Thursday, May 15, 2014

நாமும் காணாமல் போகிறோம்

நாமும் காணாமல் போகிறோம்


'யானை காணாமலாகிறது’ இது ஹாருகி முரகாமியின் சிறுகதை. ச.ஆறுமுகம் மொழிபெயர்ப்பில் மலைகள் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இக்கதையை வாசித்திருந்ததால் இதை எப்படி நாடகமாக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் இருக்கும் ஒரு வனவிலங்குப் பூங்காவை நடத்தும் தனியாரொருவர் அதனை நடத்த முடியாமல் கட்டுமான நிறுவனமான பன்னாட்டு கம்பெனி யொன்றிற்கு விற்றுவிட, அப்பூங்காவில் இருக்கும் யானையை மட்டும் யாரும் வாங்கிச்செல்லாமல் இருக்க அதுவே அவ்விடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டவிருந்த அந்நிறுவனத்திற்கு பெரிய இடைஞ்சலாகிவிட, பின்னர் அப்பன்னாட்டு நிறுவனத்திற்கு உதவும் விதமாக அந்த யானையை நகர மன்றமே தத்தெடுத்து அதைப் பராமரித்துக்கொண்டிருக்கையில் அது ஒரு நாள் காணாமல் போய்விடுகிறது.

இக்கதையில் யானை ஒரு குறியீடாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது.

பரபரப்பாகப் பேசப்படும் விஷயங்கள் பிறகு நாளடைவில் ஒரு கட்டத்தில் சுவடற்றுப் போய்விடுகின்றன என்பதை வெளிப்படையாகவும், வளர்ச்சியில் ஏற்படும் சூழல் மாற்றம், இயற்கை அழிவு என்பதைப் பூடகமாகவும் இக்கதை பேசுகிறது. பிரளயன் தன் அனுபவ முதிர்ச்சியால் யானை கதையையும் சொல்லி, கதையின் உள்ளீடாக இருக்கும் அதன் விளைவுகளையும் நாடகமாக்கியிருப்பது சவாலானது.

நாடகத்தில் கதைசொல்லிகளாய் வரும் குழுவினரது உரையாடல் மூலம் முரகாமியின் கதையைக் கூறப் பின் காட்சியாக்கம் செய்திருப்பது நல்ல யுத்தி. இடையிடையே யானைகள் பற்றிய காணொளிப் படக் காட்சியும் ஒளிபரப்பியது தனித்திருந்து உறுத்தலாக இல்லாமல் நாடகத்தின் காட்சிகளோடு அதுவும் ஒரு காட்சியாக மாறியிருந்தது. வனவிலங்குப் பூங்காவை பன்னாட்டு நிறுவனத்திற்கு விற்றுவிட, அதிலிருக்கும் யானையை நகரம் தத்தெடுக்கும் தீர்மானத்தை நகர மன்றத்தில் நிறைவேற்றும் காட்சியில் கட்சிகளின் பொறுப்பற்ற விவாதங்கள், ஊழல்கள், மிளகாய்ப்பொடி வீசுதல், சபை வெளியேற்றம், தீர்மான நிறைவேற்றம் எனச் சமகால அரசியல் கட்சிகளின் போக்குகளை நினைவூட்ட அப்போதைக்கு நாம் சிரித்தாலும் இவர்களின் பொறுப்பற்ற தீர்மானங்களில்தானே நம் வாழ்வும் இருக்கிறது என்பதை நினைக்க நமக்கென்னவென நாம் ஒதுங்கியிருப்பதும் சுட்டது.

அதேபோல் யானையை நகரத்திற்கு அர்ப்பணிக்கும் நாளில் தலைவர் வருவதைச் சித்தரிக்கும் காட்சியில் நடந்துகொண்டிருக்கும் தேர்தல் கூத்துகள் நினைவூட்டின. விண்ணில் விமானம் கடக்கும் ஓசைக்கு அமைச்சர்கள் மண்ணில் வீழ்ந்து வணங்கும் காட்சியில் அரங்கில் சிரிப்படங்க நெடுநேரமானது.

பல சமகால உண்மை முடிச்சுகளை அவிழ்த்தபடியே இருந்தன அடுத்தடுத்த காட்சிகள்.

இரவில் யானைக் கொட்டகையில் தனித்திருக்கும் யானையிடம் யானைப் பாகன் உரையாடும் காட்சியில் கண்கலங்கியது.

கதையில் வருவது போலவே நாடகத்திலும் முரகாமியும் ஒரு பாத்திரமாக வருகிறார். நடைப்பயிற்சியின்போது ஒரு பாறை மீதிருந்து பார்க்க யானைக் கொட்டகையின் மேலிருக்கும் ஜன்னல் வழியே யானையும் யானைப் பாகனும் நன்றாக தெரிகிறார்கள். தினசரி அவர்களைக் கவனிப்பது அவருக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டிருந்தது. ஒரு நாள் யானை சிறியதாகிக்கொண்டிருக்க, பாகன் பெரியதாகிக்கொண்டிருந்ததைக் காண்கிறார்.

அதன் பின் இக்காட்சிமீது, கதைசொல்லிகள் குழு நிகழ்த்தும் உரையாடல் சமகாலச் சூழலை பிரதிபலிப்பதாக இருக்கிறது. முரகாமியோ, மொழிபெயர்ப்புசெய்த ச. ஆறுமுகமோ ஓசூரில் வாழ்ந்தவர்கள் அல்ல.

எனினும் இந்நாடக நிகழ்வு இதனை ஓசூருக்கான ஒன்றாக மாற்றிவிட்டது. ஏனெனில் இவ்வூரில்தான் யானை அடிக்கடி ஊருக்குள் வந்துவிடுகிறது. இவ்வூரைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில்தான் கிரானைட் நிறுவனங்கள் மலைகளை வெடிவைத்து தகர்த்து,காட்டுயிரிகளை வனங்களை விட்டு விரட்டிக்கொண்டிருக்கின்றன. அசோக் லேலண்ட் தொழிலகப் பள்ளியில் ஒரு யானை வந்து பதினைந்து நாட்கள் இருந்துவிட்டுப் போனது. பதினைந்து நாளும் பள்ளிக்கு விடுமுறை.

