Wednesday, December 18, 2013

வறண்ட நீர்த்துளிகள்...



 
தொழிற்சாலை ஒன்றில் இயந்திரம் பழுதடைந்து விடுகிறது. சரிசெய்யும் பிரிவில் இருந்த வேலையாள் மூன்று நாள் விடுப்பில் சென்றிருந்தார். மற்றைய வேலையாட்கள் முயற்சிக்கிறார்கள். ஒரு பொழுதே கழிய சரிசெய்ய இயலவில்லை. நிர்வாகத்தின் அழுத்தம் தாளாது காண்ட்ராக்டில் பழுது நீக்க ஆட்கள் வருகிறார்கள். அவர்களாலும் இயலாது போக நிர்வாகம் பெரும் பதற்றமாகிவிடுகிறது.

விடுப்பு முடிந்து வழக்கம் போல் வேலைக்கு வருகிறார். அவரது உயர் அதிகாரி  மூன்று நாளாக நிகழ்ந்ததைக் கூறாமல் அந்த இயந்திரத்தின் பெயரைக்கூறி பழுது ரிப்போர்ட் வந்திருக்கு போய் பார்த்து வாவென ஆனையிடுகிறார். இவரும் சென்று பார்த்து ஒரு மணி நேரத்திற்குள் பழுது நீக்கிவிடுகிறார். இயந்திரம் உற்பத்திகளை பிறப்பிக்கிறது. நிர்வாகம் இயல்பாகிறது.

இப்படியான தொழிலாளர்கள்  ஒவ்வொரு தொழிற்சாலையிலும் நிறைய்ய உண்டு. ஒவ்வொருவரும் தனக்கான தனித்திறன்களோடுதான் பணியாற்றுகிறார்கள். அரசின் கொள்ளை (கொள்கை) மாற்றத்தால் உலகமயமாக்கல் வருகிறது. அதன் பாதிப்பு வெகு விரைவாகவே தொழிற்சாலைகளுக்குள் ஆபத்தினை உண்டாக்குகிறது. ஒரு பொருளின் உற்பத்தியில் 10 இயந்திரம் இருப்பின் 10 வேலையாட்கள்  இருப்பார்கள். ஆனால் வளர்ச்சியால்10 இயந்திரங்களை இயக்க ஒன்றிரண்டுபேர் போதுமானதாக இருக்கிறது. மீதி ஆட்கள் விருப்ப ஓய்வு கட்டாய ஓய்வு எனும் பெயர்களில் வெளியேற்றம் நிகழ்கிறது. தனிமனித தேவையும் திறமையும் பலனற்றுப்போகிறது. வெளியேறிய சிலர் வேறுவேறு தொழில் செய்து பிழைக்கிறார்கள். சிலரோ மன அழுத்தத்தால் மதுப்பழக்கத்திற்கு ஆளாகிட, காலப்போக்கில் மதுவே உணவாக மாற்றம்கொள்ள அவர்களது குடும்பம் பெரும் சிக்கலுக்குள்ளாகிறது.

நண்பர் ரகுபதி மிகத் தேர்ந்த எலக்ட்ரீசன். அவரும் ஆட்குறைப்பிற்கு ஆளாகியது பெரும் அதிர்ச்சியானது.  நிர்வாகத்தின் நோக்கத்திற்கு திறமை, திறமையின்மை என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவர்களது நோக்கத்தில் வெற்றிகொள்வது மட்டுமே அவர்களுக்கு இலட்சியம். பாதிப்பிற்கு உள்ளான நண்பர் பெரும் குடிகாரராக மாறினார். அப்படி மாறியிருக்கத் தேவையில்லைதான். அவரைத் தேடி ஓசூரில் சிறுதொழில் நடத்தும் முதலாளிகள் அலைந்துகொண்டே இருப்பார்கள்.  எவ்வளவு போதையில் இருந்தாலும் டெஸ்ட்டரை கையில் பிடித்தால் பிதாமகனாகிவிடுவார். பிரச்சினை சரிசெய்யப்பட்டதும் மீண்டும் போதை மனநிலைக்குத் தயாராகிவிடுவார். ஒரே மாதிரியான சுழற்சி, பாதுகாப்பான வேலை என்ற மனநிலையில் பெரும் கட்டத்தை நமக்கு நாமே போட்டுக்கொள்வதால் சூழல் மாற்றம் கொள்ள புதிய சூழலுக்கு தன்னை தகவமைக்காமல் நொடிந்து போகிறார்கள் பெரும்பாலானோர். வீதியில் டீக்கடை, கபாப் கடை, வடை போண்டா கடையென எதையாவது செய்து வாழ்வை மீட்டெடுக்கும் தொழிலாளிகள் ஓசூரில் நிறைய்ய உண்டு. ரகுபதி போன்று சிக்கிச் சிதைந்த தொழிலாளிகளும் நிறைய்ய...

