிவைக்கச் செய்திடுகிற பாலை, நமை வாங்கும் காற்று, ஒப்புக் கொடுக்க வைக்கும் 'நைஸ்', தனிமையின் விளையாட்டுகள், மடை மாற்றும் கனவு, உழைப்புக் கனி ஈந்தவோர் மீதான அக்கறை, வாணிஸ்ரீ வருகைக்காக உலகை திறந்து வைத்தல், விநாயகர் சுமந்திருக்கும் கனியின் ரகசியம், வீட்டை உலகமாக்கியவர்களின் தொடரும் துயரம், குற்ற உணர்வின் அறவுணர்ச்சி, குழந்தைகளின் பசிக்கு மண்ணைத் தின்னக் கொடுக்கும் சமூக அவலம், காமத்தின் தேவை வடிய உதிர்க்கும் தத்துவக் கணக்கு, லூஸ்கேர் இயக்கும் ஸ்கூட்டிகளின் தடத்தில் அங்கப்பிரார்த்தனை இருத்தல், இணங்கி இருக்கவிடாது தொரத்தியபடி இருக்கும் அதிகாரம், கறைபடாதிருக்க பாதுகாப்பு பட்டையை சுமந்தபடி இருக்கும் துயரம், மலையேறிப்போன காலம் குறித்த சலிப்பு, உளுந்து வடைகளின் உறுதித்தன்மை என வலியூட்டும் நகைப்பின் மொழியில் லயித்துக்கிடக்கச் செய்திடுகிறார்.

தன்னில் விழும் சறுகின் பாரத்தைக்கூட நூல் பிரித்து வட்ட வட்டமாக அலைவு கொள்ளச் செய்யும் நீரின் தன்னையில் தான் கொண்ட, பார்க்க நேர்ந்த துயர்களை தனக்கான மொழியின் வல்லமையால் நறுக்குத் தெறித்தாற் போன்ற மின்னடிப்புகளால் மனதில் அலைவுகளை ஏற்படுத்தக்கூடியன இசையின் கவிதைகள்.

வெளியீடு- காலச்சுவடு.

நன்றி- கல்குதிரை