இயற்கை வளங்கள் கண்முன்னால் அழிந்துகொண்டிருப்பதை இம்மி பிசகாமல் சொல்லிக் கொண்டிருப்பதுபோல் இருந்தது இந்நாடகம்.

யாரின் அழிவில் யாரின் வளர்ச்சி என்பது முக்கியம். வளர்ச்சி குறித்தே நாம் சொல்லிக்கொள்ளும் நியாயங்கள். அதன் விளைவால் உண்டாகும் கேடுகள் குறித்தெல்லாம் கிஞ்த்தும் கவலைப்படுவதில்லை. தன் வளர்ச்சிக்காக எல்லாவற்றையும் கடந்த காலமாக்கும் போக்கும் நிலவுகிறது.

இது யானை வாழ்ந்த இடம், இது மயில் வாழ்ந்த இடம் என நாடகத்தில் காட்டப்படுவதுபோல. மனிதன்தான் முதன்மையானவன், ஆளப் பிறந்தவன் மனிதன், அவனுக்கு எதையும் அழிக்கும் உரிமை உண்டு. அவன் வளர்ச்சியே சமூக வளர்ச்சி என்பதான ஆங்காரத்தால் அவன் செய்யும் அட்டூழியங்களை நினைவூட்டியது நாடகம்.

திடுமென ஒரு நாள் யானை காணாமல் போகிறது. எங்கும் ஒரே பரபரப்பு, அது குறித்த பரபரப்பான செய்திகள், யூகங்கள், சாமியார்களின் குறிகள் என ஒரே பதற்றமான சூழல், பின் அதுகுறித்த எந்த நினைவும் இல்லாமல் போதல், இன்னும் இச்சூழல் தொடர்ந்தபடியே இருப்பதைக் கேள்விக்குள்ளாக்கின காட்சிகள். மனம் பதைபதைக்கும் விஷயங்களையும் மறந்துவிட்டதாக கூறி இயல்பான நம் வாழ்விற்கு எவ்வித குந்தகமும் ஏற்படாது பார்த்துக்கொள்வதை நினைவூட்டியது.

சீரியல்களைவிட அதிகமாகிப்போனது டாக்-ஷோ. பிரளயனும் நாடகத்தில் அப்படியான ஒரு பேச்சரங்கத்தை ஏற்படுத்தியிருந்தார். குரலற்றவர்களின் குரல் எனும் நிகழ்வில் இன்று வளர்ச்சி, வரமா? சாபமா? எனும் தலைப்போடு. இதில் மனிதர்களோடு மான் முயல் கரடி யானை மயில் என வன விலங்குகளும் கலந்துகொண்டு மனிதர்களின் அட்டூழியங்களைப் பேசியவனவெல்லாம் காட்சியாக்கப்பட்டிருந்தது நம்மின் கேவலமான நடவடிக்கைகளை நினைவூட்டின.

“யானைகளின் பாதைகளை மறித்து மனிதர்களின் அட்டூழியம்! பண்ணை வீடுகள் கட்டினர்” “பாம்புகளின் வாழ்விடமான பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் மனிதர்களின் அராஜகம்! பிறந்த மண்ணிலே அகதிகளாக்கப்படும் பாம்புகளின் அவலம்!!” என காட்டுயிரிகள் நடத்தும் பத்திரிகைச் செய்திகள் நகைச்சுவையாக இருந்தாலும் இருப்பதிலேயே மனிதன்தான் ஆபத்தான விலங்கு என்பதை உணர்த்தத் தவறவில்லை

முரகாமிக்கும் அவரது தோழிக்குமான உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்தது. தான் தினமும் யானைக் கொட்டகையின் பின்புறம் இருக்கும் பாறையின் மேல் இருந்து பார்க்க யானையும் யானைப் பாகனும் தெரிவார்கள். தனித்திருக்கையில் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொள்வார்கள். அப்படித்தான் ஒரு நாள் பார்க்கையில் யானை சிறிதாகிக்கொண்டே வந்தது, பாகன் பெரிதாகிக்கொண்டே போனான் என்கிறார். அவர் தோழியோ ‘‘அதாவது யானை சின்னதாகிக்கொண்டே போய் காற்றில் கரைந்து விட்டது என்கிறீர்” என மெல்லிய புன்னகையை உதிர்த்து நகர்ந்துவிடுகிறார். தான் கூறும் உண்மையை இப்படித்தான் எல்லோரும் புறக்கணிப்பார்கள் என விரக்தியோடு கதையை முடிக்கிறார் முரகாமி.

இயற்கை அழிந்துவருவதைத்தான் யானை சிறிதாகிவருகிறது என்றும் மனிதனின் பேராசை அகங்காரம் வளர்ந்துவருவதைத்தான் பாகன் பெரிதாகிவருவதாகவும் முரகாமி சொல்கிறாரோ என்று குறுக்கிடும் நாடகக் கதைசொல்லிகளின் கேள்வி, கதைக்குக் கூடுதல் அர்த்தத்தை பரிமாணத்தை வழங்குகிறது.

அதன் பின் நிகழ்த்திய காட்சியில் மனம் பதைத்தது. அரங்கில் யானை ஒன்று நிற்க, பன்னாட்டு முதலாளிகள் அதைத் துண்டுதுண்டாக வெட்டி வீசிவிட அது படிந்த காடுகளையெல்லாம் தங்களின் நிறுவனங்களை நிறுவிவிட, வனத்திலிருக்கும் பழங்குடிகளின் வாழ்வில் ஏற்படும் மாற்றம், அவர்களின் அலைக்கழிப்பு, துயர்களை வெளிப்படுத்திப் பெரும் குற்ற உணர்வுக்கு ஆளாக்கி முடிவுற்றது நாடகம்.