பனி முடிய வீட்டிற்கு செல்லும்போது ஏதாவது மூலையில் யாராவது வீழ்ந்து கிடக்க மனம் பதற்றம் கொள்ளத் தொடங்கிவிடும் ஐய்யோ ரகுபதியாக இருக்கக் கூடாதென. நிறைய்ய நாட்கள் அப்படி கிடந்திருக்கிறார். தூக்கி சென்று வீட்டில் விட்டிருக்கோம். நம்பிக்கையூட்டும் சின்னஞ்சிறு நீர்த்துளி கூடவா இவரது வாழ்வில் இல்லாது வறண்டபோயிருக்குமென தூக்கம்கெட்டு யோசித்து கிடந்ததுண்டு. ஓசூரில் தொழிலாளிகள் ஆளுமைகளோடு இருந்த காலங்களில் தொழிற்சங்கக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்ததுண்டு. பெரும் வெற்றிகளையும் நியாயங்களையும் அடைந்ததுண்டு. ஆனால் நடப்பு காலங்களில் தொழிற்சங்கம் பெரும் சவாலை சந்திக்கிறது. கோரிக்கைகளை வைத்து போராடி வெற்றி கொள்வது என்பது பெரும் கனவாகிவிட்டது. தற்சமயம் நிர்வாகத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்து ஒன்றிரண்டு பலன்களை மட்டுமே அடைய முடிகிறது. நிர்வாகம் அழித்து அழித்து போடும் கோடுகளில் வரிசை குலையாது ஒழுங்காக நடக்கவைக்கும் வேலையை தொழிற்சங்கள் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பெரும் அவலம்தான். எல்லாவற்றிற்குமான நியாயங்கள் கற்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மே-1ம் மிட்டாய் சப்பும் சம்பிராதய தினமாக மாறிக்கொண்டிருக்கிறது.

நன்றி: மலைகள். காம்

Tuesday, December 3, 2013

நன்றி: உயிர் எழுத்து

கிளி பச்சை நிற தேவதை

பார்வையிடுவோரின் நினைவில்
இலைகளை உதிர்த்து
ஆங்காங்கே நின்று கொண்டிருந்தன
மரக்கட்டைகள் உயிரற்று
வேலிகளாக குரோட்டன்ஸ் சூழ்ந்திருக்க
நிலத்தையும் தங்களோடு சேர்த்து
விளையாடிக் கொண்டிருந்தனர்
பெரும் சப்தத்தால்
எல்லோரையும் சூழச் செய்தவள்
கண்களை இறுக மூடச்சொல்லி
கிளிபச்சை நிற தேவதையானாள்
தன் புன்னகையால் வசீகரித்து
தேவைகளை கேட்டறிந்தவள்
சொற்களை பிறப்பித்து பொம்மைகளாக்கி
கையளித்து மறைந்தாள்
அவரவர்களும் தன் பொம்மைகளோடு
உரையாடியபடியே கலைந்தனர்...