ஏப்ரல் 19 மாலை ஓசூர் டி.வி.எஸ் அகாடமியில் நடந்த இந்நாடகத்தை, மாணவ மாணவிகள் 90 பேர் சேர்ந்து நிகழ்த்தினர். ஆங்கிலவழிக் கல்வி பயின்றபோதிலும் தமிழ் வசனங்களை சரளமாக உச்சரித்தனர்.

Keywords: இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல், ஓசூர் டி.வி.எஸ் அகாடமி, 'யானை காணாமலாகிறது’

nantri: tamil hindu

Friday, March 21, 2014

நேசிப்பிற்காக நிரம்பும் மொழி...


மீச்சிறு அதிர்வாகத்தான் இருக்கும். ஆனால் அன்றைய பொழுதையே தனக்கானதாக மாற்றிக்கொள்ளும் கவிதைகள். நிறைய்ய கவிதைகள் நிறைய்ய பொழுதுகளை தனக்கானதாக மாற்றிக்கொள்கின்றன. அப்படியான கவிதைகளும், கவி சொல்லிகளும் என் பட்டியலில் நீண்டுகொண்டேதான் இருக்கிறார்கள். இப்பொழுது வேல்கண்ணனும் இசைக்காத இசை குறிப்போடு.

முதல் தொகுப்பைப்போலவே இல்லை அத்தனை கவிதைகளும் அற்புதம் என்றெல்லாம் பொய்யுரைக்க மனமில்லை. இது முதல் தொகுப்பாகவே இருக்கிறது என்பதுதான் சந்தோசம். மாடிக்குச் செல்ல ஒவ்வொரு முறையும் தாவிக்கொண்டே இருக்க முடியாது. படிகட்டுகள் அவசியம்தானே. முதல் படிக்கட்டு என்பதால் வசதியாக இருக்கிறது ஒட்கார்ந்து பேச...

தொகுப்பை சமர்ப்பனம் செய்திருப்பவரின் பெயரை படித்ததுமே பவா.செல்லதுரையின் ‘எல்லா நாளும் கார்த்திகை’ தொகுப்பிலிருக்கும் கட்டுரை நினைவில் வந்தது தவிர்க்க இயலவில்லை.

அவன் ஒரு காட்டாறு. அவனுக்கு அடங்கத் தெரியாது. அவன் துள்ளிக்கொண்டே இருந்த ஓர் இளங்கன்று. அவன் சொடுக்கில் கூட்டம் மொய்க்கும். தன் வெடிச்சிரிப்பால் ஒளியூட்டுவான் என ராஜவேலு குறித்து எழுதியிருப்பார். தன்னை விட்டு பிரியக்கூடாதென நேசிப்பவர்களை நாம் நமக்கருகிலேயே வைத்துக்கொள்ளத் தோன்றும். தன் அண்ணன் ராஜவேலுவின் நினைவுகளை தொடர்ந்து மீட்டெடுக்க இத்தொகுப்பை அவருக்கு சமர்ப்பித்துள்ளார்.

இடது கையால் நோயை துடைத்தெறிந்துவிட்டேன் என ராஜவேலு கூறியதை நினைவூட்டியது ‘பச்சையம்’ கவிதையில் மருத்துவமனையுள் இருந்த மரத்தடியில் அமர்ந்து இளைப்பார சாய்ந்திருக்க அம்மரம் மொத்த நோயையும் உறிஞ்சிக் கொள்ளாதோவெனும் வரிகள் சத்தியமானவை. மரத்திற்கு நோயை உறிஞ்சும் தன்மை இருந்தால் மருத்துவம் ஒரு தொழிலாக மாறியிருக்காது. அச்சகம் ஒன்றில் வேலை பார்க்கையில் உடன் வேலை பார்க்கும் சிறுவன் நோய் பீடித்து இறந்துவிட்டான். அவனை புதைத்து எல்லோரும் வெளியேறிய பின் அருகிலிருந்த தோப்பில் இருந்த வேப்பமரத்தில் சாய்ந்து அவன் குறித்த நினைவோடிருந்தேன். சற்றைக்குப்பின் என் துயர் முழுதையும் உறிஞ்சிக்கொண்டு எனை வெளியேற்றியது மரம். மரம் ஒரு அற்புத சிநேகிதம்.

 ‘சுமக்கும் சாலை’ கவிதையும் துயர்பனியை போர்த்தியது.

போதாமை மிகுந்து வாழும் வாழ்வு நமது.  எண்ணுவதையெல்லாம் செயலாக்கம் செய்ய முற்படும்போது ஏதோவொன்றால் தடை பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு வாரத்தில் முடிக்கவேண்டும் என படிக்கத் துவங்கினால் மாதக்கணக்கிலும் முடியாது நீள்வதுண்டு. நம் இயலாமையை எது ஒன்றையாவது வைத்து நிரப்பி சமாதானமோ மகிழ்வோ கொள்கிறோம். நட்சத்திரங்களை எண்ணுவதற்கு ஆசைபடும் வேல்கண்ணன் நிலவில் ஆறுதல் கொள்வதைப்போல.

விழிகளில் சொல்லைக் கண்டடைந்து,  முத்தங்கள் சேமிப்பிற்கானவை  அல்ல எனக்கூறி, வாழ்வும் மரணமுமாய் கலந்திருந்து,  பொழுதை நிந்தித்து, மிச்ச உயிரை கன்னக்குழியில் மச்சமாக்கி, தொடர்ந்து தவம் செய்து, மீள இயலாத பாதரசமாக உருண்டோடி, கலவியின் மிச்சங்களைத் தேடி ரகசிய அழைப்பிற்காக காத்திருந்து, மதுவின் இறுதி மிடராகி சிதறி, ஒற்றைச் சுடராய் உருமாறி நின்று, தனக்கான சில துளிகளில் உயிர்த்திருந்து, கவிதையாகி நெருங்கிக் கிடந்து, புதிரை விடுவிக்கும் ஒளியாகி, பாலையிலும் பூக்களை கொய்துகொண்டிருப்பவனாகி, அரங்கேற்றாத துரோக நாடகத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க கோருபவனாகி தொகுப்பு முழுமையும் நேசிப்பவளுக்கான மொழியால் நிரம்பிக் கிடக்கிறது.

தொகுப்பில் காதல் கவிதைகளைப்போல அடர்ந்திருக்கிறது மௌனமும்...

மௌனத்திற்கு முகங்கள் பல உண்டு. சிலரது மௌனம் கலவரப்படுத்தும், சிலரது மௌனம் அர்த்தமிக்கதாய் இருக்கும். சிலரது மௌனம் சந்தோசப்படுத்தவும் செய்யும். மௌனத்தின்போதுதான் வார்த்தைகள் நிறைய்ய சேகரமாகின்றன. நிரம்பும் தறுவாயில் சிறு கீரல் போதும் உடைபட்டு வெளியெங்கும் வீச்சோடு தெறிக்கும். அது நமை வீழ்த்தவும் செய்யும். மௌனம் குறித்த வேறு வேறு விதமான யோசிப்புகளைத் தூண்டியது ‘மௌனம் புரிதல்’ கவிதை. மேலும் மௌன வெளியில் தீராத இசையை மீட்டிப் பார்க்கிறார். ‘ஆதியும் அந்தமும்’ கவிதையில். மௌனத்தின் சொற்களுடன் ஒரு பறவை ஒரு மிருகத்தையும் எழச் செய்கிறார். ‘வேள்வி’ கவிதையில் மலையை நீளும் மௌனத்தோடு தவம் இருக்கச் செய்கிறார். நேசித்தவள் சொல்லிக்கொடுத்தவைகளிலிருந்து புழங்கத் தொடங்கியும் கற்றறியா அவளின் மெனனம் குறித்த ‘மௌன தவம்’ கவிதை. ‘ரகசிய அழைப்பு’ கவிதையில் இருக்கும் கள்ள மௌனம்,  கவிழ்ந்த இருளில், சிணுங்கிய கொலுசொலியில், வீணையில், கடலில், பிரிவின் வலியில், கருவறையற்றவளின் விசும்பலோசை என ஓசைகளின் நிழலாக கிடக்கும் மௌனம் குறித்த ‘ஓசை’ கவிதை, மரங்களுக்கு வாய்த்திருக்கும் சிலைத்த மௌனம் குறித்த கவிதை ‘மின்மினி’களிலும்... தொகுப்பில் மௌனம் பெரும் குறியீடாக இருக்கிறது.

தொகுப்பில் ஒவ்வொரு கவிதையும்  அதன் துவக்கத்தால் தன்னை வாசிக்கச் செய்திடுகிறது. கவிதை தனக்கான வாசகனை அடையாளம் கண்டுகொள்ளும்.

அரிதினும் அரிதான சிலரின் நட்பு கிடைத்துவிடும். அவர்களுடனான சந்திப்பு உடையாடல் என பொக்கிசமாக பொழுதுகள் கழியும். அப்படியானவர்களின் திடிர் இழப்பு ஈடுசெய்ய இயலாதது. அப்படியான துயரோடு ஒருநாள் அலைந்துகொண்டிருக்கையில் பெயர் மறந்து உருவம் மட்டுமே நினைவில் இருக்கும் பால்ய சிநேகிதனின் கரம் பற்ற இழந்தவரை மீட்டெடுத்து நீராடி வெளியேறும் புதியவனானேன்.  இப்படியான தருணங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதுண்டு. வேல்கண்ணனுக்கு வேல்விழி கிடைத்ததுபோல.

நெய்தலில் நடைபோட்டு முல்லையில் விளையாட நினைத்து சென்றவனுக்கு விரும்பாமலே பாலை வாய்த்துவிடுவதுண்டு. நேசிப்பவள் உடன் அற்ற பொழுது பாலைதானே.’ நீ வராத மாலை’ கவிதையில் நமக்கான பாலையையும் காட்சியாக்கியுள்ளார்.

நட்சத்திரங்களின் ஆவிகளை தன் போர்வைக்குள் ஒளிந்துகொள்ள இடம் கொடுத்த ‘மிச்ச உயிர்’ கவிதை மீண்டும் வாசிக்கத் தூண்டியது.

பொய்யும் புனைவுமற்ற நிர்வாணம் பேரழகு. அதனால்தானோ என்னவோ நிர்வாணத்தை ரசித்தபடியே இருக்கிறோம். நிஜ உருவம் என்றுமட்டுமல்ல நிழல் உருவத்திலும் கூட. இத்தொகுப்பிலும் நிர்வாணத்தை உற்று நோக்கும் ஒரு கவிதை உண்டு. அதில் அருவெருப்பான...அழுகும் என்ற வரியை தவிர்த்திருக்கலாமோவெனத் எனக்குத் தோன்றியது. பேரழகில் எதற்கு அருவெருப்பும் ஆழுகும்...

அந்தரத்தில் நடனமிட்டு நகரும் சிறுமியை அதிசயித்தும், இரத்தம் தெறிக்க தன்னை சாட்டையால் அடித்துக்கொள்பவனிடம் தன் பரிதாபத்தையும் காட்டியபடி நிற்பவர்கள் காசிற்காக தட்டேந்தி வரும் சிறுமியை பார்த்ததும் செல்லை காதில் வைத்தபடி நகருபவர்களை ஏளனப்படுத்துகிறது ‘நிறுத்தம்’ கவிதை.


நம் காலத்தின் கொடுந்துயரம் ஈழத்தில் நிகழ்ந்த  கொலைகள். அந்த வதை குறித்த பாதிப்பு யாரையும் விட்டுவைக்கவில்லை.  அவரவர் அளவில் அது குறித்த பதிவுகளை வலியோடு சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வேல்கண்ணனும் தனக்கான வலிகளை ‘இறுதிச்செய்தி’, ‘நிழற்படம்’, ‘முள்வேலிகளுக்கு அப்பால்’ கவிதைகளில் பகிர்ந்துள்ளார்.