நட்சத்திரத்தை அறையுள் அடைத்தவள்

பாட்டியிள் வீடு சென்று
பூப்போட்ட பம்பரம் எடுத்து வரவும்
சின்ன தாத்தா தோட்டத்தில்
மர உச்சியமர்ந்து கொய்யா தின்றிட
ஐந்து - சீ-யில் படிக்கும்
ஆனந்தை கிள்ளி வைக்க
ஹெட்மிஸ் வீடு அடைந்து
தலை வீங்க கொட்டு இட
குளத்தங்கரை செல்லியம்மன்
தலையிலிருக்கும் சிகப்புக் கல் தோண்ட
விளையாட தர மறுக்கும்
மூன்று - பி- அருணாவின்
கார் பொம்மையை காணாமலடிக்க
நட்சத்திரம் ஒன்றை பிடித்து
அறையுள் ஒளித்து வைக்கவென
பட்டியலிட்டபடியே இருந்தாள்
உடலில் முளைத்த சிறகுகளுக்கு
முத்தமிட்டபடி...

பூ அரவம்

புதர் நிறைந்த காடொன்றை
செப்பணிட்டுக் கொன்றிருந்தவர்கள்
விடுகதைகளுக்கு விடையை தேடி
களைப்பகற்றிக் கொண்டிருந்தனர்
அய்யோ அரவமென அலறியவனின் திசைநோக்க
வெண்ணிறத்தில் நீண்ட உடலை மடக்கி
தலை தூக்கி நின்றது
அடித்திடலாமா விட்டுடலாமாவென்ற
விவாதங்கள் நிகழ்ந்தபடி இருக்க
பாம்பு தன் வாயிலிருந்து
பூக்களை உதிர்த்தது
பணிந்து கலைந்தனர்
கனவை கேட்டவர்கள் களித்து
இனி நல்லகாலம் உனக்கென்றார்கள்...

மாயமுட்டை

கண்கள் திறப்புகொள்ள அதிர்ந்தேன்
எனதறையின் மூலையில்
சற்றே பெருத்த முட்டை
இடும் விலங்கினம் ஏதமற்றிருக்க
கல் விழுந்த குளமானேன்
பூனை ஒருபோதும் முட்டையிடாது
உலகறிந்த உண்மை
ஏற்கனவே வீட்டில் வளர்த்த
கோழியின் உருவம் உயிர்பெற்றது
அடிக்கடி சுத்தம் செய்ய
நீர் வறண்ட வீடானதால்
விற்று தொலைத்துவிட்டோம்
அறையின் கதகதப்பு
முட்டையிட ஏதவாக
இருக்கக் கூடுமென நினைத்த கணம்
ஆசனவாய் இலேசாக வலிக்கத் தொடங்கியது...

யாசகம்

கண்ணாடியிலிருந்து வெளிவந்த உருவம்
என்னைப்போலிருக்க நெருங்கினேன்
நீர்கொட்ட கலைந்த ஓவியமாக
உருவற்ற முகமாக இருக்கத் தயங்கினேன்
கைகளை இறுகப் பிடித்தது
காதலியின் முதல் தொடுதலை நினைவூட்ட
காய்ச்சல் ஏற்பட்டது உடலுக்கு
நடுங்கும் கைகளும் துடித்த உதடும்
எதையோ கேட்க முற்பட
தேவனானேன் நிவர்த்திக்க
திறப்பிற்கு வழியற்று
நிறைந்த மூத்திரப்பையின் வலியோடிருக்கிறேன்
அவசரமாக காட்சியாக்க வேண்டும்
விரைவில் உறங்கச் செல்லென யாசித்தது
கனவு..

நன்றி: உயிர் எழுத்து

Friday, November 22, 2013

உடல் தகிக்கும் வெப்பக் காற்று...


ராஜா வீட்டு நாய் சிம்மாசனம் ஏறுதுன்னு
வண்ணான் வீட்டு நாய் வெள்ளாவியிலே ஏறலாமா...

இந்த சொலவடையை நினைவூட்டும் விதமான உரையாடல்கள் தீபாவளியை ஒட்டி நிகழ்வுவதுண்டு.

நேரடி உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலைகளும், அவைகளுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் சிறுசிறு தொழிற்சாலைகளும் கலவையாக இருக்கும் ஓசூர் போன்ற தொழில் நகரங்களில் வாழுபவர்களுக்கு தீபாவளி ஏற்படுத்தும் மனநிலை வேறுமாதிரியானவை...