விரும்பியோ விரும்பாமலோ பிழைக்க நேசித்த மண்ணை பிரிந்து வேறு எங்காவது போகவேண்டியிருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு இதுதான் நிலை என்பதால் அதில் படைப்பாளிகளும் தப்பவில்லை. ஆனால் எத்தனை வருடம் ஆனாலும் பிறந்த மண் வாசனையை மட்டுமே சுமந்து திரிகிறோம். போன ஊரின் மண்ணை தொட்டுப் பார்ப்பது கூட இல்லை. அதனோடு ஒட்டாமல் இருப்பதாலோ என்னவோ அம்மண் குறித்த எந்த பதிவையும் நம் படைப்புகளில் கொண்டுவராமல் இருக்கிறோம். ஆனால் இது தவிர்க்கக் கூடியது. நம்மை ஒரு விசயம் கூடவா இடையூறு செய்திருக்காது. இத்தொகுப்பிலும் காண கிடைக்கவில்லை.

அள்ளும் கை மணலில் ஓடும் நதியை தரிசிக்கும் கவி மனதை என்றென்றும் வேல்கண்ணன் தக்கவைத்துக் கொள்வார் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது இசைக்காத இசைக் குறிப்பு.


வெளியீடு: வம்சி புக்ஸ்
19,டி.எம்.சாரோன்,
திருவண்ணாமலை-606 601.

nantri:yaavarum.com

Tuesday, March 18, 2014

பூக்குட்டியின் சொந்த ரயில்

பூக்குட்டியின் சொந்த ரயில்


காத்திருக்கிறேன் பயணத்திற்காக. ரயில் வருகிறது. பஸ் டிரைவர், லாரி டிரைவர் என்பதபோல் ரயில் டிரைவர் என்ற யாரும் அழைப்பதாக தெரியவில்லை. முகப்பில் அவர் தெரியாது இருப்பதால் ரயில் என்பதே எல்லாவற்றிற்குமான பொதுப்பெயரானது போலும். ரயில் டிரைவரை மறந்து ரயிலை உற்று நோக்கினேன். அதன் முகப்பில் இரட்டைச் சடையோடு ஒரு சிறுமியின் படம் இருப்பதை பார்த்து உற்சாகம் தொற்றிக்கொண்டது. ரயில் அருகில் வர ஏறி அமர்ந்தேன். தனது புறப்பாடை ஊராருக்குத் தெரிவித்து நகரத் தொடங்கியது.
யாரோ உற்று நோக்குவதுபோல் இருக்க சட்டென திரும்பிப் பார்க்கிறேன். எதிரில் ஜன்னலோரத்திலிருந்த குழந்தை எனைப் பார்த்துக்கொண்டிருந்தது. கண் சிமிட்ட காத்திருந்தாற்போல் அவளது கண்களும் சிரித்தன. உடல்மொழியால் விளையாடத் துவங்கினோம். சிநேகிதம் நெருங்க அருகில் அழைத்தேன். தயங்கித் தயங்கி அம்மாவின் அனுமதியோடு வந்தவளிடம் பெயர் கேட்டேன். ரோஜா என்றாள். அம்மா அப்பா பெயர் கேட்க ரோஜாப்பா, ரோஜாம்மா, ரோஜாஅண்ணன், ரோஜா தம்பி ரோஜா வீடென விடாது கூறியவாறு பெரும் ரோஜாவனத்தையே தன் கைகளால் காட்சியாக்கினாள். எனக்கும் என் பக்கத்து வீட்டுக்காரர்கள் நினைவு வந்தது. பத்தாண்டு ஆகியும் இன்னமும் முகில் அப்பா முகில் அம்மா என்று அழைப்பது. தனாக சிரிப்பதை பார்த்து லூசா அங்கில் எதுவுமே சொல்லாம சிரிக்கிறிங்க என்றாள். அதற்கும் சிரித்து ஒரு முத்தமிட வேண்டினேன். ஆங்.... அஸ்க்கு.... நான் தரமாட்டேன் என்றாள்.
எப்படியாவது முத்தம் பெற்றுவிட வேண்டுமென அவளோடு உரையாடலை துவங்கினேன். ரோஜாவிற்கு பூக்குட்டியென பெயரிட்டேன். அவளுக்கும் பிடித்துப்போக சந்தோசமானாள். பூக்குட்டிக்கு என்ன வேண்டுமென கேட்க, எதையும் யோசிக்காமல் டக்கென கரடி பொம்மை என்றாள். நெடுநாளாக பெரிய கரடி பொம்மை கேட்டு அடம்கொள்ளும் என் மகனின் நினைவு வர வாங்கும் சக்தியற்று வாழ்வது குறித்த கவலையில் சுருங்கினேன். பூக்குட்டியின் கவனத்தைத் திருப்ப சோட்டா பீம் குறித்து உரையாடினேன்.
இம்முறையும் பூக்குட்டி முத்தம் கொடுக்க மறுத்துவிட்டாள். பாரதியின் மீசை, சூ அணிந்து வந்த வள்ளுவர், பெரியாரின் தடியென நிறைய்ய கதைகளை சொல்லத் துவங்கினேன். நிறைய்ய கேள்விகளோடு ஊம் கொட்டிக்கொண்டிருந்தவள்.டக்கென பிரகாசமானாள். அறுந்த புலி வாலைத் தைக்க குண்டூசி தேடிக்கொண்டிருந்த முயலின் கதையைக் கூறுகையில்.
பூக்குட்டி ரயிலில் கிடந்த விளம்பர நோட்டீஸ்களை எடுத்துவந்தாள். ஒரு பக்கம் எழுத்தில்லாமல் இருந்தவைகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவைகளை தூக்கி எறிந்தாள். பையிலிருந்த என் பேனாவை பிடிங்கினாள். மேலிருந்து கீழாக ஒ,ஃ,த,ந,ஊ என நிறைய்ய எழுதிக்கொண்டே வந்தவள் ஒவ்வொரு எழுத்திற்கும் நேராக கையை வைத்து இது எப்படி இருக்கென கேட்கத் துவங்கினாள். யானை, காகம், புறா, அன்னம், தண்ணீ லாரி என எங்கள் பெட்டி நிறைய்யத் துவங்கியது.
அடிக்கடி எழுந்த வாம்மா... அங்கிளை டிஸ்டர்ப் செய்யாதே எனும் குரலை காதுகொள்ளாதிருந்தவள் என்னிடம் அவளின் அம்மாவை பழிப்புக்காட்டிக்கொண்டிருந்தாள். மறுபடியும் கதை கேட்டாள். குடுவையின் அடியில் இருந்த நீரை அருந்த சிறுசிறு கற்களை பொறுக்கப்போன காகத்தின் கதையைக் கூற தலையில் அடித்துக்கொண்டு காக்கா டீச்சர் சரியாகவே சொல்லித்தரல அங்கில், பேசாம ஒரே ஒரு ஸ்ட்ராவை எடுத்து வர சொல்லிக்கொடுத்திருக்கலாம் என்று சிரித்தவள் மேலே பார்த்தபடி இருந்தாள். நானும் பார்க்க இயேசுவின் படம் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. என்ன பூக்குட்டி இயேசப்பாவா என்றேன். இல்ல, இயேசு தாத்தா என்றாள். புன்னகைத்த இயேசு தன் மடியிலிருந்த ஆட்டுக்குட்டியை பூக்குட்டியோடு வி¬ளாயட அனுப்பிவைக்க இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். என் பால்யத்தில் பக்கத்துவீட்டு பையன்களோடு ராசு தாத்தா கதை சொல்லிய இரவில் பெய்த மழை நினைவில் வர நனைந்துகொண்டிருந்தேன். என் ஈரம் உலர்த்த ஆட்டை அனுப்பிவிட்டு சூரியனை அழைத்து வந்தாள் பூக்குட்டி.
கை தட்டும் ஓசை கேட்க இருவரும் திரும்பினோம். தேவதைகளாக திருநங்கைகள். கொடுத்த பத்து ரூபாயிற்கு இருவரையும் தலையில் கைவைத்து ஆசிர்வதிக்க பூக்குட்டி அவர்களுக்கு முத்தத்தை பரிசாக்கினாள். நானும் ஆசையாக கன்னம் காட்ட அன்பால் அடி ஒன்று கிடைத்தது.
விரல்களிடம் தன் அப்பா குறித்து கோள்மூட்டிக்கொண்டிருந்தவளை இடைமறித்து போதும் விடுப்பா அப்பா பாவம் என்றேன். ஆமாம் அப்பா பாவம்தான் என அவளும் கூறினாள் அவள் அம்மாவை ஓரக் கண்ணால் பார்த்தபடி.
எங்கள் பெட்டிக்கு இப்போ கிளி ஜோசியர் வர கிளியை வேடிக்கை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் பூக்குட்டி. கூண்டிலிருக்கும் கிளி பள்ளியிலிருக்கும் குழந்தையாக எனக்குத் தோன்றியது. அக்குழந்தை திரும்பி எனைப் பார்த்து சிரிக்க பூக்குட்டியாக இருக்க அதிர்ந்தேன். கிளிக்கூண்டின் முகப்பில் எல்.கே .ஜி என எழுதியிருந்தது. ஒரு டீச்சர் உள்ளே நுழைந்தார். ராபிட்-முயல், பேரட்-கிளி, டக்-வாத்து என சொல்லிக்கொடுத்தபடி இருந்த டீச்சரை இடை மறித்து மிஸ் பெங்குவினுக்கு தமிழ் பெயர் என்ன? எனக் கேட்க, எத்தனை முறை உங்களுக்கு சொல்வது பாடம் நடத்தும்போது டிஸ்டர்ப் செய்யக் கூடாதென. பிறகு கேளுங்க என அதட்டியபடி வெளியேறினார். எழுந்த மணியோசைக்கு எல்லோரும் சர்ச் பக்கம் விளையாடப்போக சத்தம் போடாதிங்க என பாதிரியார் விரட்ட தூரமாக விளையாடச் செல்கிறார்கள் உடன் இயேசுவும் சென்றுகொண்டிருந்தார். அவர்களை நோக்கி கை அசைத்துக்கொண்டிருந்தேன்.
ஐய்யோ அங்கிள் அங்க யாரு இருக்கா டாட்டா காட்டிக்கிட்டிருக்கீங்கவென என் தலையிலடித்தாள். உனக்குத்தான் காட்டினேன் பூக்குட்டியென மழுப்பினேன். சரி உங்களுக்குத் தெரியுமா எனக்கு எங்க ஹெல்மெட் கிடைக்குமென எங்க அப்பாவுக்கு தெரியல என்றாள். குழந்தைகளுக்கெல்லாம் ஹெல்மெட் தயாரிப்பதில்லை என்றேன். நாங்களும்தானே வண்டியில் போகிறோமென்றாள். குற்ற உணர்வில் முகம் பார்க்க தவறினேன். உங்க அப்பா எங்கேவென கேட்ட பக்கத்துவீட்டு சிறுமியிடம் அவர் சாமியிடம் போயிருக்கார் என நான் கூற, சாமிதான் முதலில் செத்தாரா எனக் கேட்டதும் நினைவில் வர இதுகாறும் குழந்தைகள் மீதான என் புரிதல் குறித்து ஏற்பட்ட குழப்பத்தோடு இருந்தேன்.
திடுமென பூக்குட்டி முத்தமிட்டாள். இறங்கப்போறோம் டாட்டா அங்கிள் என்றாள். அவளின் ஈரம் என்னுள் மகிழ்வை விதைத்தபடி இருக்க வாசித்துக்கொண்டிருந்த சொந்த ரயில்காரி தொகுப்பை பையிலிட்டு எனது நிறுத்தத்தை எதிர்பார்த்திருக்கையில் மறவாது கைகுலுக்கினேன். வாழ்த்துக்கள் ஜான் சுந்தர்.
சொந்த ரயில்காரி
ஜான்சுந்தர் கவிதைகள்
அகநாழிகை பதிப்பகம்.
nantri:malaigal.com