பெரிய தொழிற்சாலைகளில் வேலைபார்ப்பவர்கள் என்ன கார் வாங்கலாம், என்ன மாதிரியான நகை வாங்கலாம், எங்கே வீட்டுமனை வாங்கலாம், இருக்கும் வீட்டில் செய்யவேண்டிய மாறுபாடுகள்(வாஸ்துக்காகவும்) என விரிவுகொள்ளும் உரையாடல்கள் நிகழும். அதற்காக அங்கெல்லாம் லட்சக் கணக்கில் போனஸ் தருகிறார்கள் என தப்பர்த்தம் கொள்ளவேண்டும். இருபத்தி ஐந்தாயரத்திலிருந்து அறுபதாயிரம் வரை கொடுப்பார்கள். உற்பத்தி, விற்பனையின் சதவிகிதம் மற்றும் தளர்வுகொள்ளாது போராடிக்கொண்டே இருக்கும் தொழிற்சங்கத்தின் உழைப்பு இவையே தொகையை நிர்ணயிக்கும். ஏற்கனவே இருக்கும் சேமிப்பு, அல்லது வாங்கும் கடன் இதனோடு வரப்போகும் போனஸையும் சேர்த்துத்தான் மேற்கண்ட உரையாடல்.

இப் பெரிய நிறுவனங்களின் சம்பளம், போனஸ் தொகை குறித்து பேசிப்பேசி ஏக்கப்பெருமூச்சுவிட்டு என்றாவது அத்தொகையில் பாதியாவது வாங்கிட மாட்டோமா என்ற கனவுகளோடு வாழும் தொழிலாளர்களிடையே இருக்கும் டூ வீலரை சர்விஸ் விடவேண்டும், அடகு வைத்த செயினை மீட்கவேண்டும், சொசைட்டி லோனிற்கு கொஞ்சமாவது அசல் கட்டவேண்டும், இரண்டு பாக்சிலிருந்து மூன்று பாக்ஸ் பட்டாசு கேட்கும் மகனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் இதுபோன்ற உரையாடல்கள். இரண்டு மூன்று வருடம் போனஸ் வாங்காமல் இருந்தாவது நாமும் ஒரு முறையாவது முப்பதாயிரம் போனஸ் வாங்கவேண்டும் எனச் சொல்லும் விரக்தியான உரையாடலுக்கும் பஞ்சமில்லை.

போன ஆண்டு கொடுத்த தொகையைவிட எப்படியும் இரண்டாயிரமாவது சேர்த்து வரும் என நம்பிக்கையின் கணக்கிற்கு பெரும் ஆசை பட்டியலை தயாரித்து வைத்திருக்கும் தொழிலாளிகளின் மனநிலையை காலம்தாழ்த்தி ஐந்தாறுமுறை பேச்சுவார்த்தை நிகழ்த்தி போன ஆண்டு கொடுத்த தொகையையாவது இந்த ஆண்டு கொடுத்தால் போதும் என்று தொழிற்சங்கம் கெஞ்சிக் கூத்தாடி வைக்கும் நிர்வாகம்.

போட்டு வைத்திருக்கும் பட்டியலை சப்தம் இல்லாமல் ஒவ்வொன்றாக அழித்துக்கொண்டிருக்கும் மனதோடு தீபாவளி பண்டிகையை எப்பாடு பட்டு கடக்கப்போகிறோமென யாரிடம் எதை வைத்து கடன் வாங்க வேண்டுமென்ற கணக்கிடலுக்கு தயாராகும். 8400 ரூபாயை விட அதிகமாக வாங்கும் ஒவ்வொரு ரூபாயிக்கும் பெரும் பாடும் பெரும் துயரமும் உண்டு.