Saturday, February 1, 2014

nantri:puthu visai

மரணத்தோடு கண்ணாமூச்சு...
-ந.பெரியசாமி

பெரும் மரமெங்கும்
துளிர்த்திருக்கும் இலைக்கொன்றாக பறவைகள்
அதிசயித்துக் கேட்டான் வழிப்போக்கன்
அறியாயோ...
மரணமற்ற ஊர் இது
ஜீவிதம் முடிய பறவையாவார்களென்றேன்
அருகிலொருவன் அழைத்துக்கொண்டிருந்தான்
தன் மூதாதைப் பறவையை
உணவூட்டலுக்காக...

பால் சக்காரியாவின் சந்தனுவின் பறவைகள் கதை வாசிக்க நான் எழுதிய கவிதை.. ஒரு நல்ல படைப்பு எதையாவது செய்யத் தூண்டும்தானே...

நான் கேட்கத் துவங்கிய முதல் கதை வாசித்த முதல் கதை எதுவாக இருக்குமென அப்பப்போ தேடிப் பயணிப்பதுண்டு விடையற்று வானமாய் பெரும் தடுப்பு ஏற்பட பயணம் மறந்து போகும். நிச்சயம் ஒரு நல்ல கதையைத்தான் கேட்டிருப்பேன். இல்லையெனில் தொடர்ந்து கதை கேட்கும் ஆர்வம் இருந்திருக்காது. கதை படிக்கும் ஆர்வமும் ஏற்பட்டிருக்காது. நல்ல எழுத்துக்களை அப்பப்போ வாசிப்பதால்தான் தொடர்ந்து இன்னும் வாசித்துக்கொண்டே இருக்க முடிகிறது. பால்சக்காரியாவின் அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும் தொகுப்பும் மேலும் என் வாசிப்பை நீட்டிக்கச் செய்தது.

அழுது தொலைக்க வேண்டியதாகிவிட்டது. சனியன் எவ்வளவு கட்டுப்படுத்தியும் அடக்க முடியவில்லை.

அப்பா, பறவைகள் சாவதில்லையா?

இல்லை சந்தனு அவைகள் பறந்து பறந்து மேகம் கடந்து விண்வெளியை அடைந்து விடுகிறது.

அம்மா பறவையாகி பறந்து போவதை பார்த்தியாப்பாவெனும் கேள்வி கண்களை நீர்க்குமிழியாக்கிவிடுகிறது. ஏதோ குழந்தைகளுக்கு கதை சொல்லியிருக்கிறார் என வாசித்து வர மரணத்தை பறவையில் ஏற்றி மிதக்கச் செய்துவிடுகிறார் சந்தனுவின் பறவைகள் கதையில்...

என்றோ செய்த பயணத்தின்போது பார்க்க நேர்ந்த விபத்தில் சிதைந்த உடல் அவ்விடத்தை எப்பொழுது கடந்தாலும் நினைவில் வருவதை தவிர்க்க முடிவதில்லை. கருத்து முரண்பாடுகளோடு அடிக்கடி சண்டையிட்டு வாழும் தம்பதியர் பார்க்க ஒருவனை தற்கொலை செய்து ‘கடல்’ கதையில் கூறுகிறார் நினைவில் தேங்கி நிற்கும் மரணத்தை...

அந்தகாரம் கொடுத்த அமைதியையும் பாதுகாப்பையும் அங்கிகரிக்காது கிணறே உலகமாய் சுற்றி வலம் வர, கிணற்றின் பொந்துகளில் மறைந்துகிடக்கும் மரணங்களோடு இதுதான் உலகம் இதுதான் உலகமென கவிதையாய் நீண்ட தவளையின் பயணத்தில் மரணத்தையும் கூறிச்செல்கிறார் ‘பிரபஞ்சத்தின் சிதைவுகள்’ கதையில்.

விசில் ஒலியை ஒரு புள்ளியாக்கி மொழியால் அப்புள்ளியை பாவு காய்ச்சி அதை ‘ஒரு குறுகலான இடம்’ ஊற்றி வாசிக்கவும் கேட்கவுமாக இசையாகிறது மரணம்...

எனக்கும் ஆசையாகிவிட்டது. இறந்து பின் எழுந்து பார்த்தேன். உறவுகளின் துயர் பீறிட்ட அழுகை, மௌனம், யார் யாரெல்லாம் வந்துகொண்டிருக்கிறார்கள், பசிதாங்காதவர்கள் வேறெங்கோ போகிறமாதிரி போய் டீயோ ரொட்டியோ தின்று வருவது, எதையாவது காரணம் சொல்லி வராது இருப்பவர்கள், புதைப்பதாக இருந்தால் எந்த இடத்தில் புதைப்பார்கள், எரிப்பதாக இருந்தால் எந்த இடத்தில் எரிப்பார்கள். நண்பர்கள் பேஸ்புக்கில் போடும் மரணச்செய்திக்கு எத்தனை லைக் கிடைக்கும். உள் நாட்டில் எத்தனை நண்பர்கள் வெளி நாட்டில் எத்தனை நண்பர்கள் லைக் இட்டார்கள். அஞ்சலி கருத்து எத்தனைபேர் எழுதுவார்கள். நான் இருந்துகொண்டிருக்கும் தமுஎகச அமைப்பு அஞ்சலி நோட்டீஸ் அடிப்பார்களா, என்ன மாதிரி அடிப்பார்கள். எந்த போட்டோ பயன்படுத்துவார்கள். இப்ப ஒன்றும் பிரச்சினையில்லை பேஸ்புக்கில் நிறைய நல்ல போட்டோக்கள் இருக்கு. எனக்காக மெனக்கிட்டு எந்தந்த தோழிகள் வருவார்கள், மரணிக்கும் தருவாயில் யார்யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும். இத்தனை வருட வாழ்வில் யார் யாரெல்லாம் நம்முடன் உண்மையாக இருந்தார்கள். கொஞ்சம் கவிதைகள் எழுதியிருப்பதால் எழுத்தாளன் என மதித்து ஏதாவது இதழ்களில் அஞ்சலி கட்டுரை வருமா. யார் யாரெல்லாம் எந்தெந்த பத்திரிகையில் எழுத சாத்தியமிருக்கிறது, வாய் மூடி கண்மூடி அழகாக உறங்குவதுபோலத்தான் இருக்கும் எனது பிரேதம் என நீண்ட நேரம் அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும் கதையில் வரும் அல்ஃபோன்சம்மாவாகவே இருக்க செய்துவிட்டார்...

மரணம் குறித்திருந்த பயத்தை பிடிங்கி எறிந்து மரணத்தை ஒரு குழந்தையாக்கி மடியிலிட்டு கொஞ்சவும், அதனோடு கண்ணாமூச்சாடாவும் செய்த சக்காரியாவை என்றாவது பார்க்க தழுவி கைகுலுக்க ஆவலோடு இருக்கச் செய்தது தொகுப்பு.

தொகுப்பில் வேறு கதைகளும் நிழலாய் உடன் வந்தபடி இருந்தன. சிறுவயதில் பாட்டியிடம் கேட்ட கதைகளில் வரும் ஆடு, மாடு, கிளி, மரம், வண்டு என எல்லாமே பேசும். அடுத்த நாள் காலை போய் அதுகளிடம் நீண்ட நேரம் பேசிப்பார்க்க எப்பதிலும் அதுகளிடமிருந்து வராதிருக்க ஏமாற்றங்களோடு பாட்டியிடம் போய் ஏன் என்னிடம் எதுவும் பேசமாட்டேன் என்கிறது எனக் கேட்க, போட போக்கத்தவனே அது கதையில்தான் பேசும் என்பார். ‘ஓரிடத்தில்’ கதையில் தவளை மூலம் நம் இயலாமையின் வலியை பேசிச் செல்கிறார்.

சில கதைகள் அது சொல்லப்பட்ட விதத்தில் நம் நினைவின் குடிபெயர்ந்து விடுவதுண்டு. ‘ரகசியப் போலீசும் ஓர் ஆட்டிடையனும்’ கதையும் அப்படித்தான். ஒரு கதை மர்மமாக முடிச்சுகளை போட்டுக்கொண்டே செல்வதும், அக்கதையில் இருக்கும் வேறு கதை அதை அவிழ்த்தப்படியே தொடர்வதாக பின்னப்பட்ட இக்கதையின் போக்கில் இராணுவத்தின் வறண்ட தன்மையையும், சாமானிய எழுத்தாளனின் கரிசனம் மிக்க போக்கையும் போகிற போக்கில் இசைத்து காட்டியிருப்பது அழகு...

‘குஞ்ஞாப்பு எப்படிப்பட்ட ஆளு, குஞ்ஞாப்புவுக்கு எல்லாம் தெரியும். வானத்தைப் பார்த்துக்கொண்டே ‘இதோ, இப்ப மழை வரப் போகுது என்பார் மழையைச் சும்மா அப்படியே தோளில் போட்டுக்கொண்டு எவ்வளவு வேகமாக நடக்கிறார். இப்போ மழை கீழே விழுமெனத் தோன்றும் அது சுகமாயிருக்கும்...’ குஞ்ஞாப்பு போன்றவர்களை எங்காவது சந்திக்க நேர்வதுண்டு. எல்லா விசயங்களிலும் குழந்தைமையோடு இருப்பார்கள். குஞ்ஞாப்புக்கும் உண்ணிக்குமான உறவுகளின் காட்சி கவிதையாக விரிகிறது ‘குழந்தை உண்ணி’ கதையில்.

நவீன மனிதனின் மன இடைவெளிக்குள் மற்றொரு மனிதன் நுழைய முடியாதபோது அவனது இடைவெளியில் பியானோ, புத்தகங்கள் மட்டுமே நுழைய முடியும் சாத்தியங்கள் இருப்பதால் எனது விரல்கள் பியனோவையும், புத்தகங்களையும் பற்றியிருக்கிறது என்பார் கோணங்கி.-இத்தொகுப்பின் கதைகள் வாசித்த நாட்களில் மனம் நிரம்பி விரல் பிடித்து உடன் அலைந்துகொண்டேயிருந்தனர் தொகுப்பிலிருந்த மனிதர்கள்.

நான் சிறுவனாக இருந்தபோது அம்மா இரண்டு ஆட்டுக்குட்டிகளை வாங்கி வந்தார். அதிலொன்றை சித்தி வளர்க்க எடுத்துச்சென்றார். சிறிது காலம் கழித்து வளர்ப்பதற்கான சூழல் இல்லையென திரும்ப அக்குட்டியை விட்டுச்சென்றார். இரண்டு குட்டிகளும் ஒன்றைப்போலவே இருப்பதால் என் தங்கைக்கு அடிக்கடி சந்தேகம் வரும் சித்தி விட்டுச்சென்ற குட்டி எதுவென. இத்தொகுப்பை வாசித்து முடிக்க நானும் என் தங்கையின் நிலையில்... கே.வி.ஜெயஸ்ரீ தமிழில் எழுதிய கதைகளா மொழிபெயர்த்த கதைகளாவென... நெருக்கமான நிறைவான மொழியக்கம் செய்துள்ளார் கே.வி.ஜெயஸ்ரீ.

அல்ஃபோன்சாம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்
பால் சக்காரியா - தமிழில்-கே.வி.ஜெயஸ்ரீ
வம்சி புக்ஸ், 19டி.எம்.சாரோன், திருவண்ணாமலை. விலை-100.