உடன் பணிபுரியும் நண்பரின் மகன் திருமனத்திற்கு போனபோது இந்த ஆண்டு போனஸ் பத்தாயிரம் வாங்கிவிட்டோம் என்று பெருமைபொங்க ஒரு தொழிலாளி கூறினார், அப்பெருமிதம் சில கணங்கள் கூட நீடிக்கவில்லை அடுத்து தீபாவளிக்குள் தான் ஓய்வுபெற போகிறேன் என்றார். இன்னும் இரு ஆண்டுகளாவது சர்வீஸ் இருக்கக்கூடாதாவென அவர் வெளியேற்றிய வெப்பக் காற்றில் உடல் தகித்தது. பெரும்பாலான தொழிலாளிகளின் நிலை இதுவாகத்தான் இருக்கு. ஓய்வுக்காலம் வரையும் ஒருவன் வேலை பார்த்து போனஸ் பத்தாயிரம் வாங்கமுடியாத அவலச் சூழல்தான். கூடவே விவசாயிகள், விவசாயக்கூலிகளுக்கு யார் என்ன போனஸ் தருகிறார்கள் என்ற கவலையும் ஏற்படாமலில்லை. 25 ஆண்டுக்கு மேல் ஒரே தொழிற்சாலையில் என்றாவது நம் வாழ்வில் மகிழ்வூட்டக்கூடிய தருணத்தை ஏற்படுத்த நல்ல சம்பளம் முதலாளி கொடுத்துவிடுவார் என எதிர்பார்த்து எதிர்பார்த்து உழைத்துக் கிடப்பவனை கழிவுகளோடு கழிவாக வெளியேற்றும். உண்மை அறிந்தும் முன்மாதிரிகள் இருந்தும் வேறு வழியற்று இன்னும் தொழிற்சாலை கேட் முன் காத்துக்கிடக்கும் துயரத்தை என்ன சொல்ல...

சங்கு ஊத வேலை ஆரம்பித்து மறு சங்கில் சாப்பிட்டு அடுத்த சிப்ட் துவங்க ஒலிக்கும் சங்கில் வெளியேறி சங்கொலியின் கட்டளைக்கு உழைத்து உதிரும் தொழிலாளர்களின் நிறைவேறாத போனஸ் கனவு இந்த ஆண்டும் இந்த தீபாவளியிலும்...

nantri:malaigal.com

Monday, November 4, 2013

அம்மாக்கள்...

வாழ்ந்தோம் பெரும் வாழ்வென
நினைத்த கணத்தில்
பழுக்கத் துவங்கினாள்
தன்னில் பிரிந்த விழுதொன்று
பற்றற்று அலைவது
பெரும் பாரமாகியது
படையலிட்டு வேண்டியும்
பலனற்றுப் போக
மண்ணைத் தூற்றி காறி உழிழ்ந்தாள்
வேறு வழியற்று அப்பாதை செல்ல
முகம் கொடுக்காது கடந்தாள்
எனது பாடுகளும் வீணாகினவென
கனவில் கண்ணீர் வடித்தார்
மனம் இறங்கியவள்
மன்னித்து பூசையிட
குளிர்ந்தார் கடவுள்
ஆயினும் அவள்
சதா புலம்பியபடியே...
*

துணை வானம்

குழந்தை தவழ்ந்தது
தாயும் தவழ்ந்து தூக்கினாள்
வேடிக்கையில் பேசியபடி இருந்தனர்
நிலாவும் இருந்தது
நட்சத்திரங்களும் மின்னின
நாம் கண்டபடி இருக்கும்
நிலவும் நட்சத்திரமும் இதுவல்ல
பகலில் காணும் சூரியனும் அப்படியே
உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
மாலை பொழுதொன்றில்
உரையாடலை துவங்கினாள் சிறுமி
யானைக்கு யார் துணை என்றாள்
இன்னொரு யானைதான் என்றேன்
காக்காவிற்கு
மற்றொரு காக்கா
குருவிக்கு
வேறு குருவி
இந்த மரத்துக்கு
அதோ அந்த மரம்
அப்ப வானத்துக்கு
மௌனித்திருந்தேன்
அன்றுதான் ஒரு தாளில் வரைந்து அனுப்பினாள்
துணை வானம் ஒன்றையும்
ஒரு நிலா ஒரு சூரியன்
நிறைய்ய நட்சத்திரங்களையும்
இப்பொழுது யாவரும் காண்பது
அவள் அனுப்பிய துணைகளைத்தான்...
   
nantri:malaigal.com